எங்கெங்கு காணினும் சக்தியடா

எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

 

கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!

 

காளை ஒருவன் கவிச்சுவையைக் – கரை

காண நினைத்த முழு நினைப்பில் – அன்னை

தோளசைத்தங்கு நடம்புரிவாள் – அவன்

தொல்லறிவாளர் திறம் பெறுவான் – ஒரு

 

வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த

வைய முழுவதும் துண்டு செய்வேன் – என

நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை

நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’

– பாவேந்தர் பாரதிதாசன்