ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?

நடந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பெற்ற இன்ஜினியரிங், எதிர் கட்சியாகும் தகுதியையும் இழந்தது. இன்ஜினியரிங்கின் இந்த தோல்விக்கு வேலையின்மை, தரமற்ற கல்லூரிகள் போன்ற காரணங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி அலையே காரணம் என்று கூறப்படுகிறது.இதுதான் இந்த ஆண்டு உயர் கல்வி பயில இருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலை.

ஏன் இன்ஜினியரிங் படிக்கக் கூடாது? என்று கேட்டால் இந்த இரண்டு காரணங்களை மட்டுமே கூற முடியும். ஆனால், ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற கேட்டால் 5 காரணங்களை முன்வைக்க முடியும்.

 

சிக்கல்களை தீர்க்கும் திறன்

பொறியியலின் அடிப்படை கணிதம். எந்த துறையாக இருந்தாலும் சரி மாணவர்கள் கொஞ்சம் அதிகமாக கணக்கோடு விளையாட வேண்டியிருக்கும். நான்கு ஆண்டு படிப்பில் பொறியியலுக்குத் தேவையான அடிப்படை கணிதத்திலிருந்து துறை சார்ந்த பாடங்கள் வரை கணக்கு போடுவதில் தேர்ந்த அறிவுடையவர்களாக முடியும். கணிதத்தை விட மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி இருக்கிறது. இந்த அறிவு தொழில் நுட்பம் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் அளவுக்கு மாணவர்களின் திறமையை வளர்க்கிறது. இதனை ‘ப்ராப்ளம் சால்விங் நேச்சர்’ ( Problem solving nature) என்று கூறுவார்கள்.

இண்டர்வியூவில் ஆப்டிட்ய்யூட் என்ற எழுத்துத் தேர்வு பகுதி இடம் பெறுவதன் முக்கிய காரணமே, மாணவர்களின் ‘ப்ராப்ளம் சால்விங்’ திறனை அறியத்தான். இது மாணவர்களின் திறனை அறிய முக்கிய கூராக கருதப்படுகிறது. பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை செய்யும் ஒருவருக்கு, இத்திறன் அதிகமாக இருக்கும். வேலையில் மட்டும் இல்லாமல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் இவர்களுக்கான திறன் சற்று அதிகமாக இருக்கும் என்றே கூறலாம்.

வேலைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொறியியல்…

முடிவெடுத்தல்

இன்ஜினியரிங் படிப்பதால் ஒரு மாணவனுக்கு வாழ்கையில் முக்கியமான தகுதியான டிசிஷன் மேக் திறன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முக்கிய முடிவும் நம் வாழ்க்கையின் பாதையையே மாற்றக் கூடியதாக இருக்கும். இதேதான் இன்ஜினியரிங்குக்கும். பிரச்னை என்ன என்பதை கண்டரிய Problem solving nature தேவை என்றால், அதற்கான சரியான தீர்வை தேர்ந்தெடுப்பதில் உதவுவது டிசிஷன் மேக்கிங் திறன். உலகில் பலரால் எடுக்கப்பட்ட சில நல்ல முடிவுகளே, முன்னேற்றத்துக்கான பாதையாக இருப்பதை நாம் காணலாம்.

வேலையில் ஒருவர் எடுக்கும் முடிவு அந்த நிறுவனத்தை உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம் அல்லது பதாளத்திலும் தள்ளலாம். ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் நாலாபக்கமும் நம் மூளை செயல்பட வேண்டும். முடிவெடுப்பதையே வேலையாகக் கொண்ட ஒரு நல்ல இன்ஜினியர், முடிவெடுப்பதில் தேர்ந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. வேலையில் முடிவெடுத்து பழகிய ஒருவர், வெளியுலகில்  எடுக்கும் முடிவும், நாலாபக்கமும் யோசித்து தீர்க்கமான முடிவாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம்.

இன்ஜினியரிங் – படிப்பு அல்ல பழக்கம்

 

க்ரியேட்டிவிட்டி

ஒரு கணினி திரைக்குள் உலகைக் கொண்டு வருவது ஒரு இன்ஜினியரால் மட்டும்தான் முடியும். அன்றாடம் நம் வீடு முதல் ஸ்பேஸ் வரை பயன்படுத்தும் பல தொழில் நுட்பங்கள் எதார்த்தத்தை தாண்டிய சிந்தனைகளின் உருவாக்கமே. ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட ஒருவரால்தான் அதை முழுமையாக பயன்படுத்துவதற்கான வழிகளையும் வகுக்க முடியும். ஒரு இசை அமைப்பாளரால் டிஜிட்டல் சவுண்ட் சிஸ்ட்டத்தை இயக்க முடியுமே தவிர அதை உருவாக்க முடியாது. ஆனால், இசை பயிற்சி இல்லாத ஒரு இன்ஜினியரால் அதை உருவாக்க முடியும். நாளை செவ்வாய் கிரகத்துல இடம் வாங்கி வீடு கட்டனும்னாலும் நீங்க ஒரு இன்ஜினியராதான் பிடிக்கனும்.

இன்ஜினியருக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்.

 

சிறந்த தொழில் முனைவோர்

இ-ஷாப்பிங் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனங்கள் ஃப்லிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல். பல ஆயிரம் கோடிகளில் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனங்களை தொடங்கியவர்கள் பொறியியல் பட்டதாரிகள். இன்னும் உங்கள் ஊரில், தெருவில் ஒரே ஒரு கம்ப்யூட்டரை வைத்து சம்பாத்தித்து வரும் இன்ஜினியர்கள் ஏராளம். எம்.பி.ஏ. படித்தால் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும் என்பதில்லை. பொறியியல் படித்த ஒருவரால்தான், தன் தயாரிப்பு எப்படி பயன்படும், எங்கே யாரிடம் விற்பது என்று தெரியும். மத்திய அரசு கூறிவரும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் முக்கிய பங்கு இன்றைய இன்ஜினியர்களோடதாகத்தான் இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.

தன் கையே தனக்குதவி

 

வேலை வாய்ப்பு

தம்பி என்னப்பா படிக்கப் போற? இன்ஜி… சொல்லி முடிக்குறதுக்குள்ள ‘அது படிச்சா வேலை கிடைக்காதாம்ல’ என்று யாராது சொன்னா, தயவு செஞ்சு அதை நம்பாதீங்க. உலக அளவுல 2020-ம் ஆண்டில் பணியாளர்களுக்கான தேவை 2 பில்லியனாக இருக்கும் என்கிறது ‘நாஸ்காம்’ . அப்போ ஏன் பொறியியல் மாணவர்கள் வேலை இல்லாம இருக்காங்கனு நீங்க கேள்வி கேக்கலாம். வேலை வாய்ப்பு இருக்கு. அதுக்கு ஏத்த திறமையான படித்த பட்டதாரிகள் இல்லை என்பதுதான் உண்மை. வருஷா வருஷம் வெளிநாட்டு நிறுவனங்களால், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு இந்தியர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கபடுவது எல்லோரும் அறிந்த விஷயம். வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் எல்லா பொறியியல் பட்டதாரிக்கும் வேலை உறுதி.

சொல்லக் கூடாதது – வேலை இல்லை

சொல்ல வேண்டியது – இன்ஜினியரிங் நல்லது

 

குறிப்பு:

மற்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த திறமைகள் இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால், நல்ல இன்ஜினியருக்கு இந்த திறமைகள் நிச்சயம் இருக்கும்.