சரசுவதி தோத்திரம்

மகாகவி பாரதியார் எழுதிய‌ சரசுவதி தோத்திரம் . (நொண்டிச் சிந்து)

எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் – கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் – கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே – அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன்.

 
மாதமொர் நான்காநீர் – அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவிட்டீர்.
பாதங்கள் போற்றுகின்றேன் என்றன்
பாவமேலாங்கெட்டு ஞான கங்கை
நாதமொ டெப்பொழுதும் – என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்! – அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர்!

 

கண்மணி போன்றவரே! – இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும் – சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்
வண்மையில் ஓதிடுவீர்! – என்றன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்!
அண்மையில் இருந்திடுவீர்! – இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ?

 

தானெனும் பேய்கெடவே, – பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெனும் ஒளிபெறவே, – நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே,
வானெனப் பொழிந்திடுவீர்! – அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்! – நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்!

 

தீயினை நிறுத்திடுவீர்! – நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே – உம்மை
மதிப்பது மறந்தனன் பிழைகளெல்லாம்
தாயென உமைப்பணிந்தேன் -பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்;
வாயினிற் சபதமிட்டேன்; – இனி
மறக்ககிலேன் எனை மறக்ககிலீர்!

– பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.