தாயின் மணிக்கொடி பாரீர்

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

 

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்

உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே

பாங்கின் எழுதித் திகழும் -செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

 

பட்டுத் துகிலென லாமோ?-அதிற்

பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிகுந்தடித்தாலும் -அதை

மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

 

இந்திரன் வச்சிர மோர்பால்-அதில்

எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)

மந்திர நடுவுறத் தோன்றும் -அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

 

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்

நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

 

அணியணி யாயவர் நிற்கும்-இந்த

ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ?

பணிகள் பொருந்திய மார்பும் ‍விறல்

பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்)

 

செந்தமிழ்நாட்டுப் பொருநர் -கொடுந்

தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர்

சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின்

சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

 

கன்னட ரொட்டியரோடு -போரிற்

காலனு மஞ்சக் கலக்கு மராட்டர்

பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும்

பொற்புடையார் இந்துஸ்தானது மல்லர். (தாயின்)

 

பூதல முற்றிடும் வரையும் -அறப்

போர்விறல் யாவும் மரப்புறும் வரையும்

மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில்

மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

 

பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப்

பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார்

துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத்

தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

 

சேர்ந்ததைக் காப்பது காணீர் – அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

– சுப்பிரமணிய பாரதியார்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.