நூலகம் செல்வோம்

ஞாயிறு காலையில் நூலகம் சென்றேன்
நல்ல தமிழில் நூல்பல கண்டேன்
ஆயிரமாயிரம் தலைப்புகள் உடனே
அறிஞர்கள் பெயருடன் இருப்பதைக் கண்டேன்

பாயிரமாகவே பாடல்கள் கொண்ட
பைந்தமிழ் கவிதைகள் பலவும் கண்டேன்
வாயினில் அமிழ்தம் விழுந்ததைப் போல
வாழும் வகைசொல்லும் எளிமையைக் கண்டேன்

திறனைப் போலவே தகித்திடும் உண்மை
தீந்தமிழ் உரைநடை நூல்களும் ஆங்கே
சேயினை காக்கும் தாய்போல் நமக்கு
சிறந்ததைக் கூறிடும் மொழியினைக் கண்டேன்

மாயிருள் அகன்றிட மனதினில் தெளிவுற
மாணவ மணிகளே வாருங்கள் நூலகம்
காயினை ஒத்த நம்மனம் பழமென
கனிந்திட தினமும் நூலகம் செல்வோம்

  • இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.