புவியினைக் காக்க

வானில் ஏறி வட்டமிட்டு விளையாடலாமா? – அங்கு
வந்து போகும் சூரியன் போல விரைந்து ஓடலாமா?
மேனியெங்கும் பஞ்சு சுமக்கும் மேகமாகலாமா? – அதனை
மெல்லத்தொட்டு தழுவும் தென்றலாக‌ மாறலாமா?

வேனிற்கால மாலைப்பொழுதின் வண்ணமாகலாமா?
விரிகடல்மீது தவழும் நிலவு போல மாறலாமா?
ஆண்பெண் பேதம் இல்லா விண்மீன் போல மின்னலாமா? ஆயிரமாயிரம் சேர்ந்தே ஒளிர்வதைப் போல ஒளிரலாமா?

தேனின் இனிய மழைநீர் பொழியும் தூறலாகலாமா?
திறனுடன் முழங்கும் இடியினைப் போல நாமும் மாறலாமா?
கூனிக்குறுகுதல் இல்லா மின்னலைப் போல மின்னலாமா?
கூர்மை வலிமை நாமும் பெற்றே வாழ்வில் உயரலாமா?

மானிடரான நாமும் இயற்கை போல மாறலாமா? – பிறர்
மகிழ்வதற்கென்றே வாழ்வைக் கொஞ்சம் மாற்றலாமா?
பேணிட வேணும் மானுட நேயம், புரிந்து கொள்ளலாமா?
பேரிடர் இல்லா புவியினைக் காக்க புறப்படலாமா?

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.