பூண்டு வடாம் / வடகம் செய்வது எப்படி?

பூண்டு வடாம் / வடகம் சுவையான, மணம் மிகுந்த உணவுப் பொருளாகும். இதனை கோடை காலத்தில் தயார் செய்து சேமித்து தேவைப்படும் போது இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்சில் வைத்தும் கொடுக்கலாம்.

 

சுவையான பூண்டு வாடம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப் (¼ படி)

வெள்ளைப் பூண்டு – 20 பற்கள் (பெரியது)

கல் உப்பு – தேவையான அளவு

சீரகம் – ஒரு குழிக்கரண்டி

தண்ணீர் – 8 கப்

 

செய்முறை

முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து அதனை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பின் நறுக்கிய பூண்டினை மிக்ஸியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.

 

அரைத்த வெள்ளைப்பூண்டு
அரைத்த வெள்ளைப்பூண்டு

 

ஊற வைத்த இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கத் தொடங்கவும்.

மாவினைப் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து கொர கொரவென அடித்த வெள்ளைப் பூண்டினைப் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.

மாவினைத் தோண்டுவதற்கு இருநிமிடங்களுக்கு முன்பு தேவையான கல் உப்பினைச் சேர்த்து அரைத்துத் தோண்டவும்.

பின் அரைத்த மாவினை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

 

தோசைமாவுப் பதத்தில் அரைத்த அரிசிமாவு
தோசைமாவுப் பதத்தில் அரைத்த அரிசிமாவு

 

அடிகனமான பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அதனுடன் அரிசி வெள்ளைப் பூண்டு கலவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.

 

கொதிநீரில் அரிசிவெள்ளைப்பூண்டு கலவையைச் சேர்க்கும்போது
கொதிநீரில் அரிசிவெள்ளைப்பூண்டு கலவையைச் சேர்க்கும்போது

 

பின் மாவுக்கலவையுடன் சீரகத்தைச் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

சீரகத்தைச் சேர்த்ததும்
சீரகத்தைச் சேர்த்ததும்

 

மாவு வெந்தவுடன் சிறிது நிறம் மாறி நல்ல வாசனையுடன் கூழ் பதத்திற்கு வரும். இது தான் வாடம் ஊற்றுவதற்கு சரியான பதம்.

 

வடகத்திற்கான பதம்
வடகத்திற்கான பதம்

 

அடுப்பினை அணைத்து வடகம் கூழை இறக்கி விடவும்.

பின் சுத்தமான துணியை வெயில் படும் இடத்தில் விரிக்கவும்.

வடகம் கூழை ஒரு சிறிய ஸ்பூனில் எடுத்து சின்ன சின்ன வட்டமாக படத்தில் காட்டியபடி ஊற்றவும்.

 

வட்டமாக ஊற்றப்பட்ட வடகமாவு
வட்டமாக ஊற்றப்பட்ட வடகமாவு

 

வடகம் நன்றாகக் காயும் வரை வெயிலில் காய விடவும்.

வடகம் நன்றாகக் காய்ந்தவுடன் துணியைத் திருப்பி தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து துணியில் இருந்து பிய்த்து எடுக்கவும்.

பின் ஒரு தட்டில் வைத்து ஈரப்பதம் இல்லாதாவாறு நன்கு காய வைக்கவும். (ஈரப்பதம் இருந்தால் வடகம் கெட்டு விட வாய்ப்பு உண்டு).

வடகம் சுருளக் காய்ந்தும் சுத்தமான டப்பாவில் காற்றுப் புகாதவாறு அடைத்து வைக்கவும்.

சுருளக்காய வைத்த வடகம்
சுருளக்காய வைத்த வடகம்

 

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட வடத்தை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சுருளக் காய்ந்த வடகத்தைப் போட்டு வறுக்கவும். இதனை எல்லா வகையான சாதத்துடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் சீரகத்திற்குப் பதில் ஓமத்தைப் பயன்படுத்தி வடகம் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.