மணித்தக்காளி – மருத்துவ பயன்கள்

மணித்தக்காளி இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். மணித்தக்காளி இலை, இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின் “பி”இ “பி2” சத்து மிகுந்தது.

மணித்தக்காளி இலை வயிற்றுப் போக்கையும் வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும் குணப்படுத்தும்; சிறுநீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும்; தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும்.

மணித்தக்காளி பழம் பேதி மருந்தாகும்; உடலைப் பலப்படுத்தும்; காச நோய், தோல் நோய்கள் தாகத்தைக் குறைக்கும். சிறுநீரை வெளியேற்றும்.

மணித்தக்காளி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. 1.5 மீ வரை உயரமான அதிகக் கிளைகள் கொண்டது. மணித்தக்காளி தாவரத்தில் சிறு கிளைகள் ஒழுங்கற்று கோணலான முறையில் கிளைத்திருக்கும்.

மணித்தக்காளி இலைகள் அகன்ற முட்டை அல்லது நீள்வட்ட வடிவமானவை. மணித்தக்காளி மஞ்சரி ஒரு தொகுப்பில் 7 மலர்கள் வரை காணப்படும். மலர்கள் சிறியவை. வெண்மை நிறமானவை.

மணித்தக்காளி காய்கள், பச்சை நிறமானவை. மணித்தக்காளி பழம் கோள வடிவமானது. கருநீலம் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமானவை.

மணித்தக்காளி பழம்
மணித்தக்காளி பழம்

தமிழகமெங்கும் சமவெளிகள் கடற்கரை ஓரங்கள் முக்கியமாக ஆற்றங்கரைகளில் பரவலாக விளைகின்றது.மேலும் மணித்தக்காளி இலைகள் பழங்களின் முக்கியத்துவம் கருதி வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.

மணத்தக்காளி, மஞ்சரா, மிளகுத்தக்காளி, வாயசம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. மணித்தக்காளி காயை உலர வைத்து பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட மணித்தக்காளி வற்றல் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். மணித்தக்காளி இலை, காய், பழங்கள் ஆகியவை மருத்துவத்தில் உபயோகமாகின்றன.

வாய்ப்புண் குணமாக மணித்தக்காளியின் பசுமையான இலைகளை தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பசுமையான 5 இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இது போல ஒரு நாளைக்கு 6 முறைகள் செய்ய முழுமையான குணம் ஏற்படும்.

மணித்தக்காளி இலைச் சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வர உடல் சூடு குணமாகும்.

நாக்குப் புண், குடல் புண் குணமாக மணித்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டு வர வேண்டும். இந்தக் காலத்தில் காரம் அதிகமில்லாத உணவாகச் சாப்பிட வேண்டும்.

நாக்குச் சுவையின்மையை நீக்கும் தன்மையும் வாந்தி உணர்வைக் கட்டுப் படுத்தும் தன்மையும் மணித்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால் கற்பிணிப் பெண்கள் குறைந்த அளவில் தினமும் வற்றலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மார்புச் சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வற்றலை உபயோகிக்கலாம்.