அவர்கள் – கவிதை

ஒரு காலத்தில் 
அவன் அந்த தெருக்களில் 
நண்பர்கள் புடைசூழ 
நடந்து கொண்டிருந்தான் 

காற்றில் கரைந்த 
அந்த பேச்சுக்கள் 
இன்னும் மிச்சம் மீதி என்று 
ஏதோ அவன் காதில் 
ஒலித்துக் கொண்டிருந்தது 

காட்சியில் தெரியும் மனிதர்கள் 
இன்னும் அங்கே இங்கே என்று 
நின்று கொண்டிருந்தார்கள் 

அன்றைய இரவு 
காற்றில் கரைந்து 
அவர்கள் மேல் போர்த்தியிருந்தது 

நண்பர்கள் புதிய உற்சாகத்திலிருந்தார்கள் 
இளமை வீணாகவில்லை 
ஒளிர்ந்து கொண்டிருந்தது 
நட்பு இறுகியது 
அது வேறு வடிவத்துக்கு மாறியது 

நண்பர்களில் ஒருவன் விலகினாலும் 
அறுந்த மாலை போல் 
மணிகள் சிதறியது 

அவர்களில் ஒருவன் 
தலைக்கு மேலே இருக்கும் 
இருண்ட வானத்தின் 
விண் மீன்களைப் பார்த்தான் 
எப்பொழுதோ அவன் 
அதைக் கடந்து விட்டிருந்தான்

புஷ்பால ஜெயக்குமார்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.