ஆசிரியர் – புதுக்குறள்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர்

 

அறிவுரை வழங்கி அறவுரை விளக்கி

தெளிவுரை தருபவரே ஆசிரியர்

 

அன்புடன் கண்டிப்பும் ஆதரவும் தந்து

மாண்புடன் வாழ்பவரே ஆசிரியர்

 

அறியாமை நீங்கி மாணவர் அறியாமை

நீக்கி செல்பவரே ஆசிரியர்

 

ஏணியாய் ஏற்றி மாணவரை ஞானியாய்

மாற்றி விடுபவரே ஆசிரியர்

 

உண்மை நேர்மை மென்மை கொண்டு

வன்மை இல்லாரே ஆசிரியர்

 

உரம்போல் வீழ்ந்து மரமாக மாணவரை

உயர்த்தி மகிழ்பவரே ஆசிரியர்

 

அறிவு கனிவு துணிவு தெளிவுகொண்டு

எளிமை உள்ளவரே ஆசிரியர்

 

அறப்பணி அறிந்து பிறப்பணி துறந்து

சிறப்புடன் வாழ்பவரே ஆசிரியர்

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.