ஆட்கொண்ட தேவதைதான்…

மொட்டாக இருந்தவள்தான்

மலராக விரிந்தவள்தான்

முழுதாக எனையிங்கு

ஆட்கொண்ட தேவதைதான்…

சிட்டாக திரிந்தவள்தான்

சிறகெனக்கும் தந்தவள்தான்

சீர் அசை யாப்பென்று

வரும் கவிதை தாயவள்தான்…

சுட்டாலும் வெண்சங்காய்

சுகமாயெனைத் தாங்கிடுவாள்

சுடர்மிகவே எரிகின்ற

விளக்கெனவே நின்றிடுவாள்…

வட்டமிடும் துயரங்கள்

விரட்டிடவும் பாட்டிசைப்பாள்

வாழ்வினிலே எந்நாளும்

இன்னிசையே மீட்டிடுவாள்….

பட்டாடை கொண்டவள் போல்

பகட்டாக மின்னிடுவாள்

பலவகையாய் பாவினங்கள்

இசைக்கெனவே தந்திடுவாள்…

ஒடிவரும் வார்த்தைகளில்

ஒய்யாரமாய் இருப்பாள்

ஒவ்வொரு தளைகளிலும்

உணர்வாலே ருசித்திருப்பாள்…

கொட்டிவைத்து குவித்தாலும்

கொலு பொம்மை போலிருப்பாள்

கோடியின்பம் நான்பெறவே

கூடிநின்று பாட்டிசைப்பாள்

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.