ஆல விருட்சம் – கவிதை

ஆல விருட்சமே! நீ ஒரு
பெண்தான்!
பூமித்தாயின் கருவறையில்
உயிர்த்தெழுகிறாய்
விதை ஒன்றில்…

சின்னஞ்சிறு பெண் போல
பச்சை உடுத்திப் பண் பாடுகிறாய்!
பூப்படைந்த பெண் போல
பூத்து மலர் விடுகிறாய்!
கண்ணுக்குத் தெரியாம‌லே…

உறவுகளென உன்னைச் சுற்றி
விழுதுகளை உருவாக்குகிறாய்!
விழுதுகளை தாங்குவதற்கு
வேரென ஊன்றி நிற்கின்றாய்!

முடி நரைத்து, கண் குழிந்து,
தோல்சுருக்கமென்று
வீழ்ந்தாலும், ஓயாது
உழைத்துத் தாங்கும்
முதிர்பெண் போல
இலைகள் பழுத்து உதிர்ந்து
மண்ணில் வீழ்ந்தாலும்
ஆலமரமே நீ ஒரு
பெண்ணென்றே நான்
அடித்துக் கூறுவேன்!
அடையாறில் நின்று இன்னும்
ஆதரவு அளித்துக்
கொண்டிருப்பதால்….

ரோகிணி கனகராஜ்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.