இந்திய நாடாளுமன்றம்

இந்தியாவின் சட்டங்களை இயற்றி இந்திய மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்ற சக்தியாக உள்ள இந்திய நாடாளுமன்றம் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

நாடாளுமன்றம் என்பது மத்திய அரசின் சட்டமன்றத்தைக் குறிக்கும். இது மேல்சபை, கீழ்சபை என இரு சபைகளைக் கொண்டது. மேல்சபை மாநிலங்கள் அவை அல்லது ராஜ்ய சபா என்றும், கீழ் சபை மக்களவை அல்லது லோக் சபா என்றும் அழைக்கப்படுகிறது.

 

மக்களவை (லோக் சபா)

நாடாளுமன்றத்தின் கீழ் அவையான லோக் சபா அல்லது மக்களவை முக்கியத்துவம் வாய்ந்த சபையாகும். இச்சபை உறுப்பினர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தற்போது உள்ள மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 530 உறுப்பினர்களும், யூனியன் பிரதேசங்களிலிருந்து 13 உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

குடியரசு தலைவர் இரண்டு ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தினரை உறுப்பினராக நியமனம் செய்கிறார். இவ்வாறு மொத்தம் 545 உறுப்பினர்களைக் மக்களவை கொண்டுள்ளது.

 

மக்களவை தேர்தலில் போட்டியிடத் தகுதிகள்

மக்களவை தேர்தலில் போட்டியிட கீழ்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

போட்டியிடும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுப் பணியில் சம்பளம் பெறுபவராக இருக்கக் கூடாது.

மனவளர்ச்சி குறைந்தவர்களும், பெற்ற கடனை திருப்பித் தர முடியாதவர்களும் போட்டியிட முடியாது.

 

மக்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம்

பொதுவாக மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு செயல்படலாம்.

பிரதம மந்திரியின் பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையிலோ குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்கலாம்.

 

தேர்தல் முறை

மக்களவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு தனது பார்வையில் தேர்தலை நடத்துகிறது.

மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டு மக்களவைக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

வயது வந்தோருக்கான வாக்குரிமை என்ற அடிப்படையில் 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்களுக்க வாக்குரிமை அளிக்கப்படுகிறது.

மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் மாநிலங்களவை உறுப்பினர்களைவிட இவர்களுக்கு அதிக அதிகாரங்கள் உண்டு.

நிதி மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே கொண்டுவர முடியும். அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகவும், தனித்தனியாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்கள்.

மக்களவையின் தலைவர் சபாநாயகர். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபாநாயகர் இல்லாத காலங்களில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார்.

 

ராஜ்ய சபா அல்லது மாநிலங்களவை

மாநிலங்களவை 250 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களில் 238 உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பு அறிவும், நடைமுறை அனுபவமுடைய 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.

 

மாநிலங்களவை உறுப்பினராகத் தகுதிகள்

மாநிலங்களவை உறுப்பினராக கீழ்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

இவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

நாடாளுமன்ற‌த் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளில் ஊழியராக இருத்தல் கூடாது.

மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பிதர இயலாதவராகவோ இருத்தல் கூடாது.

 

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம்

மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும்.

ஆனால் இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவர் ஆவார். மாநிலங்களவை உறுப்பினர்களால் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

தேர்தல்

மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களை ஒற்றை வாக்கு முறை மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். இது மறைமுகத் தேர்தல் என்றழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது.

 

நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள்

நாடாளுமன்றம் மாநிலங்களவை, மக்களவை என இரு அவைகளைக் கொண்டது. எனவே இந்திய நாடாளுமன்றம் ஈரவை மன்ற முறையைச் சார்ந்தது.

இதன் முக்கியமான பணி சீரிய முறையில் ஆட்சி நடப்பதற்கான முறையில் சட்டம் இயற்றுதல் ஆகும்.

நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக இச்சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

நாடாளுமன்றம் நாட்டின் நிதி நிலைமைக்கு முழு பொறுப்பாகும்.

மைய வரவு செலவு திட்டங்களை தாக்கல்  செய்வதும் வரி நிர்ணயம் செய்வதும் இதன் பணிகள் ஆகும். பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதியைப் பகிர்ந்து அளிப்பதும் அதன் பொறுப்பாகும்.

அரசியலமைப்பு சட்டவிதிகளைத் திருத்தம் செய்வதும், குடியரசுத் தலைவர் மற்றும் உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் நாடாளுமன்றம் பெற்றுள்ளது.

எந்த ஒரு மாநிலத்தின் மீதும் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யவும் குடியரசு தலைவரை நாடாளுமன்றம் அனுமதிக்கிறது.

அமைச்சரவையின் செயல்பாட்டினைக் கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும், கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது.

நாடாளு மன்றத்தில் நம்பிக்கை உள்ளவரை மட்டும்தான் எந்த அமைச்சரவையும் செயல்பட முடியும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.