ஆம் பெண்களே!
இனி ஒரு விதி செய்வோம்!
பொம்பளை சிரிச்சா போச்சு
புகையில விரிச்சா போச்சு
அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பு எதற்கு?
இது எல்லாம் பழைய விதி
இந்த பழைய விதி சற்று மாற எத்தனித்த
இந்த நல்ல வேளையில்
இன்று தேவை புதிய விதிகள்
ஆணுக்கு நிகராய் வேலைக்கு செல்லும்
பெண்ணுக்கு இரட்டிப்பு சுமைகள் இன்று
மகளிரை வேலைக்கு செல்ல
மறுதலிக்காத ஆண்கள் இன்று
வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வதில்
வீம்பு செய்கிறார்கள்!
பகலவன் உதிக்கும் முன் துயில் எழுந்தவள்
பல வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் முடிந்து
படுக்கையறை செல்கையில் மணி நள்ளிரவு!
தாய்மடி சுகம் அறியா குழந்தைகள்!
தஞ்சமின்றி பரிதவிக்கும் தளிர்கள்!
இன்றைய அம்மாக்களின்
இனிய பாச வார்த்தை படி! படி!
பச்சிளம் குழந்தைகளுக்கு கூட
பாலியல் கொடுமைகள் இன்று!
ஆணுக்கு முழு ஆடை
பெண்ணுக்கு அரைகுறை ஆடை என
ஆணை வகுத்த திரைப்பட ஊடகம்!
கிசுகிசுக்களை மட்டுமே
மிகைப்படுத்தும் பல பத்திரிகைகள்!
வரும் கால அப்துல் கலாம்களின்
நேரத்தையும், உயிரையும், உறிஞ்சி குடிக்கும்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்!
இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
இனி இன்றியமையா தேவை?
புதிய மானுட விதிகள்!
புத்துயிர் ஒழுங்கு விதிகள்!
இனி ஒரு விதி செய்வோம்!
சிந்திப்போம்! செயல்படுவோம்!
பெண்ணே புறப்படு! அதன் வழி நடக்க!

கவிஞர் இரா.கலைச்செல்வி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!