உடல் பருமன் – குழந்தைகளின் எதிரி

உடல் பருமன் இன்று உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் உடல்நலக் குறைபாடாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் நோயால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

பெரியவர்களாலேயே சமாளிக்க முடியாத சில உடல் உபாதைகள் உடல் பருமனால் ஏற்படுகிறது எனும்போது, குழந்தைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன், அதனால் அவர்கள் சந்திக்கும் உடல், மன, சமூக ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் அதனைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோர்களின் கவனம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு கட்டுரையே இது.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் சவாலான உடல்ந‌லக் கேடாக உடல் பருமன் நோய் அதிகரித்து வருகின்றது.

2017 மார்ச் வரை நடந்த ஆய்வில், உலகம் முழுவதும் ஐந்து வயதிற்கு குறைவான சுமார் 28 மில்லியன் குழந்தைகள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

அதிலும் குறிப்பாக ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி இந்நோய்த்தாக்கமானது அமைந்துள்ளது.

உடல் பருமன் என்பது, உணவின் மூலம் அதிகப்படியான கொழுப்பானது உடல் முழுவதும் சேர்ந்து, அதனால் உடல் எடை கூடுவது என்பதாகும்.

அதே சமயம் சில நேரங்களில் வளர்சிதை மாற்ற குறைபாடுகளால் கூட உடல் பருமன் கூடும் நிலை ஏற்படும்.

உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்

முதல்நிலைக் காரணங்களாக மூன்று முக்கிய காரணிகள் உடல் பருமன் நோய்க்கு வித்திடுவதாக அறியப்படுகிறது.

அவை உளவியல் காரணங்கள், மரபியல் காரணிகள், சமூக மற்றும் சுற்றுப்புற காரணிகள்.

அதிக அளவில் குழந்தைகள் உணவு எடுத்துக்கொண்டால் உடல் பலம் பெறும்; குழந்தைகள் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்ற எண்ணத்தில், பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான கலோரிகள் கொண்ட கொழுப்புகள் உள்ளிட்ட‌ உணவு வகைகளை திணிக்கின்றனர்.

இது தவறான‌ முறை ஆகும். மேலும் இது மிகவும் ஆபத்தானதும் கூட. இம்முறையை பெற்றோர்கள் கைவிட வேண்டும்.

சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளை கண்டறிந்து, வயதிற்கு ஏற்றாற் போல் குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் அளவை சரியான முறையில் கண்டறிந்து, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பெரும்பான்மையான உடல் பருமனைக் குறைக்கலாம் .

பெற்றோர்களில் ஒருவர் உடல் பருமனாக இருந்தாலும், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு போதிய உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவதும் குழந்தைகளின் உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

உலக சுகாதார நிறுவனமானது 5 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர்பருவத்தினர் ஒரு நாளைக்கு 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரமாவது உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்த ஒருமணி நேர உடற்பயிற்சி என்பது விளையாட்டுகளாலும் நீச்சல் மற்றும் வேறு சில நடவடிக்கைகளாலும் எளிதாக அமைந்து விடுகின்றது.

ஆனால் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு காரணங்களால் உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள் என்பது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதில் குடும்ப சூழ்நிலை மற்றும் சுற்றுப்புற காரணிகள் ஆகியவை தவிர்க்க முடியாத காரணங்களாக அமைந்து விடுகின்றன.

நகர்புறத்தில் வாழும் குழந்தைகளின் பெற்றோர்கள் இதை மிகவும் கவனத்தில் கொண்டு, குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமநிலைப் படுத்தப்படாத ஆரோக்கியமற்ற உணவு, சில நோய்களுக்கான சிகிச்சைக்கான மருந்துகளாலும் உடல்பருமன் ஏற்படலாம்.

முறைப்படுத்தப்படாத வாழ்க்கை முறை, தைராய்டு, பாராதைராய்டு குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, பசிமிகு நோய் ஆகியவற்றாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

உடல் பருமன் விளைவுகள்

குழந்தைகளின் உடல் பருமனை கவனிக்காமல் விட்டால், அவர்கள் வளர வளர, சுவாசப் பிரச்னைகள், குடல் இறக்க நோய், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கொழுப்பு சேருதல் மற்றும் இதய நோய்கள் ஆகியவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமனான குழந்தைகள் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திப்பதை விட, மன ரீதியான பிரச்சனைகளையும் சமூக பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கும் சூழ்நிலை உள்ளது.

உதாரணமாக தாழ்வு மனப்பான்மை, மற்ற சக குழ‌ந்தைகளுடன் விளையாடும்போது கிண்டல், கேலிக்கு ஆளாவதால் தனிமைப்படுத்தப்படும் நிலை ஆகியவை மிகுந்த மனஉளைச்சலையும், அவர்கள் வாழ்வியல் சூழ்நிலையில் மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்தும்.

உடல் பருமனுக்கான இயன்முறை மருத்துவ சிகிச்சை முறைகள் சில உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

இயன்முறை மருத்துவ சிகிச்சையின் நோக்கம்

முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையைக் குறைக்க பயிற்சியளிப்பது

தசைத்தொனியை சரி செய்வது (குறிப்பாக அதிகப்படியான முன் வயிற்றுத் தசைகளை குறைப்பது)

சுவாசத்தை எளிதாக்க பயிற்சியளிப்பது

உடலியக்க மற்றும் மனநிலையை சார்ந்த நிலைகளை மேம்படுத்துவது

உடல் பருமனால் ஏற்படும் நோய்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

இயன்முறை மருத்துவப் பயிற்சிகள்

உடல் எடைக் குறைப்பிற்கு முதன்மையாக அமைவது உடலியக்கப் பயிற்சிகள். அத்தகைய பயிற்சிகளை முறையாக இயன்முறை மருத்துவரின் ஆலோசனையின்படி மேற்கொள்ள வேண்டும்.

அதன்படி, சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சுவாசப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஏரோபிக் பயிற்சிகள் உதாரணமாக எளியமுறை நடைப் பயிற்சிகள், ஜாக்கிங் ஓடுதல், நீச்சல் பயிற்சி ஆகியவை உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கும்.

மேலும் சைக்ளிங், பெண் குழந்தைகளுக்கு ஸ்கிப்பிங், வாலி பால், டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளும் நல்ல பலன் தரும்.

உடல் பருமன் போக்க

பழச்சாறு வகைகள் மற்றும் குளிர் பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் .

துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவு புரதச்சத்து உள்ள உணவை உண்ண வேண்டும்.

குழந்தைகள் உணவு உண்ணும் போது அவர்களுக்கு போதுமான அளவு உண்ண அனுமதிக்க வேண்டும். முழுவதுமாக உண்ண பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது.

தினசரி உடல் செயல்களை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாட அனுமதியுங்கள் .

குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி, கணிப்பொறி மற்றும் வீடியோ கேம் ஆகியவற்றில் நேரத்தை செலவழிக்க அனுமதிக்காதீர்கள் .

உடல் பருமன் ஏற்பட்டுள்ள குழந்தைகள் உடல் எடை குறைய முறையான, சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.

பல்வேறு விளம்பரங்களைக் கண்டு, உடலுக்கு கேடு விளைவிக்கும் சிகிச்சையை மேற்கொள்வதை கவனமாக தவிர்க்க வேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட, சரியான கலோரி கொண்ட, சத்தான உணவு மற்றும் முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை குழந்தைகளின் உடல் எடையைக் குறைக்க உதவும்.

க.கார்த்திகேயன்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy) மற்றும் முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ) மற்றும் மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர்
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.