எண்ணம்

எண்ணிக்கையில் அடங்காத
வார்த்தைகளின்
நுண்ணிய மௌனத்தில்
அர்த்தங்கள் விடுபட்டுப் போகின்றன‌

கணக்கற்றது பற்றி
கவலையேதும் இல்லை
எல்லோரும் ஆமோதித்தால்
அது இந்த பூமியில் தழைக்கிறது

புரிதலின் கணக்கு
ஒன்று போல் இருக்க
முடியாதது வெகு இலகுவாக
முடிவுக்கு வருகிறது

முடிவற்றது ஆனால் அது
ஒன்றே ஒன்று தான்
மொழியின் கூட்டமைப்பில்
நிர்ணயம் செய்யப்பட்டு
சுண்டி வருகிறது வார்த்தை

எதிர்காலம் கண்டுணரும் இடத்தில்
மனிதன் மறதியில் அலைகின்றான்
அவனுக்கென்று விதிக்கப்பட்டதில்
அவனாகவே போய்ச் சேர்கிறான்

மிகக் குறைந்த ஒலியில்
பேசும் மனதை
அவன் கேட்பதற்கு நியாயமில்லை
என்பதால் அவன்
முன்னும் பின்னும் நகர்கிறான்

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.