எதிர் வீட்டு ஜன்னல்

எதிர்வீட்டு ஜன்னல்

விஜயின் வீட்டுக்கு எதிரே உள்ள அடுக்குமாடி வீட்டு கட்டிடத்தில் அன்று அதிகாலை என்றுமில்லாத பரபரப்பு.

சென்னை வாழ்க்கையில் கண் எதிரே கொலையே விழுந்தாலும் அவரவர் கடமைகளை ஆற்ற அவரவர் ஸ்கூட்டரிலோ காரிலோ பறந்து விரைந்து கொண்டிருப்பர். சற்று சோம்பலாக, நிதானித்தால் வாழ்க்கை கை நழுவி போய்விடும்!

எதிர்வீட்டு அசாதாரணமான மௌனம், விசும்பல்கள், மெல்லிய அழுகுரல்கள், அதுவரை அரசல் புரசலாக அறிந்த மரணச் செய்தியை மெல்ல வெட்ட வெளிச்சமாக்கியது விடிந்த காலைப்பொழுது.

அங்கே ஒரு மரணம். தன் கருப்புக்காரை தினமும் புனிதக் கடமையாக துடைக்கும் “ஒர்க் பிரம் ஹோம்” (“வீட்டிலிருந்தே அலுவலக வேலை”) நாற்பது வயது ஐ.டி. மனிதர். ஏதோ உடல் பிரச்னை என்று ஆஸ்பத்திரி சென்றவர் அங்கேயே ஐஸ்பாக்சில் அடைக்கலமானார்.

பொதுவாக சென்னை அடுக்கு மாடி கட்டிட வாழ்க்கை, அடுத்த வீட்டு மனிதர்களை பற்றி அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து, பேரன் பேத்தி எடுத்து, இறுதியில் மின்சார மயானத்திற்கு இறுதிப் பயணம் மேற்கொள்ளும் காகித நட்புச் சங்கிலிகள் நிறைந்த வாழ்க்கை.

இத்தனைக்கும் நேற்றைய கிராமத்து மனிதர்கள்தான் இன்று சென்னையில். இன்றைக்கும் அவர்கள் ஹீரோ ஹோண்டாவிலும் வேகன் -ஆர் வாகனங்களிலும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் சொந்த கிராமங்களுக்கு சுனாமி அலைகளாக படையெடுக்கும் சென்னைவாசிகள்.

கிராமத்தில் ‘அருவா’ ஆறுமுகத்திலிருந்து கடைசித்தெரு சடையாண்டி வரை அனைவரையும் தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள், சென்னை தீப்பெட்டி சைஸ் அபார்ட்மெண்ட் வீடுகளில் நுழைந்தவுடன் ‘ராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன’ என்று மௌன சாமிகளாகி விடுகின்றனர்.

பிறகுதான் தெரிந்தது மனிதர் இறந்து இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரி மார்ச்சுவரியில் வைக்கப்பட்டு, இன்று அவர் அமெரிக்க உறவினர்கள் வருகிறார்கள் என்பதால் ஐஸ்பாக்சில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார் என்று.

அவர் பாலக்காட்டு பக்கமாம். சற்று நேரத்தில் தெரு முழுவதும் விதவிதமான கார்களில் வளைகுடா மற்றும் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக பணி புரிந்து உயர்நிலை வாழ்க்கையை அடைந்த மலையாளித் தமிழர்கள் அடையாறிலிருந்தும், ஈ. சி. ஆர் ரிலிருந்தும் வந்திறங்கினர்.

ஒவ்வொரு நாள் காலையும் விஜய் வாக்கிங் செல்லும்போதும், அந்த ஐ.டி மனிதர் தன் காரை அழகு மிளிர துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே “குட் மார்னிங்” சொல்லிவிட்டு செல்வான்.

இருவருக்கும் ஒருவர் பெயர் மற்றவருக்கு தெரியாது, அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

விஜய்க்கும் அது போலவே ஒரு ஹோண்டா கார் வாங்கவேண்டும் என்று வெகுநாள் ஆசை. அவன் பட்ஜெட்டிற்கு ஒரு செகண்ட் ஹாண்ட் காராவது வாங்க ஆசை!

விஜயின் மனைவி அப்போது வெளியூரில் இருந்ததால், எதிர் வீட்டு மரணச்செய்தி அறிந்தவுடன் ஓடோடிச் சென்று மலையாள மனிதர்களிடையே புகுந்து, மீளா தூக்கத்திலிருந்த கணவரையே பார்த்துக் கொண்டு துக்கத்தில் இருந்த, கண்ணீர் சுரப்பிகள் வறண்ட ,அவர்தம் மனைவிக்கு மௌனமாக அனுதாபங்களை தெரிவித்துவிட்டு, ஐஸ்பாக்ஸ் மனிதருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்த மலையாளி மனிதர்களுக்கு சடங்குச் சங்கு ஊதுவதற்கு ஏற்பாடு போன்ற அவசர உதவிகளை அளித்து விட்டு, இறுதிச் சடங்குகள் முடிந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட இறுதி ஊர்வலத் தேருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு, குளித்து விட்டு அவனுடைய சொந்த வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைந்தான் விஜய்.

வாரங்கள் மாதங்களாயின.

அந்த ஹோண்டா கார் அதே இடத்தில் தினசரி தெருப்புழுதி ஏறி ஏறி ஓனருக்காக ஏங்கி ஏங்கி நின்று கொண்டிருந்தது.

ஒருநாள் அலுவலகம் விட்டு வீடு திரும்பிய விஜய், அலுவலக வேலை முடித்து வீடு திரும்பிய மறைந்த ஐ.டி. மனிதரின் மனைவியை அவர் வீட்டு வாசலில் இடை மறித்து, சில சம்பிரதாய சிக்கன உரையாடல்களுக்கு பிறகு, அந்த கருப்பு ஹோண்டா காரை விலைக்குத் தரமுடியுமா? என்று வினவினான்.

கணவரின் இறுதி ஊர்வலத்தன்று விஜய் செய்த உதவிகட்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தப் பெண் காரை விஜய்க்கு விற்க இயலாது என்று வருத்தம் தெரிவித்தார்.

சற்று ஏமாற்றத்துடன் விஜய் “ஏன்?” என்று வினவ,

அவர் ” உங்களுக்கு நான் காரை விற்றேன் என்றால், என் வீட்டு ஜன்னல் வழியே தினமும் உங்கள் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என் காரை நான் பார்க்க நேரிடும்.

நானும் என் கணவரும் அந்தக் காரில் பயணம் செய்த அனுபவங்கள், தேன் நிலவு நாட்கள், போக்குவரத்து நெரிசலில் அவரின் பொறுமையிழந்த முன்கோபத்தை நான் அவர் கன்னத்தில் இட்ட முத்தத்தால் ஆசுவாசப்படுத்தியது எல்லாம் என் கண் முன் நிற்கும் காலா காலத்திற்கும்!

கண் காணாத இடத்திற்கு என் கணவர் சென்றதைப்போல், கண் காணாத இடத்திற்கு என் காரையும் விற்கப் போகிறேன்” என்று சொல்லி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

விஜய்யும் அந்த வித்தியாசமான விளக்கத்தை புரிந்து கொண்டு, அவளைப் பாராட்டிவிட்டு விடை பெற்றுக் கொண்டான்.

நாட்கள் வாரங்களாயின. மறைந்த ஐ.டி. மனிதரின் மனைவியை ஓரிருமுறை தெருவிலும் பஸ் ஸ்டாப்பிலும் பார்த்தாலும் விஜய் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தான்.

‘சமீபத்தில் கணவனை இழந்த பெண்ணுடன் பேசினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ?’ என்ற நினைப்பு!

ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த பெண்ணைப் யதேச்சையாக பார்த்தபோது, அவர் விஜய்யிடம் பேச ஆரம்பித்தார்.

“உங்களுக்கு என்னுடைய ஹோண்டா கார் வாங்க இன்னும் ஆசையிருக்கா?” என்று வினவினார்.

விஜய் சிறிதளவு அதிர்ச்சி அடைந்து “எஸ்” என்றான்.

அவர் தொடர்ந்தார்.

“எனக்கு பெங்களூருக்கு டிரான்ஸ்பெர் ஆயிருக்கு. நீங்கள் வேண்டுமானால் என் காரை வாங்கிக் கொள்ளுங்கள்”

“நான் பெங்களுர் சென்று விட்டால், என்னை பொறுத்தவரை என் கார் கண் காணாத இடத்தில் இருக்கிறது என்று தானே அர்த்தம்!. எனவே ஒரு நல்ல விலைக்கு நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று முடித்தார்.

சில நாட்களுக்கு முன் டி.வி-யில் பார்த்த ‘வா ராஜா வா’ திரைப்படத்தில் வந்த வரிகள் விஜய்க்கு ஞாபகத்திற்கு வந்தது.

ஜெ.ஜெயகுமார்
சென்னை
98842 51887