மதுரை தனியார் கண் மருத்துவமனையில், கண்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்க்கும் சில நிமிட இடைவெளியில், அக்சயாவின் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் இந்த சிறுகதை.
அக்சயா, சந்தோஷ் காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் முடித்தனர்.
அக்சயாவிற்கு பெற்றோர்கள் இல்லை. சந்தோஷ்க்கு அம்மா மீனாட்சி மட்டும்.
அக்சயாவின் மனதில் மகிழ்ச்சியின் அளவு எல்லை இல்லாமல் இருந்த தருணம். டாக்டரின் வருகைக்காக காத்திருந்தாள்.
‘கடவுளே! நன்றி. நான் என் உலகை(கணவனை) காண போகிறேன். என்னிடம் காதலை முதலில் சொன்னது சந்தோஷ் தான்.
அப்பா, அம்மா இல்லாத என்னை, நல்லபடியாக பார்த்து கொள்ள அவனால் முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்த போதிலும், அப்பாவாக, அம்மாவாக இருப்பேன் என்று உறுதியுடன் அவன் கூறி காதலை தெரிவித்தான். என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தான்“.
சந்தோஷ் ஐ லவ் யூ! என்று அவனிடம் சொல்ல ஆசை, இருந்தாலும் காக்க வைத்து காதலை சொல்வோம் என்று, அவனை என் பின்னால் சுற்றவைத்தேன். அதனால் அவனை புரிந்து கொள்ள முடிந்தது.
அடுத்தநாள் அவனிடம் காதலை சொல்ல நினைத்து, அவனை எப்போதும் நாங்கள் சந்திக்கும் இடத்திற்கு வர சொன்னேன்.
ஆனால் அன்று இரவு நடந்த ஒரு விபத்தில் என் கண் பார்வை பறி போனது. சந்தோசிடம் காதலை சொல்ல முடியாமல் போனது. என் வாழ்க்கை அவ்வளவு தான் என்று தோன்றியது.
என்னை பார்த்து விட்டு, சந்தோசின் கண்களில் கண்ணீர். “நான் உன்னை நல்லா பார்துகிறேண்டி அக்சயா. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்!” என்று மீண்டும் தன் காதலை தெரிவித்து என்னை கவர்ந்தான்.
“பார்வை இல்லாத என்னை, உன் அம்மா எப்படி ஏற்றுகொள்வார்?” என்று அவனிடம் கேட்டேன்.
அதற்கான பதிலை அவனின் அம்மா மீனாட்சி “நான் உன்னை பாரமா நெனைக்கல, என் மகனுக்கு பிடிச்சிருச்சு. அவன் முடிவு சரியாதான் இருக்கும். நானும் சம்மதிக்கிறேன்!” என்று சந்தோசின் அம்மா மீனாட்சி (என் மாமியார் இல்ல அம்மா) சொன்னதும் மகிழ்ச்சி.
திருமணம் எளிய முறையில் செய்து திருமண வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
சந்தோசிடம் அம்மா மீனாட்சி எப்போதுமே “என்னை விட, அக்சயா உன்னை நல்லாவே பார்த்துப்பா. உன் மனைவியா, அம்மாவா அக்சயா இருப்பாட சந்தோஷ்!” என்று கூறிக்கொண்டே இருப்பாள்.
அந்த வார்த்தை உண்மையானது.
கடவுள் எங்களின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு இடியை இறக்கினார்.
மீனாட்சி அம்மா திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் எங்களை விட்டு பிரிந்து விட்டார். மீனாட்சி அம்மா இல்லை என்று இப்போது எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.
பார்வை இல்லாத என்னால் சந்தோசை எப்படி பார்த்து கொள்ள முடியும்? மீண்டும் சந்தோசிற்கு பாரமாக இருப்பேனோ என்ற பயம் எனக்கு.
“மீனாட்சி அம்மா உங்களை எப்போதுமே கை விடமாட்டா!” என்று சந்தோசின் அம்மா அடிக்கடி எங்களிடம் சொல்வார்.
அதனை உண்மையாக்கும் விதமாக சந்தோசின் அம்மா இறந்தும் எங்களை வாழ வைக்க, அவரின் கண்களை எனக்கு தானமாக கொடுத்து விட்டு சென்றார்.
அவரின் கண்களை எனக்கு பொருத்தி எனக்கு பார்வை கிடைக்க போகிறது. எங்களின் திருமணத்தின் போது, என் கணவர் சந்தோஷ், அவரின் அம்மா மீனாட்சி இருவரும் கண்தானம் செய்ய பதிவு செய்ததாக என்னிடம் கூறினர். அது எங்களுக்கே உதவும் என்று நினைக்கவில்லை.’
மருத்துவர்கள் வந்து கண்களின் கட்டுகளை அவிழ்க்க ஆரம்பித்தனர். தன் உலகை (கணவன் சந்தோஷ்) பார்க்க ஆர்வமாக இருந்தவளிடமிருந்து வார்த்தைகள் கொட்ட ஆரம்பித்தன.
“என் கண்ணாளனே! என் உலகமே நீதான்.
இந்த பார்வையில் உன் அம்மாவாகவும், உன்னை காதலிப்பதன் மூலம் நல்ல காதலியாகவும், உன்னை பார்த்து கொள்வேன்!
என் அழகிய கண்ணாளனே!
சந்தோஷ் ஐ லவ் யூ!” என்று தன் காதலை முதன்முறையாக வெளிப்படுத்தினாள் அக்சயா.
“கண்களின் இமை போல உன்னை காப்பேன் சந்தோஷ். ஐ லவ் யூ!“ என்று மீண்டும் கூறி சந்தோசை கட்டி அணைத்தாள் அக்சயா.
சந்தோஷ், அக்சயா ஜோடி வாழ்க்கை இனிதாக தொடரும்.
‘உடல் உறுப்பு தானம் செய்வோம்!’
மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104