ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?

படர்ந்த அந்த பாலைவனத்தில் அங்கிருந்த சோலையில் தங்கியிருந்த ஞானியைக் காணவும், பயணத்தின் ஊடே இளைப்பாறி செல்லவுமாக நிறையப்பேர் வந்து செல்வதுண்டு.

வெகு தொலைவில் இருந்து ஒட்டகத்தில் வந்த ஒருவன், ஞானியை சந்தித்தான்.

“உன் ஒட்டகத்தை கட்டிப் போட்டாயா?” என ஞானி கேட்டார்.

“இல்லை; எனக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை உள்ளது. என் ஒட்டகத்தை அவர் பார்த்துக் கொள்வார்” என்று பதில் கூறினான்.

“முட்டாளே, ஆண்டவனுக்கு உன் ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா? வேறு வேலையில்லையா என்ன? முதலில் உனக்கானவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உனக்குத்தான் ‌உண்டு.” என்றாராம்.

அந்த ஞானி கூறியதைப் போலவே மது, போதை, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களிலிருந்து நமது உடல் உறுப்புகளையும், அளவற்ற ஆசை, பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றிலிருந்து நமது மனதையும் பாதுகாக்க தவறி விட்டு, துயரங்கள் வரும் போது இறை(வனை)யை குறை சொல்வது நியாயமா?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.