கந்தனைப் பாடிடு மனமே!

கார்த்திகை தீபத்தை ஏற்றிடும் வேளையில்
கந்தனின் புகழைப் பாடிடு மனமே!
தீர்ந்திடும் தொல்லையும் துயரும்
திறக்கும் வெற்றி கதவு நமக்கு!

வார்த்தைகள் கோர்த்திட பிறக்கும் கவிதை
வண்ணத் தமிழ் இசையில் மிதக்க
பார்வதி மைந்தனின் பார்வை கிடைக்க
பாடிடு மனமே வானில் மிதக்க!

ஆர்த்திடும் செந்தூரின் அலைகள் போலவே
ஆறுமுகன் அருள் நாளும் பெறவே
நேர்த்த இப்பிறவி நிலைக்கும் வரையில்
நித்தம் அவன்புகழ் பாடிட சுகமே!

வேர்தனைக் காத்திடும் நீரென நமக்கு
வேலவன் இருக்க பயம் எதற்கு?
கார்முகில் பெய்யும் மழைபோல் நமக்கு
கந்தன் அருளே துணை இருக்கு!

– செந்தூர்க்கவி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.