கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து வடை சுவையான வடை ஆகும். இது ஆரோக்கியமானதும் கூட. இந்த வடை செய்வதற்கு கருப்பு உளுந்து பயறு பயன்படுத்தப்படுகிறது.

இவ்வடைக்கு நார்ச்சத்து மிகுந்த தோலுடன் கூடிய உளுந்து பயன்படுத்தப்படுவதால் குறைந்தளவு சாப்பிடதும் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

வளரும் குழந்தைகளுக்கு தேவையான நிறைய ஊட்டச்சத்துக்களை கருப்பு உளுந்து பயறு கொண்டுள்ளதால் இதனை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

இனி சுவையான கருப்பு உளுந்து வடை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து பயறு – 200 கிராம்

கவுனி அரிசி (கருப்பு அரிசி) – 20 கிராம்

சின்ன வெங்காயம் – 20 எண்ணம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

மிளகு – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – மூன்று கீற்று

கடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கருப்பு உளுந்து பயறை கழுவி கல்நீக்கி சுமார் 8 – 10 மணி நேரம் ஊற வைக்கவும்.

காலையில் வடை செய்வதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

கவுனி அரிசியை கழுவி சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த கருப்பு உளுந்து பயறு
ஊற வைத்த கவுனி அரிசி

உளுந்தம் பயறு நன்கு நீர் உறியும். ஆதலால் பாத்திரத்தில் பாதியளவு பயறும், பாதியளவு நீரும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

ஊறிய உளுந்தம் பருப்பை மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

உளுந்து மாவு முக்கால் பாகம் அரைபட்ட போது, ஊறிய கவுனி அரிசியை தண்ணீர் வடித்து உளுந்த மாவுடன் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

மாவினைத் தோண்ட தயார் நிலையில் தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி மாவினை தோண்டவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

மிளகினை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள உளுந்த மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உடைத்த மிளகு பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

வடை தட்ட தயார் நிலையில் மாவு

வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றிக் காய விடவும். சிறிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் தண்ணீர் தடவிக் கொள்ளவும்.

கையை தண்ணீரில் நனைத்து உளுந்த மாவில் சிறிதளவு எடுத்து கொள்ளவும்.

பின்னர் வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் உருட்டி தட்டையாக தட்டி நடுவில் துளையிடவும்.

துளையிட்ட‌ மாவு

துளையிட்ட மாவினை எண்ணெயில் போடவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக விடவும்.

எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும்.

இவ்வாறாக எல்லா மாவினையும் வடைகளாக பொரித்து எடுக்கவும்.

சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.

இதனை எல்லா வகையான சாதங்கள், இட்லி, தோசை, வெண்பொங்கல் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

ஒவ்வொரு வடையைத் தட்டும் போதும் வாழையிலையிலும், கையிலும் தண்ணீரைத் தடவிக் கொள்ளவும். அப்போது தான் மாவு ஒட்டாமல் எளிதாக எடுக்க முடியும்.

குறிப்பு

உளுந்தை முக்கால் பாகம் ஆட்டிய பின்பு, கவுனி அரிசியைச் சேர்த்து ஆட்டினால்தான் உளுந்து நன்கு பொங்கி வடை ருசியாக இருக்கும்.

வடை மாவு தோண்டிய பின்பு கெட்டியாக இல்லாமல் இருந்தால், சிறிதளவு அரிசி மாவினை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.