கண்களை மூடிக் கொண்டு
கருத்துக்கள் சிதறா வண்ணம்
கடிவாளம் போட்டு வைத்தேன்
வேப்பமரம் தெரியும் ஜன்னல் மேசை
வெள்ளைக் காகிதங்கள்
வண்ண மைக்கூடு
ஊரெங்கும் வெப்ப அலை
அறையில் மட்டும்
உலவும் பனிக்காற்று
அங்கங்கே தூவி வைக்க
ரகசியமாய்ப் பொறுக்கி வைத்த
சில சொற்கள்
பொங்குவதற்கு தோதாய்ப்
பத்திரிகைகள் சொல்லிக் கொடுத்த
பல பிரச்சனைகள்
இத்தனை சேகரித்தும்
கவிதை மட்டும்
ஜனிக்கவில்லை
கவிதை மலர
இதுவெல்லாமல்லாமல்
வேறெதுவோ வேண்டும் போல
என்றாவது ஒருநாள்
எனக்கு அது
புரியாமலா போய்விடும்?
மஹேஷ்
ப்ரதிலிபியின் 2021 போட்டியில் இந்தக் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.. பிரசுரித்த இனிது இணைய இதழுக்கு நன்றி. மஹேஷ்.
வணக்கம்.
நமது இனிது இணைய இதழில் வெளியான தங்கள் கவிதை ப்ரதிலிபியின் ‘2021’ போட்டியில் பரிசு பெற்றது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
எளிய வார்த்தைகளைக் கொண்ட ஆழ்ந்த பொருளுடையது இந்தக் கவிதை.
படைப்பாளிகளின் கடினமான மனப் போராட்டத்தைப் போகிற போக்கில் சொல்லிப் போகும் எளிய முறையில் இந்தக் கவிதை உணர்த்துகிறது.
தாங்கள் இது போன்ற பல உயர் படைப்புகள் படைத்துத் தமிழ் இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்க இனிதுவின் வாழ்த்துக்கள்!