காய்ச்சல் கஞ்சி என்பது அரிசியை வைத்து செய்யப்படும் கஞ்சி ஆகும்.
காய்ச்சல் வந்தால் செரிமானப் பிரச்சினை ஏற்படும்.
காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம், கஞ்சி உண்டால் செரிமானம் எளிதாவதுடன் காய்ச்சலின் தீவிரமும் குறையும்.
சாதாரணமாக கஞ்சியை மாதம் ஒருமுறை தயார் செய்து உண்டால், செரிமான உறுப்புகளுக்கு ஓய்வுடன் கூடிய ஆரோக்கியம் கிடைக்கும்.
காய்ச்சல் கஞ்சியின் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 100 கிராம்
வெள்ளைப் பூண்டு – ஒரு இதழ்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
காய்ச்சல் கஞ்சி செய்முறை
அரிசியை வெறும் வாணலியில் போட்டு, சிவக்க வறுத்துக் கொள்ளவும்.


வெள்ளைப் பூண்டின் தோலினை நீக்கி நன்கு நசுக்கிக் கொள்ளவும்.
வறுத்த அரிசியை மிக்ஸியில் போட்டு மையாக பொடியாக்கிக் கொள்ளவும்.

அரிசிப் பொடியிலிருந்து சிறிய குழிக்கரண்டி அளவு பொடியினை எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீரினை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

அதனுடன் நசுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்க்கவும்.

தண்ணீர் கொதித்ததும் அதனுடன் அரிசிப் பொடியை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி விழாமல் ஒரு சேரக் கிளறவும்.

பின்னர் அதனுடன் தேவையான உப்பினைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

ஆறு நிமிடங்களில் அரிசிப் பொடி வெந்து நிறம் மாறி இருக்கும். இதனுடன் தேவைப்பட்டால் கொதிக்க வைத்த தண்ணீரைச் சேர்க்கவும்.

சுவையான காய்ச்சல் கஞ்சி தயார்.

இதனுடன் எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், புதினாத் துவையல் ஆகியவற்றைச் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சீரகம், மிளகு ஆகியவற்றின் பொடிகளைச் சேர்த்து கஞ்சி தயார் செய்யலாம்.
அரிசியை வறுத்து பொடியாக்கி டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கஞ்சி தயார் செய்யலாம்.
அரிசியை வறுக்கும் போது ஒரு சேர கிளறி வறுக்கவும். இல்லை என்றால் அரிசியின் ஒரு பகுதி கருகி கஞ்சி கசக்கும்.
விருப்பமுள்ளவர்கள் பாத்திரத்திற்கு பதில் குக்கரில் அரிசிப் பொடியைச் சேர்த்து நான்கு விசில் வைத்து கஞ்சி தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!