காரட்

காரட் உலக அளவில் மக்களிடையே பிரபலமான காய்கறிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கான உணவுப் பட்டியலில் இக்காய் இடம் பெறுகிறது. இதனை உண்ணும்போது இனிப்புச் சுவையுடன் ஒரு வித தனிப்பட்ட மணத்தையும் தருகிறது.

காரட்டின் தாயகம் தென்மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா என்று கருதப்படுகிறது. கேட்டின் நிறம் ஆரஞ்சு என்றே பொதுவாக அறியப்படுகிறது.

ஆனால் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் இக்காய் ஆரம்ப காலங்களில் இருந்தது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறகாரட் காய்களிலிருந்து நாம் தற்போது பயன்படுத்தும் ஆரஞ்சு வண்ண காரட் உருவாக்கப்பட்டது.

பல வண்ண காரட்
பல வண்ண காரட்

 

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இக்காய் பயிர் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. முதலில் வெளிப்புறத்தில் ஊதா நிறமும், உட்புறத்தில் மஞ்சள்நிற சதையையும் கொண்ட காரட் ஆப்கானிஸ்தானில் பயிர் செய்யப்பட்டது.

அதன்பின் பதினாறாம் நூற்றாண்டில் டச்சு நாட்டில் தற்போது பழக்கத்தில் இருக்கும் ஆரஞ்சு நிற காரட் உருவாக்கப்பட்டது.

காரட்டின் அறிவியல் பெயர் டாக்குஸ் கரோட்டா ஆகும். இக்காய் அபியாசேயே என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது. சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவை அபியாசேயே குடும்பத்தைச் சார்ந்த பிற தாவர இனங்களாகும்.

இக்காய் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. சீனா உலகின் மொத்த கேரட் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கினை உற்பத்தி செய்து முதல் இடம் வகிக்கிறது.

ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, மெக்ஸிகோ, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் காரட்காய் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

காரட் என்பது தாவரத்தின் வேர் பகுதி ஆகும்.

 

காரட்டானது நன்கு விளையும் முன்பே முழுத்தாவரமும் பிடுங்கப்பட்டு வேர்பகுதி மட்டும் தனியே பிரித்தெடுக்கபட்டு பயன்படுத்தப்படுகிறது.

இக்காய் உருளை வடிவில் நீர்ச்சத்து நிறைந்த சதைப்பகுதியைக் கொண்டுள்ளது.

 

காரட்டில் உள்ள சத்துக்கள்

காரட்டில் விட்டமின்கள் ஏ,சி,கே, தயாமின்(பி1), ரிபோஃப்ளோவின்(பி2), நியாசின்(பி3), பான்டோதெனிக் அமிலம்(பி5), பைரிடாக்ஸின்(பி6), ஃபோலேட்டுகள் ஆகியவைகள் உள்ளன.

இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவைகள் உள்ளன.

பைட்டோநியூட்ரியன்களான ஆல்பா கரோடீன்கள், பீட்டா கரோடீன்கள், பீட்டா கிரிப்டோ சாந்தைன், லுடீன் ஸீக்ஸாக்தைன் போன்றவைகள் இக்காயில் காணப்படுகின்றன.

மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

 

காரட்டின் மருத்துவப்பண்புகள்

கண்களின் நலத்திற்கு

இக்காயில் பீட்டா கரோடீன் அதிக அளவு உள்ளது. பீட்டா கரோடீனானது கல்லீரலில் விட்டமின் ஏ-வாக மாற்றப்படுகிறது.

விட்டமின் ஏ-யானது கண்ணில் உள்ள ரெக்டினாவினால் இரவுப் பார்வைக்குத் தேவைப்படும் ஊதாநிறமியான ரோடாப்சின்னாக மாற்றப்படுகிறது. எனவே கண்களின் பார்வைத் திறனை பாதுகாக்க கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பீட்டா கரோடீன்கள் கண் அழற்சி நோய், கிளைக்கோமா மற்றும் கண்புரை நோய் ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

பீட்டா கரோடீன்கள் உள்ள உணவினை அடிக்கடி உண்பவர்கள் கண்நோய்கள் இன்றி சிறந்த பார்வைத்திறனைப் பெற்றுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே கேரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து நலமான பார்வையைப் பெறலாம்.

 

இதய நோய் ஏற்படாமல் இருக்க

ஒரு நாளைக்கு 200 கிராம் வீதம் தொடர்ந்து மூன்று வாரங்கள் பச்சையாக கேரட்டினை உண்பவர்களின் கொலஸ்ட்ரால் அளவானது 11 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் உண்டாகின்றன. எனவே காரட்டினை உண்டு உடலில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுக்குள் வைத்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் காரட்டினை உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே காரட்டினை உண்டு இதய நோயிலிருந்து உடலைப் பாதுகாக்கலாம்.

 

சீரான இரத்த அழுத்தத்திற்கு

காரட்டில் காணப்படும் அதிக அளவு பொட்டாசியமானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து சீரான இரத்த ஓட்டம் ஏற்பட காரணமாகிறது.

சீரான அழுத்தத்துடன் இரத்தம் பாய்வதால் உடல் உறுப்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. எனவே காரட்டினை உண்டு சீரான இரத்த அழுத்தத்தைப் பெறலாம்.

 

செரிமானம் நன்கு நடைபெற

காரட்டில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுவதோடு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை குடல் உறிஞ்சவும் ஊக்குவிக்கிறது. மேலும் நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுக்களை கழிவாகவும் வெளியேற்றுகிறது.

இதனால் குடல் மற்றும் உணவுப்பாதைகளில் தொற்று நோய், புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் நார்ச்சத்து பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கலுக்கும் நார்ச்சத்து சிறந்த தீர்வாகும். எனவே காரட்டினை உணவில் அடிக்கடி சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறுவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு காணலாம்.

 

புற்றுநோயைத் தடுக்க

காரட்டில் உள்ள பீட்டா கரோடீன்கள் புற்றுநோய் வராமல் தடுக்கின்றன. தினமும் 1.7 மில்லிகிராம் முதல் 2.7 மில்லிகிராம் வரை பீட்டா கரோடீனை உட்கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.

நார்ச்சத்து அதிகம் உள்ள காரட்டினை உண்பதால் குடல்புற்று நோய் ஏற்படுவதற்கான கூறுகள் 20 சதவீதம் குறைவாக உள்ளதாக மற்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் பீட்டா கரோடீனை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே காரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

 

பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாப்பிற்கு

காரட்டினை கடித்து உண்ணும்போது அவை பற்களுக்கு இடையே உள்ள உணவு துகள்களை அகற்றி சுத்தம் செய்கிறது. மேலும் இதனை உண்ணும்போது உமிழ்நீர் சுரப்பினை அதிகரிக்கிறது.

காரத்தன்மை உடைய உமிழ்நீர் வாயில் பாக்டீரியாவின் செயல்பாட்டினை தடை செய்கிறது. இதனால் பற்சிதைவு, ஈறுகள் பாதிப்பு ஆகியவை தடுக்கப்படுகிறது. எனவே காரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதுகாக்கலாம்.

 

சருமப் பாதுகாப்பிற்கு

காரட்டில் உள்ள விட்டமின் ஏ-வானது சருமங்களில் சுருக்கங்கள், வறட்சி, ஈரமின்மை ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. காரட்டினை அரைத்து சருமத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் பொலிவான சருமத்தினைப் பெறலாம்.

 

கல்லீரல் பாதுகாப்பிற்கு

காரட்டில் உள்ள விட்டமின் ஏ-வானது கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவினை குறைக்கவும் விட்டமின் ஏ உதவுகிறது.

குடலில் உள்ள கழிவுகளை காரட்டில் உள்ள நார்ச்சத்து விரைந்து நீக்குகிறது. எனவே காரட்டினை உண்டு கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பாதுகாக்கலாம்.

 

காரட்டினை வாங்கி பயன்படுத்தும் முறை

காரட்டினை வாங்கும்போது விரைப்பான, இளமையான, ஒரே சீரான நிறத்துடன் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

மிருதுவான, மேற்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் கூடிய கீறல் உள்ள காய்களைத் தவிர்த்து விடவும்.

சூரிய ஒளியின் பாதிப்பின் காரணமாக இக்காயின் மேற்புறத்தில் பச்சை நிறத்துடன் காணப்படுவதையும் தவிர்க்கவும்.

காரட்டினை நன்கு கழுவி அதன் மேற்புறத்தில் உள்ள மண், அழுக்கினை நீக்கிவிடவும்.

காரட்டின் மேற்புறத்தில் உள்ள பச்சை நிறத்தாவரத்தை நீக்கிவிட்டு குளிர்பதனப் பெட்டியில் 1-2 வாரங்கள் பதப்படுத்திப் பயன்பெறலாம்.

ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றுடன் இதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கக்கூடாது.

காரட்டானது அப்படியேவோ, சமையல் செய்தோ பயன்படுத்தப்படுகிறது. சாலட்டுகள், சூப்புகள், ஜாம்கள், ஊறுகாய்கள், அல்வா, கேக், புட்டிங் என பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்பிலும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த, கடித்தால் மொறுமொறுவென இனிப்பு சுவையுடன் கூடிய காரட்டினை அடிக்கடி உணவில் சேர்த்து பயன் பெறுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.