காளான் 65 என்பது கோழி வறுவலுக்கு மாற்றாக, சைவப் பிரியர்களுக்கான சுவையான உணவாகும்.
இதனை விருந்தினர் வருகையின் போதும், விருந்து சமையலிலும் செய்து அசத்தலாம்.
இதனை தனியாகவும், டீ மற்றும் காப்பியுடன் சேர்த்தோ, சைடிஷ்ஷாகவும் உண்ணலாம்.
இனி சுவையான காளான் 65 செய்வதைப் பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
கார்ன் ப்ளார் மாவு – 25 கிராம்
மல்லிப் பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 2 ½ ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்
இஞ்சி – ஆட்காட்டி விரல் அளவு
பூண்டு – 5 எண்ணம் (பெரியது)
மஞ்சள் பொடி – தேவையான அளவு
சீரகம் – ½ ஸ்பூன்
மிளகு – ½ ஸ்பூன்
தயிர் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும்.


இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
பின் இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகம், மிளகு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, கார்ன்ப்ளார் மாவு, மல்லிப்பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் வற்றல்பொடி, மஞ்சள்பொடி, மிளகுசீரகப் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.
பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பின் அதனுடன் சிறுதுண்டுகளாக்கிய காளானைச் சேர்த்து ஒரு சேர பிசையவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும்.
இதனை அரை மணி நேரம் ஊறவிடவும்.

பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் காளான் கலவை துண்டுகளைப் போட்டு வேக விடவும்.

அடிக்கடி காளானைக் கிளறி விடவும்.
எண்ணெய் குமிழி காளானில் அடங்கியதும் காளானை எடுத்து விடவும்.

இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான காளான் 65 தயார்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 3 ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.
காளான் கலவை தயார் செய்யும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது.
காளானில் இருக்கும் தண்ணீரே கலவை தயார் செய்யப் போதுமானது.
காளான் கலவையை அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் காளான் கலவை நீர்த்துப் போகும்.
விருப்பமுள்ளவர்கள் சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை மாவுக்கலவையில் சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!