கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி?

கேரட் பீன்ஸ் சூப் சத்தானதும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியதுமான திரவ உணவு ஆகும்.

மழை மற்றும் குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாக இது உள்ளது.

மாலை நேரங்களில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். எளிமையான உணவான இதனை சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கேரட் – 50 கிராம்

முருங்கை பீன்ஸ் – 50 கிராம்

பச்சை பட்டாணி – 50 கிராம்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

சீரகம் – 1 ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

மிளகு – ½ ஸ்பூன்

தண்ணீர் – 5 டம்ளர்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

மிளகு பொடி தயார் செய்ய

மிளகு – 1½ ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் கேரட், முருங்கை பீன்ஸ் ஆகியவற்றை அலசி எடுத்துக் கொள்ளவும்.

கேரட்டையும், முருங்கை பீன்ஸையும் சின்ன சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பச்சை பட்டாணியை தோலுரித்து அலசி எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சிறுவட்டத் துண்டுகளாக வெட்டவும்.

மிளகு பொடி தயார் செய்ய உள்ள மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை அலசி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

 

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

குக்கரில் நறுக்கிய கேரட், முருங்கை பீன்ஸ், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, பச்சை பட்டாணி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து மூடி போட்டு அடுப்பில் ஏற்றவும்.

குக்கரில் ஒருவிசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து கரண்டியால் நன்கு கிண்டவும்.

 

வேகவைத்து இறக்கியதும்
வேக வைத்து இறக்கியதும்

 

பின்னர் தண்ணீரை மட்டும் தனியே வடித்து விடவும்.

 

தண்ணீரை மட்டும் வடித்ததும்
தண்ணீரை மட்டும் வடித்ததும்

 

காய்கறி கலவையை தனியே எடுத்து மிக்ஸியில் அரைத்து மீண்டும் வடித்த தண்ணீரில் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

 

அரைத்த காய்கறிகலவையைச் சேர்த்ததும்
அரைத்த காய்கறிகலவையைச் சேர்த்ததும்

 

பரிமாறும்போது தேவையான உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி.

 

கேரட் பீன்ஸ் சூப்
கேரட் பீன்ஸ் சூப்

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வடித்த தண்ணீரில் அரைத்த காய்கறிக் கலவையைச் சேர்க்காமல் மிளகுப் பொடி மட்டும் சேர்த்து பிளைன் சூப்பாகக் குடிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குக்கரைத் திறந்து நன்கு கிளறிவிட்டு மிளகுப் பொடி சேர்த்து அப்படியே சூப்பைக் குடிக்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.