கொட்டிய தண்ணீர்

ஒரு விஷயத்துல

அந்த வாத்தியார்

ரொம்ப ஜாக்கிரதையா

இருப்பாரு.

 

கலைவாணனையும் மகேசையும் மட்டும் தான்

குடிக்க தண்ணீர் கொண்டு வர சொல்லுவாரு.

தப்பித்தவறி கூட என்னையும், சிலரையும்

வேல உடமாட்டாரு.

 

ஒரு நாளு

கலையும் மகேஷும்

ஸ்கூல்ல லீவு.

அடுத்து அந்த வரிசைல

இருக்குற பையன் யாருன்னா

கந்த(ன்) தா(ன்).

 

அவனக் கூப்புட்டு

போய் மோலியா தெருவுல

தண்ணி வாங்கிக்கினு வாடா

குடிக்க இன்னாரு.

 

பேச்சி தொனைக்கு

அவ(ன்) என்னைய கூப்பிட்டா(ன்)

போம்போது அவ(ன்)

சொமப எடுத்துகினா

வரும் போது

தண்ணியோட யாங்கிட்ட குடுத்துட்டா.

 

நான் எடுத்து வந்தத

அவரு பார்த்துட்டாரு.

டேபிள் மேல

வைக்கச் சொன்னாரு.

 

நா(ன்) திரும்புனது(ம்)

சொம்புல கைய வுட்டு

நல்லா கொடாஞ்சி

கீழ ஊத்திட்டாரு.

 

பொடி நடைய

ரெட்டியார் வூட்டாண்ட போய்

தண்ணி குடிச்சிட்டு வந்தவரு

கந்தன பாத்து மொறச்சாரு.

 

கந்த(ன்) யங்கிட்ட கேட்டா(ன்)

யான்டா அந்த வாத்தியாரு

என்னைய பாத்து மொறிக்கிறாருன்னா(ன்)

 

அந்த முறைப்புல

ஆயிரம் அர்த்தம் இருந்தது

எனக்கு மட்டும்தான் தெரியும்.

முனைவர் பாவலன்
சென்னை

One Reply to “கொட்டிய தண்ணீர்”

  1. சமூக ஓட்டைகள். மன பிம்பங்களின் எதிர்மறை பிணக்குகள்… அறிவு எல்லையின் ஆற்றாமை…. பாகுபாடு. தள்ளிவைப்பு. மன ப்பிரமை ஆண்டாண்டு காலமாக த்தொடர்ந்து வரும் நம் பழக்க வழக்கம் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை கவிதை முன்வைக்கிறது…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.