சிட்டுக் குருவி கிட்டவா
எட்டி ஓடிப் போகாதே
கட்டிப் போட்டு வைக்கமாட்டேன்
கவலைப் பட்டு ஓடவேண்டாம்
பட்டம் போல வானைநோக்கிப்
பறந்து ஓடி அலைய வேண்டாம்
சிட்டுக் குருவி கிட்டவா
எட்டி ஓடிப் போகாதே
வட்ட மிட்டுத் திரியவேண்டாம்
மழையில் எல்லாம் நனையவேண்டாம்
வெட்ட வெளியில் சுற்றவேண்டாம்
வெயில் தாக்க அலையவேண்டாம்
சிட்டுக் குருவி கிட்டவா
எட்டி ஓடிப் போகாதே
பட்டு உடலைத் தொட்டிடுவேன்
பையப் பைய நெருங்கிடுவாய்
தட்டு நிறைய நெல்தருவேன்
தயவு செய்து வந்திடுவாய்
சிட்டுக் குருவி கிட்டவா
எட்டி ஓடிப் போகாதே
-அழ.வள்ளியப்பா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!