சுலைமானி டீ அருமையான டீ ஆகும். இது கேரளாவில் மிகவும் பிரபல்யமானது. விருந்துகளின் போது அதிகப்படியான உணவினை உட்கொள்ளும் போது எளிதில் செரிமானம் ஆவதற்காக இது அருந்தப்படுகிறது.
கேரளாவில் கோழிக்கோட்டில் இது மிகவும் பிரபலமானது. சுலைமானி என்பது அரபுச் சொல் ஆகும். சுலைமானி என்பதற்கு ‘அமைதியான மனிதன்’ என்பது பொருள்.
இது செரிமான சக்தியை அதிகரிப்பதோடு புத்துணர்ச்சியையும் தருகிறது. மாலை வேளைகளில் இதனை அருந்த ஆரோக்கியத்தோடு புத்துணர்ச்சியையும் பெறலாம்.
விருந்துகளின் போது உணவிற்குப் பின் இதனை அருந்துவதால் எளிதில் செரிமானம் ஆதவதோடு உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்க வல்லது.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 3 டம்ளர்
ஏலக்காய் – 3 எண்ணம்
கிராம்பு – 3 எண்ணம்
பட்டை – பாதி ஆட்காட்டி விரல் அளவு
இஞ்சி – பாதி ஆட்காட்டி விரல் அளவு
சர்க்கரை – 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 3 டீஸ்பூன்
புதினா இலை – 3 எண்ணம் (விருப்பமிருந்தால்)
செய்முறை
இஞ்சியை தோல் நீக்கி நன்கு தட்டிக் கொள்ளவும்.
ஏலக்காயை தோலுடன் லேசாக நசுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரை நன்கு கொதிக்க விடவும்.
எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுக்கவும்.
புதினா இலையை அலசிக் கொள்ளவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்துப் பார்த்தால் மசாலாப் பொருட்களின் மணமும் நிறமும் இறங்கி தண்ணீர் வாசனையோடு லேசாக நிறம் மாறி இருக்கும்.
அதனுடன் நசுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும்.
30 விநாடிகள் கழித்து அதில் டீத் தூளைச் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
டீயில் எலுமிச்சை சாறு சேர்த்து மூடி விடவும்.
30 விநாடிகள் கழித்து டீயை எடுத்து வடிகட்டவும்.
பின்னர் அதில் புதினா இலையைச் சேர்த்துப் பருகவும்.
சுவையான சுலைமானி டீ தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம்.
விருப்பமுள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதில் உப்பு பயன்படுத்தி டீ தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!