சுழியம் அசத்தலான இனிப்பு வகையைச் சேர்ந்த சிற்றுண்டி. இதனை தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களிலும் செய்து அசத்தலாம்.
சுழியத்தைச் சில ஊர்களில் சுசியம் என்றும் அழைப்பார்கள்.
இனி சுவையான சுழியம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 50 கிராம்
மைதா மாவு – 25 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
மண்டை வெல்லம் – 100 கிராம்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
நெய் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
சுழியம் செய்முறை
மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக் கொள்ளவும்.

கடலைப் பருப்பினை குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும், தண்ணீரை வடித்துவிட்டு, பருப்பினை 10 நிமிடங்கள் பேப்பரில் உலர்த்தி விடவும்.
பின்னர் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகத் திரித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யினைச் சேர்த்து தேங்காய்த் துருவலை வறுத்துக் கொள்ளவும்.

தூளாக்கிய மண்டை வெல்லத்துடன் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்து கிளறவும்.
சர்க்கரை முழுவதும் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி விடவும்.


வாயகன்ற பாத்திரத்தில் திரித்த கடலைப் பருப்பு, வறுத்த தேங்காய்த் துருவல், சர்க்கரை கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து ஒருசேர கிளறவும்.


பிடிக்கும் பதம் வந்தால் அப்படியே பிடித்து விடலாம். கலவை சற்று கொழ கொழவென இருந்தால் கலவையை அடுப்பில் வைத்து பிடிக்கும் பதம் வரும்வரை கிளறி இறக்கவும்.
கலவையை சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் பச்சரிசி மாவு, மைதா மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒருசேர கலந்து பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எண்ணெயில் போடவும்.



வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான சுழியம் /சுசியம் தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கடலைப் பருப்பிற்கு பதில் காராமணி (தட்டைப் பயறு) சேர்த்து சுழியம் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவினைப் பயன்படுத்தி சுழியம் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!