சைவ புரத மூலம் சோயா பால்

சோயா பால் பாலுக்கு மாற்றான உணவாகக் கருதப்படுகிறது. இது சோயா எனப்படும் பயறிலிருந்து தயார் செய்யப்படுகிறது.

விலங்கு இறைச்சியில் இருப்பது போன்ற புரதச் சத்தினைக் கொண்டுள்ளதால் இது சைவ புரத மூலம் என்று அழைக்கப்படுகிறது.

இறைச்சிக்கான மாற்று உணவாக கருதப்பட்டு சைவ உணவினை உண்பவர்களால் சோயா அதிகளவு உண்ணப்படுகிறது. சோயாவானது ஆசியாவில் பராம்பரிய உணவாக உண்ணப்பட்டு வருகிறது.

கிமு 82-ல் சீனாவில் சோயா பாலானது முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

பின் இதனைப் பயன்படுத்தும் பழக்கமானது சீனாவிலிருந்து ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கும் பரவியது. இன்றைக்கு உலகின் பல நாடுகளிலும் பல்வேறு விதமாக சோயா பால் பயன்படுத்தப்படுகிறது.

சோயா பயறின் விதைகளை ஊறவைத்து, அரைத்து அக்கலவையைச் சூடாக்கி பின் வடிகட்டி சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இது எண்ணெய், நீர், புரதம் ஆகியவற்றைக் கொண்ட உறுதியான கூழ்மம் ஆகும்.

 

 

சோயாவிலிருந்து தயார் செய்யப்படும் டோஃபு உற்பத்தியில் கிடைக்கக்கூடிய துணைப் பொருளாக இது முதலில் கிடைத்தது.

சோயா பாலில் இருந்த ஆயில்கோசக்காரிடெஸ் என்னும் பொருளானது லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளோர்களிடம் வயிற்று வலியை ஏற்படுத்தியதால் இது நீண்ட நாட்கள் பிரபலமடையாமல் இருந்தது.

சோயா பாலினை நீண்ட நேரம் சூடாக்குவதன் மூலம் ஆயில்கோசக்காரிடெஸை அகற்றலாம் என்பது கண்டறிந்த பின்பு இது கிழக்காசிய மக்களின் முக்கிய உணவுப் பொருளாக மாறியது.

பாலுக்கு இணையான சுவையையும், தடிப்பையும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சோயா பாலுக்கு அளித்த பின் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது பிரபலமாகியுள்ளது.

சோயா பாலின் மணமானது அதனை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோயாவினைப் பொறுத்து இருக்கும். பாலினைப் போன்றே சோயா பாலும் பொடி வடிவில் கிடைக்கிறது.

சோயா பாலின் வரலாறு

சோயாவானது வடகிழக்கு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் 11ஆம் நூற்றாண்டில் பயிர் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் சோயாக் கஞ்சி பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன.

4-ஆம் நூற்றாண்டில் சோயா ஒயினும், 1365-ல் மங்கோல் யுவானின் வீழ்ச்சியின்போது சோயா தயிரும் பயன்பாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது.

புதிய சோயா விதையிலிருந்து தயார் செய்யப்படும் சற்று நீர்த்தன்மையான சோயா பாலானது இன்றைக்கும் சீனாவில் டூஜியாங் என்னும் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

கிங் வம்ச காலத்தில் இது பிரபலமடையத் தொடங்கியது. 18-ம் நூற்றாண்டில் சீனாவின் தெருக்களில் சோயா பாலானது விற்பனை செய்யப்பட்டது.

ஆரம்பகால குடியரசு சீனாவில் சோயா பாலினைத் தயார் செய்யும் முறையானது தொழில்மயமாக்கப்பட்டது. 1950-ல் ஹாங்காங், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சோயா பாலானது பானமாக விற்பனை செய்யப்பட்டது.

1910-ல் பிரான்சில் சோயா பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக சோயா பாலானது 1980-ல் உலக மக்களால் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்பட்டது.

சோயா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சோயா பாலில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9 (ஃபோலேட்டுக்கள்), பி12(கோபாலமைன்), இ மற்றும் சி ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகள் காணப்படுகின்றன.

இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, லிப்பிடுகள் ஆகியவையும் உள்ளன.

சோயா பாலின் மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

சோயா புரதத்தில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோஃப்ளோவன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சோயா பாலினை அருந்துவதால் சீரான இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சோயா பாலில் காணப்படும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கின்றன.

தினமும் சோயா பாலினை அருந்தும்போது இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சோயா பாலினை அளவோடு உண்டு இதய நலத்தைப் பாதுகாக்கலாம்.

ஆரோக்கியமான உடல்எடை குறைப்பிற்கு

சோயா பாலில் காணப்படும் ஒற்றைசர்க்கரை நிறைவுறா கொழுப்பானது குடல் கொழுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்கிறது.

மேலும் சோயா பாலில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட வயிறு நிரம்பிய உணர்வினைத் தருகிறது. இதனால் அதிகமாக உட்கொள்வது தடைசெய்யப்படுகிறது.

சோயா பாலில் உள்ள ஐசோஃப்ளோவன்கள் வளர்ச்சிதை மாற்ற உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. சோயா பாலினை அருந்துவதால் பருமனானவர்கள் தங்களின் வயிற்று சுற்றளவு குறைவதை உணரலாம். எனவே சோயா பாலினை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல்எடையைக் குறைக்கலாம்.

புற்றுநோயைத் தடை செய்ய

சோயா பாலினை உட்கொள்ளும்போது சீரம் ஈஸ்ட்ரஜனின் அளவு குறைக்கப்பட்டு மார்பகப் புற்றுநோய் வருவது குறைக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் மாதவிடாய் நின்ற பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஈஸ்ரோஜனின் அளவில் வேறுபாடு ஏற்படுவதால் மார்பகப்புற்று உண்டாவதாகக் கருதப்படுகிறது. எனவே வயதான பெண்கள் சோயா பாலினை அருந்தி மார்பகப் புற்றுநோயினைத் தடுக்கலாம்.

ஆண்களிடையே ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும் சோயா பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயதான பெண்களின் பிரச்சினையைத் தீர்க்க

மாதவிடாய் நிற்கப் போகும்போது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு குறைகிறது. ஈஸ்ட்ரஜனின் அளவு குறையும்போது அது பெண்களுக்கு சர்க்கரைநோய், உடல்பருமன், இதயநோய், மனஅழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சோயா பாலானது பைட்டோ ஈஸ்ட்ரோஜனைக் கொண்டுள்ளது. இது உடலில் குறையும் ஈஸ்ட்ரோஜனின் அளவினை ஈடுசெய்கிறது. எனவே பெண்கள் வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சோயா பாலினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான எலும்புகளைப் பெற

வயதான காலத்தில் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோஸிஸ் என்ற நோய் உண்டாகிறது. இதனால் எலும்பானது கடினத்தன்மையை இழந்து எளிதில் உடைந்து விடுகிறது.

சோயா பாலில் காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உடலானது கால்சியத்தை உட்கிரகிக்க உதவுகிறது. மேலும் சோயா பாலில் காணப்படும் கால்சியமானது எலும்புகளின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது.

புரதச்சத்தினைக் கொண்ட இறைச்சியை உண்ணும்போது உடலில் உள்ள கால்சியம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் சைவ புரதமூலமான சோயா பாலினை உட்கொள்ளும்போது அவ்வாறு ஏற்படுவதில்லை.

மேலும் சோயா பாலில் காணப்படும் ஐசோஃப்ளோவன்கள் எலும்புகளின் அடர்த்தியையும், எடையினையும் அதிகரித்து ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படாமல் தடை செய்கிறது.

சோயா பால் தயார் செய்யும் முறை

சோயா பயறினை 10-16 மணி நேரம்வரை ஊற வைக்க வேண்டும். சோயா பயறின் மேல் தோலானது ஊறிய பின்பு தனியே பிரிந்து வந்துவிடும்.

அதனை தனியே பிரித்து எடுத்துவிட வேண்டும். உடைந்த சோயா பயறினை 6-8 மணி நேரம் ஊறவைத்தால் போதுமானது.

விருப்பமுள்ளவர்கள் மைக்ரோவோவனில் 2 நிமிடங்கள் நனைந்த சோயா பயறினை சூடஏற்றலாம். அதன் பின் சோயா பயறினை தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

பின் அதனை வடிகட்ட வேண்டும். வடிகட்டியின் மேல்புறத்தில் தங்கும் பொருளானது ரொட்டிகள் தயார் செய்யவும், விலங்குகளின் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வடிகட்டிய நீர்மப் பொருளை 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து சோயா பால் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறாக தயார் செய்த சோயா பாலை மூன்று நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

சோயா பாலானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், ஞாபகத்திறனை அதிகரிக்க மற்றும் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஏற்படும் புரதச்சத்து குறைபாடு ஆகியவற்றை போக்க பராம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.

சோயா பாலினைப் பற்றிய எச்சரிக்கை

சோயா பாலானது சில தாதுஉப்புகளை உடல் உட்கவர தடையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சோயா பாலினை அதிகம் உட்கொள்ளும்போது வாந்தி, தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். எனவே இதனை அளவோடு அருந்துவது நலம்.

சோயா பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. பாலினைப் போன்று சோயா பாலும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

சைவ புரத மூலமான சோயா பாலினை உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.