சொன்னாயடிச் சொல்லொன்று

சொன்னாயடிச்
சொல்லொன்று
செங்குருதியின் மேல்
சுடர்விட்டு எரியுதடி

செவ்வானம் பிளந்து
என்மேலே விழுகிறது
எக்கு ஈட்டி
இதயத்தில் பாய்கிறது

சொல்லடி
முந்தி வரும் ஆசைக்கு
பாஷைகள் பாவமா?

ஓசையின்றி அழுகிறேன்
என் உணர்வுகள் பாவமடி
பைங்கிளியே பாரடி
எனக்குப் பைத்தியமே பிடிக்குதடி

முத்தமிட்டு முத்தமிட்டு
சப்தமற்றுப் போன
பொழுதினை மறப்பேனா

துள்ளியெழும் வேட்கைக்கும்
ததும்பி வழியும் மோகத்துக்கும்
தாளங்கள் பலபோட்டு
தன்னந்தனியே ஆடுகிறேன்

அன்பெல்லாம் கூடி
ஆறத் தழுவியபடி
அன்னமே சொன்னாயடி
அடி(என்)நெஞ்சம் பூத்ததடி

அத்தனையும் பிழையென்றே – எனை
அப்படியே விட்டுவிட்டாய்
திசைகள் எட்டும் எனை
முட்டுதடித் தாவணி நிலவே

எல்லைகள் பலபோட்டு
தொல்லைகள் கூட்டுகிறாய்
கிள்ளை மொழிப் பேசி
கள்ளத்தனம் சில செய்கிறாய்

அடிப் பைத்தியக்காரி – உன்
பாசமெனும் பேய்ப் பிடித்து
நோயிலேக் கிடக்கிறேன்
மாமருந்தே மன்னிப்பாயடி

முன்கோபக்காரி நீ
மோசம் செய்துப் போகாதே
பிடிவாதக்காரி நீ
எனைப் பாடையில் ஏத்தாதே

கவிஞர் விசித்திரக்கவி
கைபேசி: 9080231403

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.