சோலா பூரி சிறுவர்களால் விரும்பப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். ஹோட்டல்களில் செய்வதைப் போன்றே இதனை வீட்டிலும் செய்து அசத்தலாம்.
இதற்கு தொட்டுக்கறியாக சென்னா மசாலாவையும் ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம்.
சோலா பூரியை வீட்டில் தயார் செய்ய மைதா மாவினைப் பயன்படுத்தவும்.
மைதா மாவுடன் வேறு சிலப் பொருட்களையும் சேர்த்து இப்பூரி தயார் செய்யப்படுகிறது. இனி சுவையான சோலா பூரி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1 கப்
ரவை – 2 ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சர்க்கரை – 2 ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – பூரி பொரிக்கத் தேவையான அளவு
சோலா பூரி செய்முறை
மைதா மாவினை சலித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் சலித்த மைதா மாவினைச் சேர்த்து அதனுடன் ரவை, வெள்ளைச் சர்க்கரை, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

அதனுடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் நல்ல எண்ணெய் சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.

மாவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்திற்கு ஒருசேரத் திரட்டிக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து, மாவின் மேற்பகுதி முழுவதும் ஒருசேரத் தடவிக் கொள்ளவும்.
சுத்தமான சிறிய துணியை தண்ணீரில் நனைத்து பிழித்து மாவின் மேல் மூடி வைக்கவும்.
பாத்திரத்தை மூடி பிசைந்த மாவினை ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
ஒருமணி நேரம் கழித்து மாவினை மீண்டும் ஒருமுறை ஒருசேர நன்கு பிசைந்து அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மீண்டும் உருண்டைகளை ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

சிறுஉருண்டைகளில் ஒன்றினை எடுத்து சற்று தடிமன் உள்ள சப்பாத்தியாக விரிக்கவும். எல்லா உருண்டைகளையும் சப்பாத்தியாக விரித்துக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றிக் காயவிடவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் விரித்து வைத்துள்ள சப்பாத்தியில் ஒன்றினைப் போட்டு லேசாக கரண்டியால் சப்பாத்தியை அழுத்தி விடவும்.

பூரி எழும்பி வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான சோலா பூரி தயார்.
குறிப்பு
மிதமான புளிப்புள்ள தயிரினை பூரி மாவு பிசைய பயன்படுத்தவும்.
மைதா மாவின் மேற்பரப்பு எளிதில் காய்ந்து விடுவதால், ஈரத்துணியை எப்போதும் மாவின்மீது போர்த்திவிடவும்.