சோளச் சுண்டல் செய்வது எப்படி?

சோளச் சுண்டல்  வெள்ளைச் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி ஆகும்.

தானிய வகையினைச் சேர்ந்த சோளச் சுண்டல் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

நவராத்திரி கொலுவின் போது இதனை செய்து அசத்தலாம்.

 

தேவையான பொருட்கள்

வெள்ளை சோளம் – 200 கிராம்

எலுமிச்சம் பழம் – ½ மூடி (மீடியம் சைஸ்)

கொத்தமல்லி இலை – 3 கொத்து

இஞ்சி – சுண்டு விரல் அளவு

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 4 எண்ணம்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

க‌டுகு – ½ ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

க‌றிவேப்பிலை – 3 கீற்று

 

செய்முறை

முதலில் இஞ்சியை தோல் நீக்கி இழைத்து கொள்ளவும்.

கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

எலுமிச்சையை விதை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலைச் சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.

மிள‌காய் வற்றலை காம்பு நீக்கி இரண்டு மூன்றாக ஒடித்துக் கொள்ளவும்.

சோளத்தை தண்ணீரில் அலசிக் கொள்ளவும்.

குக்கரில் தண்ணீர் ஊற்றி சோளத்தை போட்டு மூடி வைக்கவும்.

 

குக்கரினை மூடும் முன்பு
குக்கரினை மூடும் முன்பு

 

ஒரு விசில் வந்ததும் குக்கரை சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.

பின் அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து நீரினை வடித்து சோளத்தைப் பிரித்து விடவும்.

 

வேக வைத்த சோளம்
வேக வைத்த சோளம்

 

பின் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குலுக்கி விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்ல எண்ணெயை ஊற்றவும்.

பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, இழைத்த இஞ்சி துண்டு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

கடுகு வெடித்ததும் அதில் அவித்த சோளத்தை போட்டு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

பின் சோளக்கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஒருசேர கிளறவும்.

 

வேக வைத்த சோளத்தை கிளறும் போது
வேக வைத்த சோளத்தை கிளறும் போது

 

பின் நறுக்கிய மல்லி இலையினைச் சேர்த்துக் கிளறவும்.

 

மல்லி இலையை சேர்த்ததும்
மல்லி இலையை சேர்த்ததும்

 

சுவையான சோளச் சுண்டல் தயார்.

 

சுவையான சோளச் சுண்டல்
சுவையான சோளச் சுண்டல்

 

இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேங்காய் துருவல் சேர்த்தும் சுண்டல் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.