1975 – சென்னை மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட அந்த நகரம் என்னை அன்போடு அழைத்த காலம் அது.
அந்த அழைப்பின் குரல் இசையாகவும் இருந்தது, இடுக்கணாகவும் இருந்தது.
வேளச்சேரி – கனிகாபுரம் குடிசைப் பகுதி, அங்கேதான் என் உலகம். வீடு என்றால் உண்டி நிரப்பும் இடமல்ல.
அது நிழலிலேகூட இடமில்லாமல் ஏழையாக வாழ்ந்த உடல்களின் ஓய்விடம்.
அந்த இடத்தில் பிறந்தேன்; வளர்ந்தேன். எங்கள் வீட்டில் தந்தையிடம் இருந்து வந்த ஒவ்வொரு காசும், எங்கள் அடுப்புக்குள் சாதம் வடிக்கவும் போதாத அளவுக்கு இருந்தது.
எங்கள் தந்தை, தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தில் (EB) வேலை செய்தவர். ஆனால் அவர் கையில் சுத்தம் இருந்தால்கூட, எங்கள் வீட்டு அடுப்பில் பசியின் சாம்பல் தான் தீயாய் எரிந்தது.
நாங்கள் மொத்தம் ஆறு பிள்ளைகள். அண்ணன், நான், தங்கை, மூன்று தம்பிகள். நான் இரண்டாவது மகன்.
என் அண்ணன் தான் எம்பில் படித்தவன். அவன் படித்து நல்ல வேலைக்குச் சென்று அடுத்தடுத்தவர்களுக்கான பாதையைத் துவக்கியவன்.
ஆனால் நானோ? படிப்பை தொடரும் வாய்ப்பே இல்லாமல், வாழ்வின் வெப்பத்தில் உருகும் சென்ட்ரிங் வேலைதான் எனக்கு முதல் பாடசாலை.
கூரைகளின் மேல் கம்பி அடித்தேன்; சிமென்ட் மூட்டை தூக்கினேன்; சுவர்களுக்கு வியர்வையை ஓவியமாக ஒட்டினேன். வாடிய உடலும், ஒட்டிய வயிறும் சேர்ந்து என்னை நரகத்தில் ஆழ்த்தின.
வெயிலில் காய்ந்தது என் தோலல்ல; கனவுகள். சில நேரம் என் கால்சட்டையின் ஓட்டைகள் வழியே வெளியே வந்த வாடிய என் உடலின் பெருமையை பார்த்து நண்பர்கள் சிரித்து விளையாடினர்.
நானோ வீட்டுக்குள் சென்று அடங்காமல் அழுவேன். வீட்டு வாசலில் வாடிக் கொண்டிருந்த பூனைகூட என் நிலையை பார்த்து இரங்கி போனதாகத் தோன்றும்.
வெளியில் வேலைக்கு செல்லும் வழியில் என்னை பாம்பு கடித்தது; தேள் துளைத்தது. பிரயாணம் என்பது என் வாழ்வில் ஒரு போராட்டம்தான்.
வெளியில் காய்ந்த பிணம் போல இருந்தாலும், உள்ளம் மட்டும் நம்பிக்கையின் கொழுந்தாக இருந்தது.
அப்போதுதான், என் ஊரிலிருந்து வந்த மாமா “ஜெய்ப்பூருக்கு போறியா? ரத்தினக் கற்கள் பாலிஷ் செய்யற டிப்ளோமா படிச்சா வேலை கிடைக்கும்!” என்று கூறினார்; இதை ஒரு வாய்ப்பாக எண்ணினேன்.
கையில் இருந்த 200 ரூபாயுடன் கனவையும் பசியையும் சேர்த்து, நான் ரயிலில் ஏறினேன்.
என்னவென்று தெரியாத ஓர் இடம், அங்கே என்னை அழைத்தது என் வாழ்வின் பசி!
ஜெய்ப்பூர்
அறிமுகம் இல்லாத நகரம்
புதிய நகரம், புதிய வாழ்க்கை. ஆனால் எதிலும் என் பெயர் இல்லை. ரயில் சக்கரங்கள் நகர்ந்தன. மனதில் சந்தோசமும் இல்லை, பயமும் இல்லை.
ஒரே ஒரு உணர்வுதான். ‘இந்த பயணம் என்னை எங்கே கொண்டு போகப் போகிறது?’ என்பதே அது.
அது ஒரு பயணமல்ல; அது ஒரு பிராரம்பம். ஜெய்ப்பூரின் மண் வாசனை எனக்குத் தெரிந்தது இல்லை.
அந்த மண் என் காலடியில் நிலைத்து விடுமா? என்னை மீண்டும் என் பசியோடு வீழ்த்தி விடுமா? எனும் கேள்வி மட்டுமே என் மனதில் தேங்கியது.
முதல் வாரமே என் 200 ரூபாயும் முடிந்து விட்டது.
பணம் இல்லை!
உறவுகள் இல்லை!
தெரியும் மொழி இல்லை!
இங்கு நான் யாருக்கும் யாரும் இல்லை!
நான் மட்டும் தான் என் உலகம்!
சுற்றிப் பார்த்தால் எல்லாம் வித்தியாசம்.
மொழி பேசினால் புரிவதில்லை.
தோற்றம் பார்த்தால் வேறுபாடு.
அறிமுகமே இல்லாத ஓர் இடத்தில், எங்கள் ஊரிலிருந்து வந்த சில தமிழர்கள் சேர்ந்து தங்கியிருந்தோம். அந்த இடம் கத்புத்லி நகர்.
அங்கே ஒரு இஸ்லாமிய சகோதரர், எங்களை குறைந்த வாடகைக்கு தங்க வைத்தார். அவரது நல்லெண்ணம் தான், என் முதல் சிறிய ரயில் நிலையம் போல.
மாலை நேரங்களில், ஒரு தேநீர் கூட பலரால் பகிர்ந்து கொள்ளப்படும்.
நாங்கள் தமிழர்கள்; இங்கே வேலைக்கு தகுதி உடையவர்களாக இருந்தாலும், நம்பிக்கைக்கு தகுதியானவர்களாக காணப்படவில்லை.
‘இந்த மண் நமக்கானதா?’ என்கிற கேள்வி, பசி போக்கும் உணவுக்கு முன்பே மனதில் எழும்.
எனது துயரத்தில் ஒரு ஒளிப்பாதை திறக்கப்பட்டதுபோல், ரத்தினக் கற்களைப் பற்றிய டிப்ளோமா பாடத்தில் சேர்ந்தேன்.
அங்கே சில தமிழர்களுடன் பழகினேன். மற்றவர்களுடன் உறவாட விரும்பினேன். ஆனால் மொழி ஒரு அடைப்புக் கதவாய் மாறியது.
அப்படியும் இரட்டை நாளில் ஒரு குழம்பு, ரசம் தயாரித்து, அதையே மெல்ல குடித்து வாழ்ந்த நாட்கள் என் நினைவில் இன்னும் வாசித்துப் போகின்றன.
அமாவாசை, பௌர்ணமி எல்லாம் எங்களுக்கு பிரியாணி நாட்களல்ல; விரத நாள்கள்.
எந்த நாளும் பசிக்கு தீர்வு இல்லை. அது ஒரு நீண்டக்கால உறவாக மாறிவிட்டது. அந்த நிலைமை, என்னை இன்னும் வலுவானவனாக மாற்றியது.
பழுக்காத கனிகளை கையாலே வீழ்த்த விரும்பாத என் உள்ளம், தன்னுடைய வேர்களை மண்ணிற்குள் அதிகமாக வைக்கும் மரம் போல வளர்ந்து கொண்டிருந்தது.
என் வாழ்க்கை ஒரு குகைதான். ஆனால் அந்த இருளுக்குள்ளே ஒரு ஒளிக்கதிர் நுழையப் போகிறதென்று எனக்கு நிச்சயம் இருந்தது.
அந்த ஒளிக்கதிர் தான், என் தேவதை ஷிப்ரா.
அந்த காலம், என்னை மனிதனாக மட்டுமல்ல கல்லைப் போன்றவனாகவும் மாற்றியிருந்தது. காரணம் இழந்த உணர்வுகள், மறந்த விழிகள், கடந்து வந்த பட்டினி நாட்கள்.
அதற்குள் அவள் வந்தாள். ஷிப்ரா, ஜெய்ப்பூரின் பெரும் எமெரல்ட் கம்பனியின் உரிமையாளரின் மகள். வெளிச்சத்தையே வெட்கப்படுத்தும் ஒரு தேவி.
மின்மினிப்பான விழிகள்; பசுமை நிறமுடைய பார்வை; வெள்ளை பால் போல் முகம்.
மார்வாடி மொழி பேசுகிறாள். நான் பேசும் தமிழ் அவளுக்குத் தெரியாது. எனக்குத் தெரியாத மொழி அவளது.
ஆனாலும், சொல்லாமல் புரிந்து கொண்ட பாசம் தான் எங்களை இணைத்தது.
நான் ஒரு கட்டிடத் தொழிலாளி; பசியில் மூழ்கியவன். கிழிந்த தொப்பியுடன் உலவுபவன். அவளோ, கலைவாணியின் வடிவம் போல.
ஆனால் ஒருநாள் அவள் என்னை கேட்டாள் “ஏன் இப்படி இருக்கு உங்கள் வாழ்க்கை?”
அதற்குப் பதில் சொல்லும்போது, என் கண்களில் நீர் வந்து விட்டது. அவளின் பரிவு ஆரம்பமானது. அன்றுதான்
அவளின் முதல் தியாகம்:
அவள் தன் தந்தையிடம் இருந்து எமெரல்ட் கற்கள், அரை விலையுயர்ந்த கற்கள் சிலவற்றை பதுக்கி எடுத்து
எனக்குக் கொண்டு வந்தாள்.
நான் அவற்றை பாலிஷ் செய்து, சந்தையில்தான் விற்றேன். அதிலிருந்து வந்த பணத்தால் நான் என்னுடைய உயிர் காக்கும் உணவை வாங்கினேன். சில நாட்களில் என் கல்விக்கான கட்டணத்தையும் அவ்விதம் சமாளித்தேன்.
ஒரு பெண் தன் குடும்பத்தின் செல்வத்தை ஒரு அந்நியனாக இருந்த எனக்காக பகிர்ந்தாள். அவள் தேவதையைவிட உயர்ந்தவள்.
நான் ஒருநாளும், ஒருபார்வைகூட அவளை மோசமாகப் பார்த்ததில்லை.
எனது பழைய பனஞ்சட்டை சைக்கிளில் அமர்ந்து, ஜெய்ப்பூரின் தெருக்களைச் சுற்றினாள்.
காலை குளிரிலும் மாலை வெயிலிலும் அவள் ஒரு மெல்லிய துணியால் முகம் மூடி என் பக்கத்தில் பயணித்தாள்.
அவள் ஒரு சஞ்சய் தத் ரசிகை. ‘ராக்கி’ படம் வெளியாகும் நாள் அவளுக்காக நானே டிக்கெட் வாங்கினேன். அவளுடைய புன்னகை என் சாதனையின் பரிசாக இருந்தது.
என் வாழ்க்கையில் கடிதம் வரவில்லை; பணம் வரவில்லை; ஏன் ஓர் அழைப்பு கூட வரவில்லை குடும்பத்தினர் என் செலவுக் கணக்கையே கேட்கும் அளவுக்கு. ஆனால் அவள் மட்டும் என் சுவாசம் வரை எண்ணி என் பக்கத்தில் இருந்தாள்.
ஒருநாளும் என்னிடம் “நீ யார்?” என்று கேட்கவில்லை. ‘உன்னாலே வாடுகிறேன்’ என்று மட்டும் முகம் காட்டினாள்.
அவளின் காதல் என் உயிரை மீட்டது. என் உணர்வுகளுக்கு இரத்தம் ஊற்றியது.
நான் மனிதனாக இருப்பதற்கே காரணம் ஷிப்ரா.
நான் என் வாழ்க்கையில் சத்தியமாக ஒரு முடிவெடுத்தேன். ‘என்னைப் போன்று வாழ்க்கையில் அவள் விழிக்க வேண்டாம். என் நிலைக்கு அவள் இறங்க வேண்டாம்’ என்று எண்ணி பிரிய முடிவெடுத்தேன்.
நான் பிரிவதற்கு முன் என் கண்களில் கண்ணீர் இல்லை. ஆனால் அவள் தன்னை தாங்க முடியாமல், என் முன்னே அழுதாள்.
அவள் அந்த நாள் ஒருவார்த்தை சொன்னாள். “கமல்ஜி! நன்றாக படிச்சு வா!”
அந்த வார்த்தை, அந்த வாடை, என் வாழ்நாள் முழுக்க என் நினைவில் நிற்கிறது.
அவள் விரலால் என் கைத்தோலை தொட்ட போது ‘நான் உயிரோடு இருக்க வேண்டும்!’ என்று எனக்கே ஒரு காரணம் அமைந்தது.
ஜெய்ப்பூர் ரயில் நிலையம், இரவின் மின்மினி ஒளியில், என் வாழ்வின் மிகச் சோகமான காட்சி நிகழ்ந்தது.
ரயிலில் ஏற நான் தயாராக இருந்தபோது ஷிப்ரா – என் தேவதை வந்திருந்தாள்.
அவள் பார்வையில் எதுவும் இல்லை போல். ஆனால் அதில் பிரிவு, ஏக்கம், துக்கம், தாய்மையைவிட மென்மை, காதலைவிட தூய்மை இருந்தது.
அந்த நிமிடம் ஒரு மௌனத்தால் உடைந்த காதல். அவள் என் கையை சற்று தொட்டாள்.
“நல்லா படிச்சு வா, கமல்ஜி!” என்றாள்.
அந்த வார்த்தைகள் காதலுக்குப் பின் கிடைக்கும் தூய ஆசீர்வாதம் போல. அவள் அழவில்லை.
ஆனால் அவளது கண்களில் தெரிந்த அந்த சில கண்ணீர்த்துளிகள் என் உயிரையே குடித்துக் கொண்டு சென்றன.
உண்மையான காதல். இருவர் சேர்ந்து வாழ்வது மட்டும் அல்ல. ஒருவர் வாழ இன்னொருவர் விலகும் தியாகமும் தான்.
அவள் எனக்கு கடவுள் அளித்த பரிசு. நான் அதை மட்டும் தான் ஏற்று, அவளையே விட்டேன்.
அந்த பயணம் துவங்கும் முன், என் உள்ளத்தில் உருகி வந்த என் நாவிலிருந்து பாய்ந்தன.
“நான் கண்ணீரில் நெகிழ்ந்தேன்
பிரிவின் பிணிக்குள்ளானேன்
இத்தனை வருடங்களாய் பாபத்தில் நசிந்தவன் நான்
ஆனால் உன்னைக் கடவுள் ஆசீர்வதித்தான்
என் காதலும் கூட உனக்கொரு வரமாகவே மாறிவிட்டது!
ஆனால் எனக்கு சாபமாய் உன் நினைவோடு!”
இது ஒருபயணத்தின் முடிவல்ல. ஒரு புதுதலைமுறை காதலுக்கான பின் ஒலி.
அவள் இல்லாத என் வாழ்க்கையில் அவள் நினைவில் நனையாமல் ஒருநாள்கூட இல்லை.
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!