தஞ்சைப் பெரியகோயில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

சோழநாடு என்றும் சோழ மண்டலம் என்றும் அழைக்கப் பெற்ற பரந்த நாட்டின் தலைநகராக விளங்கிய ஊர் தஞ்சை. ‘தஞ்சை’ என்பதற்கு ‘குளிர்ந்த நிலப்பரப்பு’ என்பது பொருள்.

தண்+ செய் என்பதே தஞ்சை என்றாயிற்று. இவ்வூரில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் தளிக்குளத்தார் கோயில் என்றழைக்கப்பட்ட சிவாலயம் இருந்தது.

ஏறத்தாழ கி.பி.850-ல் விஜயாலயா சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று தஞ்சையைக் கைப்பற்றி
சோழ நாட்டின் தலைநகரமாக்கினான்.

கி.பி.985-ல் மதுராந்தக உத்தம சோழன் மறைந்த பிறகு, சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூடினான். முடிசூடிய பின் ராஜராஜன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டிக்கொண்டான்.

காஞ்சி மாநகரில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாசநாதன் கோயிலின் அழகில் ராஜராஜன் மயங்கினான்.

அதன் விளைவாக, தஞ்சையில் ராஜராஜீச்சம் எனும் பெருங்கோயிலைக் கட்டினான்.

பெரியகோயிலை உருவாக்கிய கட்டடக் கலைஞரின் பெயர் வீரசோழன் குஞ்சரமல்லான ராஜராஜ பெருந்தச்சன்.

ராஜராஜனால் 1010-ல் கட்ட்ப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்ட தஞ்சை பெரியகோயில் வழிபாட்டு ஸ்தலமாக இருப்பதோடு மட்டுமின்றி, தமிழக வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

கடந்த 2010-ல் தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

ஆயிரம் பேர் பங்கேற்று பரத நாட்டியம் ஆடியது, தஞ்சை பெரியகோவில் பொறித்த 10 ரூபாய் நாணயம் வெளியிட்டதும் சிறப்பாக அமைந்தது. 2020 பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலக பராம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோவில் இந்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

பூஜை, வழிபாடு போன்ற அனைத்தும் அரண்மனை தேவஸ்தானத்தால் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரியதாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்டு விளங்கும் ஆவடையார் 13 அடி உயரமும் இருபத்தி மூன்றரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என தனித்தனி கருங்கல்லினால் வடிக்கப்பட்டு இணைக்கப்பட்டது.

இச்சிவலிங்கத்தைச் சுற்றிவர இடமும் உள்ளது. பொதுவாக நமது பார்வையில் படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒருபகுதி மட்டுமே.

இக்கோயிலில் தினமும் காலை சாந்தி, உச்சிக்காலம், சாயாரட்சை, அர்த்தஜாமம் என கால பூஜைகள் நடைபெறுகின்றன.

சிவலிங்கம் என்பது ஒன்பது பாகங்களைக் கொண்டதாகும். ஆவடையாருக்குள் மறைந்திருக்கும் அடிப்பாகம் நான்கு முகப்பட்டைகளுடைய பிரம்ம பாகமாகவும் அதற்கடுத்து எட்டு முகப்பட்டைகளைக் கொண்ட பகுதி விஷ்ணு பாகமாகவும் உள்ளது.

ஆவடையாருக்கு மேலுள்ள வட்டத்தூண் பாகம் ருத்திரன், மகேசன், சதாசிவம், பரபிந்து, பரதநாதம் என ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக எட்டாவதாக சக்தி பாகம் என்ற உச்சி முகடு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பிரம்மாந்திரக் கல்லும் கீழ் விமானத்தின் உட்கூடாக அமைந்துள்ள பிரபஞ்சமான வெற்றிடம்தான் ஒன்பதாவது பாகமான சிவம் எனப்படுகிறது.

கருவறை அருகேயுள்ள மாடத்தில் செப்புத் திருவுருவில் போக சக்தி அம்மன் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. சோழர்கால உலோக வார்ப்புக் கலைக்கு சிறந்த உதாரணமாக இச்செப்புத் திருமேனி விளங்குகிறது.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்திகேஸ்வரர் ஒரே கல்லில் செய்யப்பட்டு, இந்தியாவில் திகழ்கின்ற மிகப்பெரிய நந்திகளில் ஒன்றாகும்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி இருபந்தைந்து டன் எடையுடன், 19.5 அடி நீளம், எட்டே முக்கால் அடி அகலம், 12 அடி உயரத்துடன் அமைந்துள்ளது.

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.