காலிங் பெல் அழுத்தப்படும் சத்தம் கேட்டு, சுமதி கதவினை திறந்தாள்.
அங்கே கண்ட காட்சி சுமதியை பதை பதைக்க வைத்தது. பக்கத்து வீட்டு லட்சுமி பத்ரகாளியாய் நின்றிருந்தாள்.
“என்ன லட்சுமி? என்ன ஆச்சு?” எனக் கேட்பதற்குள் அவளை தள்ளிவிட்டு சுமதியின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
வீட்டில் சுமதியின் கணவன் மணிகண்டன், சோபாவில் சாய்ந்து, டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான்.
வந்த வேகத்தில் லெட்சுமி அவனின் வயிற்றுக்கு கீழே பத்து மிதி மிதித்தாள்.
அவள் கால்களுக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. அத்தனை ஆவேசம் அவளுக்குள்!
ஓடிவந்து வீட்டிற்கு வெளியே கிடந்த செருப்பை எடுத்து , அவன் வாயில் ஆனமட்டும் வெளுத்து வாங்கி விட்டாள்.
‘என்ன நடக்கிறது?’ என ஒருகணம் சுமதிக்கு புரியவே இல்லை.
“லட்சுமி! ஏன் இப்படி பண்றீங்க?” சுமதி லட்சுமியின் கையை பிடித்தாள்.
“சுமதி! எதுவும் பேசாதீங்க! பேசினா உங்களுக்கும் தான் அடி விழும்!”
மணிகண்டன் இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தான்.
“எனக்கு ஒண்ணுமே புரியலையே. அவரு வாயெல்லாம் இரத்தம் ஒழுகுதே அத்தை! எதிர் வீட்டு ஐயாவை கூட்டிட்டு வாங்களேன்!” அழுது கொண்டே கூறினாள் சுமதி.
“ஏண்டா டேய்! நீ எல்லாம் மனுஷனாடா? என்ன பண்ணி இருக்க இந்த வயசுல? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னைய கொலை கூட பண்ணிடுவேன். தூ!” என காறி அவன் முகத்தில் உமிழ்ந்தாள் லட்சுமி.
மணிகண்டனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அம்மா, மகள், மனைவி என அனைவரும் அருகில் இருக்கும் போதே இவள் இப்படி செய்து விட்டாளே என கூனி குறுகிப் போய், முகத்தில் பட்ட அவள் எச்சிலை துடைத்துக் கொண்டான்.
அதற்கான காரணத்தை ஒருவாறு யூகித்துக் கொண்ட அவனுக்கு அதிர்ச்சியில் பேச முடியவில்லை.
சுமதி லட்சுமியை கெஞ்சினாள் .
“என்ன லட்சுமி! ஏன் இப்படி பண்றீங்க?”
லட்சுமியின் கண்களில் தீப்பொறி .
” நான் என்னத்த.சொல்லுவேன். பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது. நேத்து நீங்க எல்லாரும் கோவிலுக்கு போயிருந்தீங்க இல்லையா? இந்த ஆளு மட்டும் தானே வீட்டில் இருந்தான்”
“ஆமா!”
“பிரியங்கா அங்கிள் வீட்டில போயி, ஊஞ்சலில் கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வரேன்னு வந்தா.
வந்த புள்ளைய இவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா? என் வாயால அதை சொல்ல முடியல. இவன் கிட்டயே கேளுங்க!” மறுபடியும் ஓங்கி மிதிக்க போனாள் லட்சுமி.
அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் வந்து விட்டனர்.
“உங்களுக்காக பார்க்கிறேன் சுமதி. இல்லாட்டி இவனுக்கு இப்பவே சமாதி கட்டிடுவேன்.”
அந்தப் பிளாட் 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு.
” என்னாச்சு? என்னாச்சுமா?” என அனைவரும் லட்சுமியை கேட்டனர். லட்சுமி அனைவரையும் பார்வையால் எரித்தாள்.
“என்னம்மா! என்ன நடந்தது? ஏன் இப்படி ராட்சசியா நடந்துக்கிற. ஒரு ஆம்பளையை இப்படி போய் அடிக்கிற!” எதிர் வீட்டு முதியவர்.
லட்சுமியின் கோபம் அவள் கண்களில் தெரிந்தது. “யாராவது ஏதாவது பேசினீங்க, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. பேசாம போயிடுங்க!”
“எப்படிம்மா பேசாம போக முடியும். என்ன ஏதுன்னு எங்களுக்கு தெரிய வேண்டாம்!”
“நீங்க தெரிஞ்சுக்கணுமா? கேளுங்க, அவன்கிட்ட!”
மணிகண்டன் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான்.
“என்ன மணிகண்டா! என்ன ஆச்சு? நீயாவது சொல்லுப்பா!” எதிர் வீட்டு சதாசிவம், மணிகண்டனை வற்புறுத்தினார்.
“இவ்வளவு நேரம் பேசாம இருக்கியேப்பா! ஏதாவது பேசுப்பா. அப்பத்தானே நாங்களும் என்ன ஏதுன்னு கேட்கலாம்”
“அவன் என்ன பேசுவான்? அவனால என்ன பேச முடியும்? சண்டாளன் நேத்து இவன் வீட்டுக்கு, விளையாட வந்த என் மகளை, அந்த பச்ச குழந்தைய போயி… இவன்.. இவன்… சொல்ல நாக்கு கூசுதுங்க!”
அனைவருக்கும் லேசா பொறி தட்டியது.
” ஏம்மா! ஏதாவதுன்னா போலீஸ்ல போய் கம்ப்ளைன்ட் குடுமா. அத விட்டுட்டு பிளாட்டில் வந்து இப்படி கத்திட்டு இருக்க!” இது கோவிந்தனின் குரல்.
“என்ன போலீஸா? போலீஸ் கீலிஸ்ன்னு ஏதாவது பேசினீங்க. அப்புறம் நல்லா வாயில வந்துரும். போலீஸ்ல சொன்னா என்ன நடக்கும்? என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாது? “
“நூறு தடவை போலீஸ் ஸ்டேஷன்ல வரச் சொல்லுவாங்க. சாட்சி கேப்பாங்க. இல்லாத கேள்வி எல்லாம் கேட்பானுங்க. கடைசியில கோர்ட்டுக்கு போக சொல்லுவானுங்க.“
“கோர்ட்ல தீர்ப்பு வழங்க பல வருஷங்கள் ஆகும். நான் வக்கீலுக்கு காசை கொட்டிட்டு நான் நிம்மதி இழந்து சாகணும். அதுதானே நாட்டுல இதுவரை நடக்குது! எதுவும் பேசாம திரும்பி போயிடுங்க!” சீறினாள் லட்சுமி.
“இவன் செஞ்ச காரியத்துக்கு நான் இங்கேயே இப்பவே இவனுக்கு தண்டனை கொடுக்கணும்” எனக் கூறிவிட்டு மறுபடியும் போய் காலால் அவனின் தொடைகளுக்கு இடையில் நன்கு மிதித்தாள். அவளின் கால்கள் துணிச்சலாலும் துயரத்தாலும் இரும்பு தூண்களாகிப் போயிருந்தன.
“அம்மா!” என்று அலறி சாய்ந்தான் மணிகண்டன் ..
ஆத்திரம் தீரும் மட்டும் மிதித்து விட்ட க்கு இதற்கு மேல் மிதித்து பயன் இல்லை என்ற நிலையில் ஆவேசமாக வீட்டிற்கு வெளியில் வந்தாள்.
“ஏம்மா! இப்படி கத்துற! வெளியே தெரிஞ்சா உன் குழந்தைக்குத் தான் அவமானம்”
“என்ன? ம்.. என்ன பேசிற நீ? என் குழந்தைக்கு என்ன அவமானம்? எட்டு வயசு குழந்தைக்கு, ஏதாவது பட்டம் கொடுத்திடுவீங்களா? என்ன பட்டம் குடுப்பீங்க? கற்பு இழந்தவள்! அப்படின்னா? இல்ல வேற ஏதோ பெயர் சொல்லுவீங்களே அப்படியா?
பொம்பளைக்கு மட்டும் நிறைய பட்டம் வச்சிருப்பீங்களே! அவனுக்கு என்ன பட்டம் கொடுக்கப் போறீங்க? அகராதியிலேயே இப்படி பண்ற ஆண்களுக்கு ஒரு பெயரும் இல்லையே!
இப்படியே சொல்லி சொல்லி தானடா, பொம்பளை புள்ளைங்களுக்கு நியாயமே கிடைக்காமல் , மறுபடியும் மறுபடியும் உலகத்துல இதே தப்பு நடந்துக்கிட்டே இருக்கு!
ஸ்கூல் வாத்தியார் மாணவியை பலாத்காரம் செய்தான் . சிறுமியை பாதிரியார் பாலியல் பலாத்காரம் செய்தான்.
எம்.எல்.ஏ கூட்டு பாலியல் செய்தான். இது தானே இப்ப நியூஸ். இப்படிப்பட்டவன்களை தெரிஞ்ச உடனே சுட்டு தள்ளனும்.. இல்லாட்டி, அணு அணுவா வெட்டி கொல்லனும். நினைச்சா ரத்தம் கொதிக்குது.
ஏதோ பேப்பர்ல படிச்சிருக்கேன். டிவில பாத்திருக்கேன். பச்ச குழந்தையைகூட இப்படி பண்ணுவான்களா? என நினைத்து வியந்து போயிருக்கிறேன். ஆனா அதெல்லாம் என் வீட்டிலேயே நடக்கும் என நான் நினைக்கவே இல்லை.
பிரியங்கா நேத்துல இருந்து வயிறு வலி, வயிறு வலின்னு சொல்லிவிட்டு இருந்தா. அவளுக்கு என்னன்னு கூட சொல்லத் தெரியல! கெவுன தூக்கி பார்த்தா! அப்படி ரணமா.சிவந்து போய் இருக்கு.
கேட்டா அந்த அங்கிள் இங்க கடிச்சாரு. ரொம்ப வலிக்குதும்மானு சொல்றா. ராஸ்கல்! அவனை என்ன பண்ணினா சரியா இருக்கும்?
அனைவரும் ஏதும் பேச முடியாமல் மௌனமாய் தலை குனிந்து நின்றனர்.
தூரத்தில் நின்று கொண்டிருந்த தன் எட்டு வயது குழந்தை வந்து “என்னம்மா! ஏம்மா அந்த அங்கிளை அடிக்கிற? பாவம்மா! ” எனக்கூறி அம்மாவின் கையை பிடித்து இழுத்தாள்.
“ஒன்னும் இல்லடா செல்லம் . நீ வா! நம்ம வீட்டுக்கு போகலாம் “என கூறி பிரியங்காவை உச்சி முகர்ந்து கை பிடித்து அழைத்துச் சென்றாள்.
லட்சுமியின் மனதிற்குள் ‘அவன் செஞ்ச காரியத்துக்கு ஏத்த தண்டனையை நானே கொடுத்துட்டேன். அவன் பல்ல உடைச்சிட்டேன் இல்ல! கீழே, அது நல்லா நஞ்சு போயிருக்கும்! இது போதும்! இது போதும்! அவன் இனி வெளியில தலை காட்ட முடியாது. மேலேயும் போச்சு! கீழேயும் போச்சு!’ மனதிற்குள் ஆறுதல் அடைந்தாள் லட்சுமி.
அன்றில் இருந்து மணிகண்டன், அவன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அவமானத்தால் அரண்டு போயிருந்தான். வீட்டில் யாரும் அவனுடன் பேசுவதில்லை.
அவன் அம்மாவே அவனை அருவருப்பாய், பார்க்க தொடங்கி இருந்தாள். அன்றிலிருந்து ஒரு நாளும் அவன் அம்மா அவனுடன் முகம் பார்த்து பேசியதில்லை .
இந்த மூன்று மாதத்தில் அவன், மெலிந்து.பொலிவு இழந்து போய்விட்டான். முன்பற்கள் உடைந்து போனதில், அவன் முகம் இன்னும் விகாரமாய் மாறிப் போய் இருந்தது. பைத்தியம் போல் அடிக்கடி தனக்குத் தானே பேசிக் கொள்கிறான்.
ஒருநாள் சுமதியின் வீட்டுக்குள் இருந்து ஒரே அழுகை. அலறல் சத்தம். மனது கேட்காமல் லட்சுமி சுமதியின் வீட்டு கதவை தட்டினாள். அவனின் மகள் கதவைத் திறந்தாள்.
“என்னாச்சுமா?”
“இல்ல ஆன்ட்டி! அப்பா….. ” அவளால் பேச முடியவில்லை.
உள்ளே போன லட்சுமி அதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள்.
அவன் அறையில் அவன் மனைவியின் சேலை, கயிறாய் மாறி இருந்தது. பழைய சேலை அறுந்து விழுந்த வேகத்தில், அவனின் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது போல துடி துடித்துக் கொண்டிருந்தான்.
சுமதி அழுகிற சத்தம் கேட்டு பிளாட்டில் அனைவரும் வந்துவிட்டனர். வெளியே வந்த லட்சுமி விசயத்தை தெரிவித்தாள். இப்படி செய்வான் என அவளும் நினைக்கவில்லை!
அனைவரும் வந்து அவனை பார்த்து சென்றனர்.
“கொஞ்ச நேர சபலம். எதில் போய் முடிந்து விட்டது பாருங்கள்!
என்னத்தை சொல்ல?
கடைசில அவன் தலையெழுத்து. இனிமே அவன் இடுப்பு சரியாகுமா? ரண வேதனைப்பட்டு, சாகத்தான் போறான்.
தன் வினை தன்னைச் சுடும்” சில ஆண்கள் பேசிக் கொண்டனர்.
“ஆறறிவு கொண்ட மனிதன், ஐந்தறிவு கொண்ட மிருகத்தை விட கேவலமா நடந்துக்கிறாங்க. இவனுக்கு இது ஒரு நல்ல பாடம்.
அதுவும் எட்டு வயது குழந்தையை போய் தனக்குகல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா என்பதையும் மறந்து… இவனுக்கு நல்லா வேணும்.
இதை விட பெரிய தண்டனையை இவனுக்கு யாராலும் கொடுக்க முடியாது. ஈனப்பிறவி!” என்றவாறு பெண்கள் அவரவர் வீட்டுக்கு கலைந்து சென்றனர்.
இரா.கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!