தாய்மொழி காத்திட எழுந்திடு!

இயற்கையின் எழிலாய்

ஈடில்லா பெருமையாய்

வளமை கண்ட தொன்மையாய்

வாட்டமிலா இளமையாய்

இவை யாவினும் மேலாய்

அன்னைக்கு நிகரான

நமது தாய்மொழி,

செயற்கைக்குக் கம்பளமிடும்

நவீன யுகத்தில்,

எரியூட்டப்படுமோ என்கிற

அச்சத்தில் ஒலித்திடும் முழக்கமே

தமிழா! தாய்மொழி காத்திட எழுந்திடு!!

நுனிநாக்கு ஆங்கிலம்

மட்டுமே அறிவுப்புலமை என

மூளைச்சலவை செய்யப்பட்ட நாம்,

வல்லினம், மெல்லினம், இடையினம்

இவற்றோடு கூட்டணி கண்ட

நம் தாய் தமிழ்மொழி

ஆளுமையைத் தரும் என்பதை

அகிலத்திற்கே பறைசாற்றிட,

தமிழா! தாய்மொழி காத்திட எழுந்திடு!!

அரசவைப் புலவர் முதல்

அறிவியல் யுகக் கவிஞர் வரை

உச்சி முகர்ந்து இன்புற்று

கொண்டாடிய நமது தாய்மொழி

இன்று,

அந்நிய மொழிக்கலப்பினில்

அமிழ்ந்து மரித்துப் போகுமுன்னே

விழித்திடு தமிழா!

நம் தாய்த்தமிழைக் காத்திட எழுந்திடு!!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.