தென்றல் மீனா

முன்கதை சுருக்கம்:

1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.

வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘தென்றல் மீனா’.

தென்றல் மீனா, வசந்தா நிலையத்தின் பெரிய போர்ஷன் ஒன்றில் வசித்து வரும் இளம்பெண். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த, ஒடிசலான ‘துறுதுறு’ இளம்பெண் மீனா, செல்ப் மேட் ஆக தன்னை தானே உருவாக்கிக் கொண்டவள்.

மகளிர் விடுதிக்குச் செல்லாமல் பலதரப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் வசிக்க வேண்டும் என்று இங்கு வந்தவள் மீனா.

சென்னைக்கு வந்த போது முதலில் சில மாதங்கள், தனியாரின் தென்றல் பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக அவள் பணி புரிந்து வந்தாள்.

அதனால், இங்கு உள்ள பெண்மணிகள் அவளை ‘தென்றல் மீனா’ என்று அழைத்தார்கள். இங்கு குடி வந்த சில நாட்களிலேயே ‘கலகல’வென்று பேசிப் பழகி தனக்கென இங்கே பெண்கள் நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விட்டாள்.

சரி மீனா இப்பொழுது எங்கே வேலை செய்கிறாள் என்று கேட்கிறீர்களா?

ஒருகம்பெனியில் வேலை பார்த்து படிப்படியாக பதவி உயர்வு பெறும் கருத்தாக்கத்தில் அவளுக்கு விருப்பமில்லை.

குறுகிய காலத்தில், கான்டாக்ட்ஸ் என்னும் சொத்தை உருவாக்கிக் கொண்ட அவள், ப்ரீலேன்சர் போல் தன்னுடைய அலுவல் தொடர்பில் உள்ளவர்களுக்காக ஈவென்ட் நடத்துவது, ப்ரெயின் ஸ்டார்ம் நிகழ்வுகளில் பங்கேற்று ஆலோசனை சொல்வது என்று தன்னுடைய திறமைகளின் பல பரிமாணங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறாள் மீனா.

விளம்பர படங்கள், ஆவணப்படங்கள் எடுக்கும் நிறுவனங்களும் புத்தம் புதிய கோணம் உள்ள சிந்தனைக்காக, யோசனைகளுக்காக இவளுக்கு அழைப்பு விடுப்பார்கள்.

தொழில் நேரங்களில் இவளுடன் பழகும் ஆடவர் சிலர், இவள் வயதை அறிந்து கொள்ள, “நீங்கள் நெயன்ட்டிஸ் கிட் ஆ! டூ தவுசன்ட் கிட் ஆ?” என வினா தொடுப்பார்கள். புன்னகையை மட்டுமே பதிலாக தருவாள் மீனா.

தெலுங்கு சினிமாவில் காட்டப்படும் கிராமத்துப் பண்ணையார் வீடு போலவே வீடு முழுக்க உறவினர்களையும் பணியாளர்களையும் கொண்டது தான் மீனாவின் வீடு.

ஊரில் கூண்டுக் கிளியாக இருக்கப் பிடிக்காமல் சென்னை வந்த மீனா, தன்னந்தனியாக நின்று வாழ்ந்து காட்டி வருகிறாள்.

ஊரில் அவள் வீட்டில் உள்ள உறவினர்களும் மற்றவர்களும் அவளை வளர்த்த ஊர் தலைக்கட்டு ஆன அவளுடைய பெரியப்பாவிடம், “மீனா, தம்பி பொண்ணுங்கறதால தான் அவ போக்குக்கு விட்டு விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா?” என்று கேட்டனர்.

“ஆமாம் எங்க பரம்பரை பொண்ணு பட்டிணத்தில் சாதிக்கிறதை வேடிக்கை பார்க்கறேன்!” என்று சொன்னார் அவளுடைய பெரியப்பா.

வண்ணத்துப்பூச்சி போல் பறந்து கொண்டிருக்கும், தேனீ போல் ‘வேலை வேலை’ என்று இருக்கும் மீனாவும் மும்முரமான பணிகளுக்கு நடுவே காதல் வலையில் விழுந்தாள்.

காம்பவுண்டில் உள்ள ஓர் இளம்பெண் தோழி அவளிடம் இது பற்றிக் கேட்டாள்.

“பகுதி நேர காதல் தானே! எனக்கு அந்த நேரமும் மிச்சம். எல்லை மீறாமல் இருந்ததால் என் பெண்மை கெடாமல் போனது. எவரி திங் இஸ் பார் குட்!” என்றாள் மீனா முகத்தில் எந்த வருத்தமும் இல்லாமல்.

அன்றொரு நாள். வெயில் அதிகமான முற்பகல் வேளையில், ஒருகட்டுமான நிறுவனத்திற்கான புதிய புராஜக்ட் பற்றி விவாதிக்க அழைத்திருந்த ஒருவிளம்பர ஏஜென்சியின் அலுவலகம் நோக்கி மீனா, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள்.

நெடுஞ்சாலையில் ஆள் அரவமற்ற பகுதியில், ஓரத்தில் பைக்குடன் கட்டுடல் ஆடவன் விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். வண்டியை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்தாள்.

அந்த ஆடவன் சதீஷ்.

அவனைத் தூக்கப் பார்த்தாள்; முடியவில்லை. தொலைவில் உள்ள கட்டுமானப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பதின் பருவ இளைஞன், இவளைப் பார்த்து ஓடி வந்தான்.

“பல்க்கா இருக்காரு!” என்றபடியே அவனைத் தூக்கி ஓரத்தில் கிடத்தினான். அவனுடைய பைக்கை எடுத்து பத்திரமாக ஓர் இடத்தில் வைத்து விட்டு, ஓடிப் போய் ஆட்டோவை அழைத்து வந்தான்.

கஷ்டப்பட்டு ஆட்டோவில் சதீஷை கிடத்தி விட்டு, ஓட்டுநர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். “மல்லிகை ஆஸ்பிடலுக்குப் போங்க! நான் என் வண்டில பின்னாடி வரேன்!” என்றாள் மீனா. ஆட்டோ வேகமாகச் சென்றது.

மல்லிகை மருத்துவமனை. மருத்துவமனை ஊழியர்கள், ஸ்ட்ரெச்சர் எடுத்து வந்து சதீஷை அதில் வைத்து உள்ளே கொண்டு சென்றனர்.

மீனா, ஆட்டோக்காரரிடம் தொகையை கொடுத்தாள். “தாங்க்ஸ் தம்பி!” என்று அந்த பதின் பருவ இளைஞனிடம் ஒருதொகையை கொடுக்க அவன் வாங்க மறுத்து விட்டான்; நகரப் பார்த்தான்.

அந்த தொகையை ஆட்டோக்காரரிடம் கொடுத்த மீனா, “சார்! இந்த தம்பிய அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல விட்டு விடுங்க!” என்றாள். அவர் வாங்கிக் கொண்டார். பையன் ஆட்டோவில் அமர்ந்தான். ஆட்டோ நகர்ந்தது.

மருத்துவமனையின் உள்ளே சென்றாள் மீனா. அவளுடைய ஊரைச் சேர்ந்த, அவளுக்குத் தெரிந்த, கனமான உடல்வாகு கொண்ட, நடுத்தர வயது பெண்மணி செவிலி விஜயா இவளைப் பார்த்தார். சதீஷையும் பார்த்தார்.

“இவரா மீனா? எங்க அபார்ட்மென்ட்ல தான் இருக்காரு. இவரு தங்கச்சி நம்பர் என்கிட்ட இருக்கு. நான் சொல்லிடறேன்!” என்றார்.

“தாங்க்ஸ் சிஸ்டர்!” என்ற மீனா, “இது அவரோட முதுகுப்பை, போன், வாட்ச் அவருக்கு நினைவு திரும்பியதும் கொடுத்துடுங்க!” என்று ஒப்படைத்து விட்டு நகரப் பார்த்தாள்.

ஸ்ட்ரெச்சர் அருகே இருந்த மருத்துவமனை ஊழியர்கள், “மேம் ஒங்கள கூப்பிடறாரு!” என்று மீனாவை அழைத்தார்கள்.

மீனா, காதில் வாங்காமல் ‘விடுவிடு’வென மருத்துவமனையின் வாசலை நோக்கி விரைந்தாள்.

மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com

Comments

“தென்றல் மீனா” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] தென்றல் மீனா நாநா என்கிற நாராயணன் […]

  2. […] பழைய புத்தகம் பார்த்திபன் தென்றல் மீனா […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.