தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 35

மூடிய கண்களைத் திறந்து மெல்லத் தலையை நிமிர்த்தி எதிரே நின்ற மானாஸாவைப் பார்த்த நொடி அப்படியே அதிர்ந்து போனாள் நிமிஷா.

‘இவுங்க இவுங்க மானஸா இல்ல? ஆஃபீஸ்ல ஆதி திருமணம் செஞ்சுக்கப் போற பொண்ணு டாக்டருக்குப் படிச்சிருக்காங்க. பேரு மானஸாவாம்னு’ மேனேஜர் சொன்னது நிமிஷாவுக்கு ஞாபகம் வந்தது.

‘முந்தா நாளு நா சிவப்ரகாஷ் ட்ரேடிங் கம்பெனில இன்ட்டர்வ்யூ முடிச்சிட்டு வெளில வந்து படி எறங்கும் போது வாசல்ல வந்து நின்ன டூவீலர்ல ஆதியும் பின் சீட்டுல இவங்களும் ஒக்காந்திருந்தாங்கள்ள!

இவுங்க மானஸாதான் இவங்க!

ஏன் இங்க?

அதுவும் எனக்கு முன்னாடி வந்து நிக்கிறாங்க?

நேத்து சாயந்திரம் ஆதி!

நாளைக்கு எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம்னு சொல்லி நிமிஷா நல்லா வயித்தெரிச்சப்படட்டும்னு அழைக்க வந்தாங்களோ?

ஆதிதா அனுப்பியிருப்பாரோ?

ஆதி இந்த அளவுக்கு மட்டமானவரா?’

வினாடிக்கும் குறைவான நேரத்திற்குள் நிமிஷாவுக்கு இந்த எண்ணம் தோன்ற மானஸாவைப் பார்த்தது பார்த்தபடி அசைவற்று அமர்ந்திருந்தாள்.

“வணக்கம் மிஸ்.நிமிஷா! நா மானஸா!” என்றாள் மானஸா.

“மானஸாவா? யாரையும் எனக்குத் தெரியாது!”

“எனக்கு ஒங்களத் தெரியும். அதா பேச வந்தேன். உட்காரலாமா நிமிஷா?”

பதிலேதும் சொல்லவில்லை நிமிஷா; பேசாமல் அமர்த்திருந்தாள்.

“நா ஒங்ககிட்டப் பேசணும்!”

“பேச என்ன இருக்கு?” வார்த்தையை உதிர்த்தாள் நிமிஷா.

“எனக்கு இருக்கே! ப்ளீஸ் மிஸ் நிமிஷா! எனக்கு இருக்குற குறைவான நேரத்துக்குள்ள ஒங்க கிட்ட எல்லாத்தியும் சொல்லிட நினைக்கிறேன்.

ப்ளீஸ்! ப்ளீஸ்! ஒங்ககிட்டப் பேச எனக்கு சம்மதம் குடுங்க நிமிஷா!” கெஞ்சுவதைப் போல் கையெடுத்துக் கும்பிட்டாள் மானஸா.

“என்ன சொல்லப் போறீங்க? நாளைக்கு நடக்கப் போற ஒங்க நிச்சயதார்த்தம் பத்தி தெரிவிக்க அனுப்பப்பட்டுருப்பீங்க.

அத சொல்லத்தானே வந்தீங்க. சொல்ல வந்ததுக்கு நன்றி. வாழ்த்துக்கள்! வரீங்களா?” என்றாள் நிமிஷா கையெடுத்துக் கும்பிட்டு.

“நடக்கப் போறதில்லாத நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்து எதுக்கு நிமிஷா?”

சடாரென மானஸாவின் முகத்தைப் பார்த்தாள் நிமிஷா. “ஏன் தேதிய மாத்தியாச்சா?”

“இல்ல! நிச்சயம்னு ஒன்னு நிச்சயமா நடக்கப்போவதே இல்ல!”

“எந்தக் கதையும் கேக்குற மனநெலேல நா இல்ல!”

“ப்ளீஸ் நிமிஷா! நம்புங்க நிச்சயதார்த்தம்கிறது ஒருநாடகம்!”

அவநம்பிக்கையாய் மானஸாவைப் பார்த்தாள் நிமிஷா.

“ப்ளீஸ் நிமிஷா! என்ன நம்புங்க. எனக்கு இருக்குற நேரம் ரொம்பக் குறைவு. அந்த குறைவான நேரத்துக்குள்ள
ஒங்ககிட்ட சொல்ல வேண்டியத சொல்லிடனும்னு தவிக்கிறேன்.

நீங்க என்ன ஒக்காரச்சொல்ல வேண்டாம். இதையாவது தயவு செய்து பாருங்க ப்ளீஸ்!” என்றபடி தனது செல்ஃபோனை ஓப்பன் செய்து நிமிஷாவின் கண்ணெதிரே காட்டினாள்.

இன்று பத்தொன்பதாம் தேதி சனிக்கிழமை அமெரிக்கா நியூயார்க் செல்வதற்காக ஒன்பது மணிக்குக் கிளம்பும் ஃப்ளைட் டிக்கெட் மானஸாவின் பெயரில் மெயிலிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டிருந்த அந்த டிக்கெட்டைப் பார்த்துக் குழம்பிப் போனாள் நிமிஷா.

‘என்ன இது? நாளை நிச்சயதார்த்தம்; இன்னிக்கு இரவு இவங்க அமெரிக்கா கிளம்புறாங்க!’ குழப்பத்தை முகத்தில் காட்டாமல் மானஸாவைப் பார்த்தாள் நிமிஷா.

“நீங்க இந்த டிக்கெட்டையும் நம்பல இல்ல! நிமிஷா ப்ளீஸ் நா ஒக்காரணும். ரொம்ப பதட்டத்துல இருக்கேன். நிக்க முடியல!”

அறைவவாசலில் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் போய் அமர்ந்தனர்.

துரை நாற்காலியிலிருந்த இறங்கி அறைக்குள் சென்று ஜன்னலோரமாய் கீழே அமர்ந்தான்.

“நிமிஷா! நா ஏற்கனவே கல்யாணம் ஆனவ!”

மொத்தமாய் அதிர்ந்து போனாள் நிமிஷா.

“இங்க பாருங்க!” செல்லிலிருந்த சில ஃபோட்டோக்களைக் காட்டினாள். ஜேம்ஸ்ஸும் மானஸாவும் சர்ச்சொன்றில் மோதிரம் மாற்றிக் கொள்வதுபோல, கிறிஸ்துவ முறைப்படியான திருமண ஃபோட்டோக்கள்.

அடுத்ததாய் பிள்ளையார் கோயிலொன்றில் இந்து முறைப்படி இருவரும் மாலையும் கழுத்துமாய்த் திருமண கோலத்தில்.

ஃபோட்டோக்களை அதிர்ச்சியோடு பார்த்தாள் நிமிஷா;கண்களை நம்ப முடியவில்லை.

“இங்க பாருங்க நிமிஷா!” சொல்லிக் கொண்டே சட்டென கழுத்தில் அணிந்திருந்த செயினை டாப்ஸுக்குள்ளிருந்து வெளியே எடுத்துக் காட்டினாள்.

நான்கு விரட்கட்டை மஞ்சள் கயிற்றில் மிகச்சிறிய சைஸ் மாங்கல்யமொன்று செயினோடு இணைக்கப்பட்டிருந்தது.

“பாத்தீங்களா நிமிஷா! தாலிச்செயின். ஜேம்ஸ் எனக்கு அணிவித்தது. இப்பவாவது நா கல்யாணமானவன்னு நம்புறீங்காளா நிமிஷா?”

திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள் நிமிஷா.

“இப்ப நம்புறீங்களா நாளைக்கு நிச்சயதார்த்தம்கிறது நடக்கப் போகாத ஒன்னுன்னு! நிமிஷா! ஆதித்யா ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்.

ஒங்கள உயிருக்குயிரா நேசிக்கிறாரு நிமிஷா! நிமிஷா! நிமிஷான்னு எப்பவும் ஒங்க நெனைப்புதான் ஆதித்யாவுக்கு.

ஆதித்யா தன்னோட அப்பா அம்மாகிட்ட ஒங்கள நேசிக்கிறதாவும் திருமணம் பண்ணிக்க விரும்புறதாவும் சொல்லிருக்காரு.

ஆனா அவுரோட பெத்தவங்க, ஆதித்யா ஒங்களத் திருமணம் செய்ய சம்மதிக்கல.

இவரு பிடிவாதம் பிடிக்கவே தூக்க மாதிரையத் தின்னு தற்கொல பண்ணிப்போம்னு ஆதித்யாவ மெரட்டிருக்காங்க.

இதற்கிடையில எங்கம்மா படுத்த படுக்கையா இருக்குறதுனால அமெரிக்கால மருத்துவ மேற்படிப்புப் படிக்கிற நான் அம்மாவப் பாக்க ஒருவாரம் லீவுல வந்தேன்.

என்னோட அம்மா ரொம்ப உடல்நலம் பாதிச்சிருக்காங்க. உண்மையச் சொல்லனும்னா ஷி ஈஸ் கவுன்ட்டிங் ஹர் டேஸ்னுதா சொல்லணும்!” கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் மானஸா.

“அம்மா என்னோட கல்யாணத்தப் பாத்துட்டுக் கண்ண மூடணும்னு சொன்னதுனால அப்பா மாப்ள தேடினப்பதான் தன்னோட நெருங்கின நண்பர் திரு.கோவர்த்தன் சாரோட மகன் ஆதித்யாவ எனக்குப் பேசி முடிக்க ஆதித்யா அப்பாட்ட பேசிருக்காரு..

ஆதித்யா அப்பாவும் ஓகேன்னுட்டாரு.இது தெரியாத ஆதித்யா ஒங்களப் பத்தி தம் பெத்தவங்ககிட்ட பேச, அவுங்க மறுத்துருக்காங்க. என்னத் திருமணம் பண்ணிக்கனும்னு வற்புறுத்தியிருக்காங்க.

ஆதித்யா மறுத்துருக்காரு! அதுனால ஆதித்யாவப் பெத்தவங்க தற்கொல பண்ணிப்போம்னு பயம்காட்டி மெரட்ட வேற வழியில்லாம என்னைப் பொண்ணு பாக்க வந்தாரு ஆதித்யா.

அவுரு என்ன நிமிந்துகூட பாக்கல! தனியா பேசனும்னா பேசுங்கனு எங்கப்பா சொன்னப்ப பேச ஒன்னுமில்லனுட்டாரு ஆதித்யா.

அப்படி ஆதித்யா சொன்னப்பவே அவருக்கு இந்த கல்யாண ஏற்பாடுல விருப்பமில்லனு எனக்குப் புரிஞ்சி போச்சி. நானும் அததா விரும்பினேன்.

ஏன்னா நிமிஷா நா அமெரிக்காவுல ஜேம்ஸ் வில்லியம்கிற அமெரிக்கர லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது என்னோட அப்பா அம்மாவுக்குத் தெரியாது. சொல்லப் பயமா இருந்திச்சி.

நா பெத்தவங்க அனுமதி இல்லாத கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புதான்.

ஆனா அப்பாவோட சம்மதத்த கேட்டிருந்தா நிச்சயமா ஒரு அமெரிக்கன, வேற்று மதத்தவன, மாப்ளயா நிச்சயமா எங்கப்பா ஏத்துக்க மாட்டாரு. சம்மதம் தந்திருக்க மாட்டாரு.

படிச்சது போதும்னு இந்தியாவுக்கு என்னை இழுத்துக்கிட்டு வந்திருப்பாரு. ஜேம்ஸ் இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நெனச்சுக்கூடப் பாக்க முடியாது நிமிஷா!

அதா அப்பாவோட சம்மதம் வாங்காமலே ஜேம்ஸ
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

நான் ஜேம்ஸ கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சிருந்தா என்னோட அப்பா, படுத்த படுக்கையா கெடக்குற எங்கம்மாவ பாக்க என்ன அனுமச்சிருக்க மாட்டாரு. வீட்டுக்குள்ளயே என்ன நுழைய விட்ருக்க மாட்டாரு.

அதா எதையும் சொல்லாத அம்மாவப் பாக்க வந்தேன்.வந்த நேரத்துல இப்பிடி எனக்கும் ஆதித்யாவுக்கும் கல்யாணம் பேசி நாளைக்கு நிச்சயதார்த்தம்னு ஏற்பாடு பண்ணிட்டாங்க.

இதுல ஆதித்யாவுக்கும் எனக்கும் உடன்பாடு இல்லை. நான் ஏற்கனவே திருமணமானவள். ஆதித்யா ஒங்கள விரும்புறவர்.

தனக்கு என்னிடம் பேச ஒன்றுமில்லை என்ற ஆதித்யாவிடம் எனக்கு உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்லி தனியாய்ப் பேசினேன்.

அப்பிடிப் பேசும்போது நா நிமிஷாங்கற பொண்ண விரும்புறேன். இந்த திருமண ஏற்பாட்டுல எனக்குச் சம்மதமில்லனுட்டாரு ஆதித்யா.

ஆதித்யாகிட்ட ஆமாம் எனக்கும் சம்மதமில்ல. எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து என்ற உண்மையச் சொன்னேன். அப்பா, அம்மாட்ட எனக்குக் கல்யாணம் ஆனத மறச்சிட்டேன்.

சொன்னா அப்பா திரும்ப அமெரிக்கா என்ன போகவிட மாட்டாரு. அம்மாவோட ஒரு நிமிஷம் கூட இருக்கவும் அனுமதிக்க மாட்டாருன்னு சொன்னேன்.

நான் சனிக்கிழம மீண்டும் அமெரிக்கா போக டிக்கெட் வாங்கிட்டதாகவும் அந்த சனிக்கிழமவர நான் அம்மாவோட இருக்ணும்னா இந்த கல்யாணதுக்கு நா சம்மதிக்கறா மாரி நடிக்கணும்.

அதுக்கு நீங்கதா உதவனும்னு ஆதித்யாகிட்டக் கேட்டுக்கிட்டேன். ஆதித்யாவோட நல்ல மனசு அவுரு எனக்கு உதவ ஒத்துக்கிட்டாரு.

அதும்படி ரெண்டு பேருக்கும் ஒத்தரருக்கு ஒருத்தர புடிச்சிருக்குறதா பொய்யா பெரியவங்க கிட்ட சொன்னோம்; நாடகம் போட்டோம்.

நிமிஷா எல்லா உண்மையையும் சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ணுறதுக்காக நாங்க போடும் நாடகத்துல நடிக்க ஆதித்யா ஒங்க சம்மதம் வாங்க நூத்துக்கணக்கான முறை ஒங்குளுக்கு ஃபோன் பண்ணியும் நீங்க ஃபோன எடுக்கலன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.

நிச்சயதார்த்தம் பத்தி ஒங்க காதுல விழணும். நீங்க ஆதித்யா விட்டு நகரணும்னு ஒங்க ஆஃபீஸ்க்கு தெரிவிச்சதும் ஒங்கள வேற பிராஞ்சுக்கு மாத்தினதும் ஆதித்யாவோட அப்பாதான். ஆதித்யா இல்ல!”

பேசிப் பேசி மூச்சு வாங்கியது மானஸாவுக்கு.தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.

சிலையாய் அமர்ந்திருந்தாள் நிமிஷா.

என்ன காரணாமோ சேரிலிருந்து இறங்கி துரை அறையிலிருந்து வெளியே சென்றான்.

நிமிஷாக்கா ஆதித்யா என்பவரை விரும்பியதும் ஆதித்யா நிமிஷாக்காவை உயிராய் நேசிப்பதும் அக்காவிடம் அந்தப் பெண் சொல்லிக் கொண்டிருந்த விபரங்களிலிருந்து புரிந்துபோனது துரைக்கு.

‘அய்யோ! அக்கா விரும்பினது ஒத்தர! கல்யாணம் பண்ணிக்கப்போவது ஒரு குடிகாரன!

அதுவும் நாப்பது வயசாகப் போறவன ரெண்டாந்தாரமா. பணம், பணம், பணம் பாழும் பணம்தான் அக்கா வாழ்க்கையில வெளயாடுது’ தவித்துப் போனது மனசு.

மருத்துவமனை வாசலில் போய் அமர்ந்து கொண்டான். அக்காவை நினைத்து அழுகையாய் வந்தது.

மறுபடி பேச ஆரம்பித்தாள் மானஸா.

“நிமிஷா! ஆதித்யா நீங்க தன்னோட ஃபோன் நம்பர ப்ளாக் பண்ணிட்டதா ரொம்ப ஃபீல் பண்ணாரு!

ஒங்ககிட்ட நடக்குறதெல்லாம் சொல்லனும்னு நீங்க வேலைய ரிசைன் பண்ணினது தெரியாம ஒங்கள சந்திக்க மணிக்கணக்குல பீச் ஸ்டேஷன்ல காத்துக்கிட்டு ஒக்காந்திருந்ததா ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாரு.

நேத்துகூட இங்க நீங்க இருப்பீங்களோன்னு நெனச்சு வந்து காத்துக்கிட்டிருந்துக்காரு. நிமிஷா! ஆதித்யா பாவம்! ரொம்ப பாவம்!” என்றாள்.

“நீங்க சிவப்ரகாஷ் கம்பெனி வாசல்ல டூவீலர்ல எங் ரெண்டுபேரையும் பாத்து தப்பா நெனைச்சிருப்பீங்க.

நிச்சயதார்த்த டிரெஸ் எடுக்கன்னு டி.நகருக்கு வந்தோம். அதுவும் எங்க நாடகத்துல ஒரு பகுதிதான்.

அந்த கம்பெனி வாசல்ல ஒங்களப் பாத்ததும் நிமிஷான்னு கத்திக்கிட்டே ஒங்க பின்னாடியே ஓடி வந்தாரு ஆதித்யா!.பாவம் அவரு!”

நடக்கப் போகாத நிச்சயத்துக்கு தேவையில்லாம ட்ரெஸ் வாங்க வந்தோம்.

மொத்தத்துல நா இன்னிக்கு நைட் ஒன்பது மணிக்கு அமெரிக்காவுக்கு ஃப்ளைட் ஏறினதும் நாங்க போடுற நாடகம் முடிஞ்சிடும் நிமிஷா.

நிச்சயதார்த்தம் நின்னு போயிடும். ஆதித்யா ஃப்ரீயாயிடுவாரு. அப்புறம் யாரு தடுத்தாலும் சரி ஏன் இந்த
ஒலகமே தடுத்தாலும் சரி அவரு ஒங்களோட ஆதித்யாவா ஆகிடுவாரு நிமிஷா!

ப்ளீஸ் நிமிஷா! ஆதித்யாவ தப்பா நெனைக்காதிங்க. என்னாலதான் ஒங்க ரெண்டு பேருக்கும் இத்தன
பிரச்சனை. நா அவர என்னோட நாடகத்துல நடிக்கும்படி கேட்டுக்கலன்னா இவ்வளவு ப்ரர்ச்சன ஏற்பட்டுருக்காது.

ஸாரி நிமிஷா! என்னை மன்னிச்சிடுங்க நிமிஷா!” என்று சொல்லி நிமிஷாவின் கையைப் பற்றிக் கொண்டாள்
மானஸா.

“ப்ளீஸ்! இதுக்குமேல எதுவும் சொல்ல வேண்டாம். எது பத்தியும் பேசவேண்டாம். இனி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை!”

“நீங்களும் ஆதித்யாவும் மறுபடி ஒன்னு சேரணும் நிமிஷா!” என்றாள் மானஸா தழுதழுத்த குரலில்.

“இல்ல! இனி அதுக்கு வழியே இல்ல! எல்லாம் முடிஞ்சிடிச்சி. நீங்க காலங்கடந்து வந்திருக்கீங்க!” சொல்லும் போதே நெஞ்சை அடைத்தது நிமிஷாவுக்கு.

“நிமிஷா என்னாச்சு நிமிஷா? ஏன் இப்பிடிப் பேசுறீங்க?” அதிர்ச்சியாய்க் கேட்டாள் மானஸா.

“வேண்டாம் நா எதையும் சொல்ல விரும்பல. சொல்லுறதுனால இனிமே எதுவும் மாறப் போறது இல்ல! நீங்க என்னைத்தேடி வந்து எல்லாத்தையும் விளக்கிச் சொன்னதுக்கு நன்றி.

மிஸ்டர் ஆதித்யாவுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையணும்னு என் வாழ்த்துக்களத் தெரிவிச்சிக்கிறேன்.
ரொம்ப நன்றி மிஸஸ்.மானஸா!” கையெடுத்துக் கும்பிட்டாள்.

கண்களில் கண்ணீர் கோர்த்தது. முகத்தைக் கைகளில் பதித்தபடி குனிந்து கொண்டாள்.

‘இனிமேலும் நிமிஷா பேசமாட்டாங்க!’ என்று நினைத்ததுபோல் நீண்ட பெருமூச்சோடு எழுந்தாள் மானஸா.

எழுந்து நின்றவள் “நிமிஷா!” என்றாள் மறுபடியும். நிமிஷா நிமிரவே இல்லை. நிமிஷாவின் உடல் குலுங்குவதிலிருந்து அவள் அழுகிறாள் என்பது புரிந்தது மானஸாவுக்கு.

“நிமிஷா! ப்ளீஸ் நிமிஷா! ஏன் நிமிஷா அழுறீங்க? நிச்சயமா ஆதித்யா ஒங்களத் தேடி வருவாரு.

மறுபடியும் சொல்றேன் நான் ஃப்ளைட்ல ஏறிட்டேன்னா எல்லா ப்ரர்ச்சனையும் தீந்துடும். அழாதிங்க நிமிஷா!” அருகில் போய் ஆதரவாய் குனிந்து அழும் நிமிஷாவின் முதுகைத் தொட்டாள் மானஸா.

“ப்ளீஸ் மிஸஸ் மானஸா! எதுவும் பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்! கிளம்புங்க!” என்றாள் நிமிஷா நிமிர்ந்து பார்க்காமலேயே.

“ப்ச்.. கடவுளே!” என்றபடி கிளம்பினாள் மானஸா.

மணி நாலே முக்காலைத் தொடவிருந்தது.

மனம் முழுதுவும் பாரமாய் இறுக்கமாய் இருந்தது மானஸாவுக்கு.

‘இனிமே எதுவும் மாறப் போறதில்லேன்றாங்க நிமிஷா. ஆதித்யாவுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய வாழ்த்துக்கள்ன்றாங்க! என்ன சொல்ல வராங்க! புரியலியே!’

மருத்துவனையிலிருந்து வெளியேறும் வாயிலை நோக்கி நடந்தாள் மானஸா.

வாயிலை நெருங்கிவிட்ட சமயம் “அக்கா!” என்ற குரல் அழைக்கவே, ‘என்னப்1போய் அக்கான்னு யார் கூப்பிடப் போறாங்க?’ என நினைத்தவளாய்த் திரும்பிப் பார்த்தாள்.

கைகூப்பி வணங்கியபடி மீண்டும் “அக்கா!” என்றான் வாசலில் உயரம் குறைவாய் அமைக்கப்பட்டிருந்த நீண்ட சிமென்ட் மேடையில் அமர்ந்திருந்த துரை.

‘இந்தப் பையன் நிமிஷா இருந்த அறைக்கு வெளியே சேரில் உட்கார்ந்திருந்த பையன்ல!’ அவனைப் பார்த்தபடி தயங்கி நின்றாள் மானஸா.

மேடையைவிட்டு இறங்க முற்பட்டவனைத் தடுத்துவிட்டுத் தானே அவனருகில் சென்றாள்.

“அக்கா நீங்க நிக்கிறீங்க! நா..”

“பரவால்ல! சொல்லுங்க தம்பி!”

“அக்கா நான் நீங்க உள்ளாற பேசிக்கிட்டிருந்தீங்களே நிமிஷாக்கா! அவுங்க தம்பி ராஜதுரை. முக்கியமான விஷயம் சொல்லணும்கா ஒங்க கிட்ட!”

“ஓ! நீங்க நிமிஷா தம்பியா?” பரபரப்பானாள் மானஸா.

“சொல்லுங்க தம்பி! சொல்லுங்க!”என்றாள்.

“அக்கா! நாளைக்கு நிமிஷாக்காவுக்கு நிச்சயதார்த்தம். முகூர்த்த ஓல எழுதப் போறாங்க! நிமிஷாக்கா ஒங்ககிட்ட சொன்னாங்களா?”

“அய்யோ!” என்று வாய்விட்டுக் கத்திவிட்டாள் மானஸா.

‘நிமிஷாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தமா?’ பக்கென்றானது.

(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

Comments

“தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 35” மீது ஒரு மறுமொழி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.