கார் மீனம்பாக்கம் விமான நிலையத்தைத் தொட்ட போது நேரம் ஆறு இருபது.
மீனம்பாக்கம் ஏர்போர்ட் வரும் வரை எத்தனை தடவை முயன்றும் ஆதித்யாவோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. கலவரமானாள் மானஸா.
வெயிட்டிங் ரூமில் வந்து உட்கார்ந்து கொண்டாள். விமானம் கிளம்ப இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது.
அதிகம் பேர் அமராத பகுதி இருக்கிறதா?’ எனக் கண்களால் சுற்றிப் பார்த்தாள்.
காலியாகக் கிடக்கும் நாற்காலிகள் பகுதி தென்படவே உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து அங்கு போய் அமர்ந்தாள்.
கையிலிருக்கும் ஃபோன் அழைக்கவே ‘ஆதித்யாவாய் இருக்குமோ!’ என்று அவசரமாய்ப் பார்த்தாள்.
கணவர் ஜேம்ஸ்ஸின் அழைப்பு. “ஹாய் ஸ்வீட்டி!” என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிஷம் கொஞ்சித் தீர்த்தான்.
மானஸா கொஞ்சும் மூடில் இல்லை என்பதால் தடுமாறினாள். ஒருவழியாய் ஜேம்ஸை சமாளித்தாள்.
ஒருஐந்து நிமிடம்தான் ஆகியிருக்கும் மறுபடியும் ஃபோன் சிணுங்க, “அப்பா!” பகீரென்றது மானஸாவுக்கு.
வியர்த்துப் போனாள். பதட்டம் காண்பிக்காது இயல்பாய்ப் பேச முயன்றாள்.
“மானஸா! என்னம்மா இவ்வளவு நேரம். நாலுமணி அஞ்சு மணிக்குள்ள வந்துடுவேன்னு சொன்ன மணி ஏழாவுது?”
கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“இல்லப்பா! ப்யூட்டி பார்லர்ல வேல முடிஞ்சிடுச்சுப்பா. ஆனா பொட்டிக் ஷாப்ல சிலதெல்லாம் வாங்க வேண்டியிருந்து.
அந்த வேலையும் முடிஞ்சிட்டுது. தோ கிளம்பிட்டேன்ப்பா! எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்ப்பா!” நெஞ்சறியப் பொய் சொன்னாள்.
“கார்னா அனுப்பட்டுமா? எங்க இருக்கனு சொல்லு அனுப்புறேன்!”
“அய்யோ அப்பா! கார்லா வேண்டாம். நானே கார் ஏற்பாடு பண்ணி ஏறிட்டேன். வந்துகிட்டே இருக்கேன். வந்துடுவேன்ப்பா!”
“சரிமா பத்ரம்!”
ஃபோன் கட்டானது.
காரில் வரும்போது காரை நிறுத்தச் சொல்லிக் கடையில் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து இரண்டு பிஸ்கெட் தின்று தண்ணீர் குடித்தாள்.
கண்களை மூடி சேரில் சாய்ந்தாள். ரொம்பவும் சோர்வாய் இருந்தது.
‘ஆதித்யா ஃபோனை எடுக்கவில்லை!’ என்ற கவலை ஒருபுறம். தான் வீட்டுக்குப் போகா விட்டால் வீட்டில் என்ன நிலை ஏற்படும்?
ஊரும் உறவும் என்ன பேசும்? அனைவருக்கும் முன் அப்பா எப்படித் தலை குனிவார்?’ இமயமளவிற்கு வேதனையும் பயமும் இதயத்தை வந்து அடைத்துக் கொண்டன; கைவிரல்கள் பயத்தில் சில்லிட்டுப் போயின.
மணி ஏழு நாற்பது. ஃபோன் அழைத்தது. ஆதித்யா.
அவசரமாய் “ஹலோ!” என்றாள்.
“ஸாரி! ஸாரி! நீங்க நிறைய தடவ ஃபோன் பண்ணிருக்கீங்க. நா செல்ஃபோன சார்ஜ்ல போட்ருந்தேன். பட் ஸ்விட்ச ஆன் பண்ண மறந்துட்டேன்.
ரொம்ப நேரம் கழிச்சுதான் பாத்துட்டு ஸ்விட்ச் ஆன் பண்ணேன். இருக்குற சார்ஜ் போதுமின்னு பேசறேன். இப்ப எங்க இருக்கீங்க மிஸஸ்.மானஸா?” படபட வென்றுப் பேசித் தீர்த்தான் ஆதி.
“மிஸ்டர் ஆதித்யா! நா ஏர்போட்டுக்கு வந்துட்டேன். ரொம்ப பயமாருக்கு. ப்யூட்டி பார்லருக்குப் போறதா சொல்லி மத்யானம் ஒன்னர மணிக்கு கிளம்பினவ.
அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்லி சொன்னபடி போகாததுனால ஏழுமணிக்கே அப்பா இன்னும் ஏன் வீட்டுக்கு வரலன்னு கேட்டுப் ஃபோன் பண்ணாரு.
கார்ல ஏறிட்டதா பொய் சொன்னேன். தோ! அப்பா மறுபடியும் பண்றாரு! இனிமே கெளம்பிட்டேன்னுலாம் சொல்ல முடியாது.
நா அப்பாவுக்கு ஃபோன எடுத்துப் பதில் சொல்லலனா பயந்துக்குவாரு! ப்யூட்டி பார்லருல விசாரிப்பாரு.
அவுங்க நா வல்லனு சொல்லிடுவாங்க. அப்பாக்கு சந்தேகம் வந்திடும். பயமாருக்கு மிஸ்டர் ஆதித்யா!”
ஆதிக்கு ‘மானஸாவின் பயம் சரிதான்!’ எனப்பட்டது. மானஸாவுக்கு தைரியம் சொல்ல முடியாமல் தவித்தான்.
எங்கப்பாவுக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்டுல பெரிய அதிகாரிங்களத் தெரியும்.
அவுங்கள துணையோட என் ஃபோன் நம்பர வெச்சு நா எங்க இருக்கேன்னு ட்ரேஸ் பண்ணிடுவாரு. அதுனால நா வேற நம்பர்லேந்து ஒங்ககிட்டப் பேசுறேன். இந்த நம்பர் அப்பாவுக்குத் தெரியாது.”
வேறு நம்பரிலிருந்து பேசினாள் மானஸா.
“மிஸ்டர் ஆதித்யா! நா அப்பாகிட்ட சொன்னபடி ப்யூட்டி பார்லருக்குப் போகல. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் போய் நிமிஷாவப் பார்த்தேன்!”
அதிர்ந்தே போனான் ஆதி.
“என்னது! என்னது! நிமிஷாவப் பாத்தீங்களா? என்ன சொல்றீங்க மிஸஸ்.மானஸா?” ஃபோனில் பேசுவதை மறந்து கத்தினான்.
“ஆமாம் மிஸ்டர் ஆதித்யா! நிமிஷா ரொம்ப அப்செட்டா இருக்காங்க. அவுங்க பேசினது ரொம்ப ரொம்பக் குறைவு. அந்தக் குறைவான பேச்சையும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாங்க.
நா அவுங்ககிட்ட எல்லாத்தியும் விரிவா விபரமா சொல்லிட்டேன். என் தாலியக்கூட வெளியே எடுத்துக் காண்பிச்சேன்.
எனக்கும் ஆதித்யாவுக்குமான நிச்சயதார்த்தம் பொய். அது ஒரு நாடகம்னேன். எனக்கு உதவவே மிஸ்டர் ஆதித்யா என்னோட நாடகத்துல நடிக்க ஒத்திக்கிட்டாரு.
நா இன்னிக்கு அமெரிக்கா போக நைட் ஃப்ளைட் ஏறிடுவேன். அதுக்கப்புறம் நானும் ஆதித்யாவும் போடும் நாடகம் முடிஞ்சிடும்.
நிச்சயதார்த்தம் நாங்க ஆசப்பட்டபடி நின்னு போயிடும். ஆதித்யா ஒங்களாத் தேடி வருவாரு நிமிஷான்னேன்.
ஆனா அவுங்க இனிமே எதையும் மாத்த முடியாது. காலங்கடந்து போச்சுனு சொல்லி கைகளுக்குள்ள முகம் பதிச்சி அழுதாங்க. அவுங்க அழறதப்பாத்து நா கலங்கிட்டேன் மிஸ்டர் ஆதித்யா!
ஏன் இப்பிடி சொல்றீங்க? காரணத்த சொல்லுங்கனு! கெஞ்சினேன். சொல்ல மறுத்துட்டாங்க.
ஆதித்யாவுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையணும்னு வாழ்த்தறேன்னு சொல்லிட்டு அழுதாங்க.
ஆனா நாளைக்குத் தனக்கு நிச்சயதார்த்தம்னு நிமிஷா சொல்லல. ஆனா உண்மையில நிமிஷாவுக்கு நாளைக்குத் திருமண நிச்சயதார்த்தம்!” மானஸா சொல்லி முடித்ததும் “ஐயோ!” என்று கத்திவிட்டான் ஆதி.
செல் ஃபோனைப் பிடித்திருந்த கை நடுங்கியது. இதயம் கலவரப் பிரதேசம் ஆனது.
“மிஸ்டர் ஆதித்யா! இத நிமிஷா எங்கிட்ட சொல்லல. அவங்க தம்பிதா சொன்னாரு!”
நிமிஷாவின் தம்பி துரை தன்னிடம் சொன்ன அனைத்தையும் ஒன்று விடாமல் மொத்தமாய்ச் சொல்லி முடித்தாள் மானஸா.
எல்லாம் புரிந்துபோனது ஆதிக்கு.
ஆக நிமிஷா ஐந்து லட்சம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தாலும் அப்படி உடனடியாய்ப் பணத்தைக் கொடுக்காவிட்டால் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் என்ற மிரட்டலுக்கு பயந்தும் கடன் கொடுத்தவனின் நாற்பது வயது குடிகாரமகனுக்கு ரெண்டாந்தாரமாய் வாழ்க்கைப்பட ஒப்புக் கொண்டிருப்பதும் வட்டிக் கடைக்காரன் நிமிஷாவின் சம்மதத்தை பேப்பரில் எழுதி கையெழுத்து வாங்கி இருப்பதும் ஆதிக்குப் புரிந்து போனது.
‘நான் ஒரு பாவி. நா காதலிக்கிறதா நம்ப வெச்சு ஏமாத்திட்டதா நெனச்சும் கூட அவுங்க இந்த முடிவுக்கு வந்துருப்பாங்க!’
“மிஸஸ் மானஸா! நிமிஷாவ இந்த இக்கட்டுலேந்து காப்பாத்தியாகணும்.
அந்தக் குடிகாரப் பாவியோட ரெண்டாந்தாரமா நிமிஷா ஆகிட்டாங்கன்னா சத்தியமா நா உயிரோட இருக்க மாட்டேன்!” அழுதே விட்டான் ஆதி.
“ஆதித்யா!மணி எட்ட நெருங்கிடுச்சி.இன்னும் ஒருமணி நேரத்துல நா ஃப்ளைட்டுல ஏறிடுவேன். எட்டர மணிக்குள்ள எங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி என்னப் பத்தின எல்லா உண்மையையும் சொல்லிடுவேன்.
அப்பா படப்போற அவமானத்த நெனச்சா கஷ்டமாதா இருக்கு. காலம்தான் அவர ஆறுதல் படுத்தணும்.
ராத்திரியே நிச்சயதார்த்தம் நின்னு போனது பத்தி ஒங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடும்.
ஒங்க பேரண்ட்ஸ் ஆவேசப்படுவாங்க, கத்துவாங்க, என்னைக் கேவலமா பேசுவாங்க, ஒங்ககிட்ட மன்னிப்பு கேட்டு அழுவாங்க. நிமிஷாவயே கட்டிக்கச் சொல்லி சம்மதம் சொல்லுவாங்க.
நாளை மதியம் மூணுலேர்ந்து நாலரைக்குள்ள ஜெயசூர்யா கல்யாண மண்டபத்துல நிமிஷாவுக்கும் அந்த குடிகாரனுக்கும் நிச்சயதார்த்தம்.
நீங்க நிச்சயம் நடக்குறதுக்குள்ள அந்த கல்யாண மஹாலுக்குப் போயிடுங்க. அந்தப் பாவி வட்டிக் கடைக்காரனுக்கு நிமிஷா குடுக்க வேண்டிய அஞ்சு லட்சத்தோட இன்னும் சில லட்சத்த சேர்த்து அவன் மூஞ்சில எறிஞ்சி நிமிஷா கையெழுத்துப் போட்டுக் குடுத்த பேப்பர வாங்கி கிழிச்சிப் போடுங்க.
அவன் முரண்டுபிடிச்சான்னா, கடனத் திருப்பிக் குடுக்கலேன்னு ஒருபொண்ண, அவுளுக்கு விருப்பமில்லாத ஒருத்தன அவள வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எழுதி வாங்குறது சட்டபடி குத்தம்னு சொல்லுங்க.
கடனா குடுத்த பணத்துக்கு நியாயமான வட்டி வாங்கலாமேயொழிய கந்துவட்டி வசூலிக்கிறது சட்டப்படி குத்தம்னு சொல்லுங்க. போகும்போது போலீஸையும் வக்கீலயும் அழைச்சிகிட்டுப் போங்க.
அவன் எகிறினான்னா அவனப் புடிச்சி ஜெயில்ல போட ஏற்பாடு பண்ணுங்க. அவன் செய்யிறது சட்டப்படி குற்றச் செயல்தான்.
மிஸ்டர் ஆதித்யா எப்பிடியாவது நிமிஷாவ இந்த நிச்சயதார்த்தம் நடக்காம காப்பாத்தி ஒங்க நிமிஷாவா ஆக்கிக்குங்க.நா இத ஒங்குளுக்கு சொல்லவே வேண்டாம்.
இன்னொன்னையும் நான் ஒங்குளுக்குச் சொல்லனும். இனிமேலும் ஒருவேள ஒங்க பெத்தவங்க நிமிஷாவ மறுத்தா நீங்க பணியாதிங்க; எதிர்க்கவும் பயப்படாதிங்க; பயந்தவன் லவ் பண்ணக் கூடாது.
நாளைக்கு நிமிஷா சிரிக்கணும். அவுங்க அழுகை காணாமப் போகணும். தைரியமா செயல்ல இறங்குங்க மிஸ்டர் ஆதித்யா!
நா நியூயார்க் போனதுமே நீங்க தரப்போற சந்தோஷமான செய்திதான் என் காதுல விழணும். நீங்க எனக்கு செஞ்ச உதவிய நா என் வாழ்க்க பூராவும் மறக்க மாட்டேன்.
ரொம்ப ரொம்ப நன்றி மிஸ்டர் ஆதித்யா. எனக்கு உதவப் போகதா ஒங்களுக்கு இத்தனப் பிரச்சனை.
ஸாரி மிஸ்டர் ஆதித்யா! என்ன மன்னிச்சிடுங்க. ஒங்க முயற்சியில நீங்க ஜெயிச்சு மீண்டும் நீங்களும் நிமிஷாவும் ஒன்னு சேரணும். வாழ்த்துக்கள் மிஸ்டர் ஆதித்யா!
அப்பாகிட்ட பேசணும்.ஃப்ளைட் கிளம்பப் போவது பற்றி கொஞ்சநாழியில அறிவிச்சிடு வாங்க!”
“ஓ.கே. மிஸஸ் மானஸா! பயணம் சிறக்க வாழ்த்துக்கள். நா நிமிஷாவ இழக்கமாட்டேன். ஒலகமே எதுத்தாலும் இனிமே நிச்சயமா இழக்க மாட்டேன். பாத்துக்கிறேன்.
நிமிஷாவோட நெலம பத்தி எல்லா விபரங்களையும் சேகரித்து சரியான நேரத்துல தெரிவிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி மிஸஸ்.மானஸா! நாளை மறுநாள் ஃபோன் பண்றேன். பாய்!” என்று தழுதழுத்த குரலோடு முடித்தான் ஆதி.
“பை!” என்றாள் மானஸா.
பத்ரி முகத்தில் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தார்.
‘மாலை ஐந்து மணிக்குள் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்ற மகள் மணி எட்டு பத்தாகியும் இன்னும் வரவில்லை.ஏழு மணிக்குப் ஃபோன் செய்து கேட்டபோது காரில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னவள் சொல்லி ஒருமணி நேரமாயிற்று இன்னும் வீடுவந்து சேரவில்லை.
கவலையும் பயமுமாய் கலவரமானார் பத்ரி. ஏதாவது ஆக்ஸிடென்ட் கீக்ஸிடென்ட்.
ம்கூம் அதெல்லாம் இருக்காது. ஒருவேள ஆதித்யாவ மீட் பண்ணிருப்பாளோ. ரெண்டுபேருமா எங்கியாவது கடைக்கு அங்க இங்கனு.
ம்கூம் சான்ஸே இல்ல. கார்ல வந்துகிட்டு இருக்குறதானா சொன்னா? கார்ல வந்தா அரைமணி நேரந்தானே ஆகும். ஏழர மணிக்கே வந்திருக்கலாமே?
ஃபோன் ரிங்கானது. ‘மானஸாவோ?’ அவசரமாய்ப் பார்த்தார்; கார் டிரைவர்.
“ஐயா! சின்னம்மா வரவே இல்லனு ப்யூட்டி பார்லருல சொல்றாங்கையா!”
அதிர்ந்து போனார் பத்ரி.
பத்ரியின் முகம் பார்த்து நிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்த உறவினர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டார்கள்.
மணி எட்டு பதினேழு. ஃபோன் அழைத்தது. மானஸா.
ஃபோனை எடுத்தார் பத்ரி.
“என்னம்மா ஏழு மணிக்கு கார்ல வந்துகிட்டு இருக்கேன்ன மணி எட்டே கால் ஆகுது!” பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் மானஸா.
“ஐயோ!” என்று கத்தினார் பத்ரி.
செல்ஃபோன் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
‘படீர் படீரெ’ன்று தலையில் அடித்துக் கொண்டார். உறவுக்காரர்கள் பத்ரியைச் சூழ்ந்து கொண்டனர்.
(தென்றல் வீசும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!