“பத்ரி என்ன ஆச்சு? என்ன ஆச்சு? மானஸாக்கு ஒன்னுமில்லியே!” தலையிலடித்துக் கொண்டு கத்தும் தம்பியின் கைகளைப் பிடித்து நிறுத்தி பயத்தோடு கேட்டார் பத்ரியின் அண்ணன்.
“அண்ணே! ஐயோ! நா எப்பிடிண்ணே சொல்லுவேன்? நாம மோசம் போய்ட்டோம்ணே! பழிகாரி அமெரிக்காவுக்குப் ஃப்ளைட் ஏறிட்டாண்ணே!
அங்க எவனயோ ஏற்கனவே மேரேஜ் பண்ணிகிட்டேன்னு சொல்றாண்ணே! ஐயோ! இந்த அவமானத்த எப்டிண்ணே தாங்குவேன். நா செத்துர்றேன்! நா செத்துர்றேன்!” என்று கத்தியபடி இங்குமங்கும் ஓடினார்.
மீண்டும் மீண்டும் தலையிலடித்துக் கொண்டார்.
“போச்சு! போச்சு! எம் மானம் மரியாத எல்லாம் போச்சு! நிச்சயம் வரைக்கும் கொண்டு வந்து மானத்த வாங்கிட்டாளே பாவி! ஊரும் ஒலகமும் ஒறவும் என்னக் காரித் துப்புமே!.
நா என்னசெய்வேன்? நா என்ன செய்வேன்?” முகத்திலறைந்து கொண்டு கதறும் பத்ரியை தடுக்கக்கூடத் தோன்றாமல் விக்கித்துப் போய் நின்றனர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள வந்திருந்த உறவினர்கள்.
‘எந்த தகப்பனுக்கும் இதுபோல் ஒருநிலை ஏற்படக்கூடாது!’ என்ற எண்ணமே சுற்றி நின்றவர்களின் மனதில் தோன்ற, அனைவரின் கண்களுமே பத்திரின் கதறல் பார்த்து கண்ணீரால் நிரம்பின.
அடுத்த அரைமணி நேரத்தில் பத்ரியின் அண்ணனும் அண்ணியும் பத்ரியின் மனைவி சுசித்ராவின் தம்பியும் தம்பி மனைவியும் மட்டுமே பத்ரிக்குத் துணையாய்த் தங்கிவிட, மற்ற உறவினர்கள் அனைவரும் உடனடியாய் அவரவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட பேச்சும் சிரிப்புமாய் இருந்த வீடு இறுக்கமாய் மாறிப்போனது.
மணி பத்தரை.
“பத்ரி நடக்கக் கூடாதது நடந்து போச்சு. நாம இத தாங்கிக்கிட்டுதான் ஆகணும்.
மானஸா செஞ்ச இந்த செயலால பாதிக்கப்பட்டது நாமதான்னாலும் நம்ம பிள்ளைக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்னு சந்தோஷ எதிர்பார்ப்போட காத்திருக்குற கோவர்த்தன் சாருக்கு இந்தக் கசப்பான விஷயத்த சொல்லிடுனும்ல.
அவுங்க வீட்டுக்கும் ஒறவுக்காரங்கள்ளாம் வந்திருப்பாங்கள்ள அந்தப் பையன் ஆதித்யாவுக்கும் எவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.
இந்தப்பொண்ணு கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சதுமே சொல்லித் தொலைச்சிருக்கலாமில்ல!
இப்ப நம்மோடு மட்டும் இல்லாம எத்தன பேருக்குக் கஷ்டம்?” புலம்பினார் பத்ரியின் அண்ணன் பரமேஸ்வரன்.
“ஆமா மாமா! பெரிய மாமா சொல்றாப்புல கோவர்த்தன் சாருக்கு தெரிவிச்சிடறது நல்லதில்லயா?” மிகுந்த வருத்தத்தோடு கேட்டார் பத்ரியின் மனைவி சுசித்ராவின் தம்பி சிவநேசன்.
மணி பத்தே முக்கால்.
கோவர்த்தனின் பங்களா பல அறைகள் கொண்ட மெகா சைஸ் பங்களா என்பதால் வந்திருந்த உறவினர்கள் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் குடும்பத்தோடு ஆளுக்கொரு அறைக்குச் சென்று படுத்தாயிற்று.
மனம் முழுதையும் கவலையும் வேதனையும் ஆக்ரமித்திருக்க தன் அறையில் யோசனையோடு அமர்ந்திருந்தான் ஆதி.
மானஸா தான் நிமிஷாவைப் பார்த்துப் பேசியது பற்றியும் நிமிஷாவின் தம்பி நிமிஷாவுக்கு நாளை நிச்சயதார்த்தம்!
ஐந்து லட்சம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால், நிமிஷா கடன் கொடுத்தவன் மகனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதால் நாளை நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகச் சொன்னபோது, தலையில் இடி விழுந்ததுபோல் அதிர்ந்து போன ஆதி செய்வதறியாது அமர்ந்திருந்தான்.
ஐந்து லட்சத்தோடு இன்னும் ரெண்டு லட்சத்தைச் சேர்த்து நிமிஷாவுக்குக் கடன் குடுத்தவன் மூஞ்சில எறிஞ்சிட்டு, நிமிஷாவ இந்த கல்யாண ஒப்பந்தத்திலிருந்து வெளியே கொண்டு வரும்படியும் மானஸா சொன்னதிலிருந்து முற்றிலுமாய் பரபரப்பாய் ஆகிப் போனது மனசு.
‘நாளை மதியத்துக்குள் திடீரென ஏழு எட்டு லட்சத்திற்கு எங்கே போவேன்? நாளை ஞாயிற்றுக்கிழமை பேங்க்லாம் லீவால்ல இருக்கும். பீரோவுல பத்துலெட்சமா வச்சிருக்கோம்.
அப்பான்னா வெச்சுருப் பாரு! அவர்கிட்டப் போயி நிமிஷாவோட கடனப்பத்திப் பேசி பணம் குடுங்கன்னு கேக்குறதா? அதவிட கேவலம் வேற என்ன இருக்கு? எதாவது செஞ்சே ஆகணும்.
நா நிமிஷாவ இந்தப் பிரர்ச்சனைலேந்து வெளியே கொண்டு வந்தே தீருவேன்! இனிமே அப்பாவாவது அம்மாவாவது யார் எதுத்தாலும் நிமிஷாவ நா இழக்கமாட்டேன்.
மானஸாவுக்கு இருக்குற தைரியம் எனக்கு இல்லாம போச்சே! நால்லாம் ஒரு ஆம்பள?
மானஸா ஒன்பது மணிக்கே ஃப்ளைட் ஏறிருப்பாங்க. தன்னோட அப்பாக்கு ஃபோன் பண்ணிருப்பாங்க.
பாவம்ல பத்ரி அங்கிள்! எந்த நிமிடமும் பத்ரி அங்கிள்டேந்து ஃபோன்வரும் அப்பாவுக்கு. நிச்சயதார்த்தம் நடக்காதுனு சொல்லிடுவாரு.
‘அப்பா என்ன செய்வாரு? படட்டும்! படட்டும்! என்னடா இப்பிடியாகிப் போச்சேன்னு வேதன படட்டும்!
நிமிஷாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் குடுக்காம மிரட்டி தன் ஃப்ரெண்டோட பொண்ண எனக்குக் கட்டி வைக்க ஏற்பாடு பண்ணாரு!
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா வேணும் இந்த வேதனையும் ஏமாற்றமும்!
ஆனா பத்ரி அங்கிள் பாவம் தான்! இப்பிடியொரு நெலம எந்தவொரு அப்பாக்கும் வரக்கூடாது.
மானஸாவும் பாவம்தான் அவுங்க நெலமய நெனச்சுப் பாத்தா அவங்க செஞ்சதும் சரின்னுதான் தோணுது!
பத்ரிஅங்கிள் பாவம்! மானஸா பாவம்னு நெனைக்கிறியே? ஒன் நெலமய யோசிச்சியா?
த பாரு! இனிமே ஒவ்வொரு நிமிஷமும் ஒனக்கு முக்கியமானது. மொதல்ல பணத்துக்கு என்ன செய்யுறதுன்னு யோசி. அப்புறம் மத்தத யோசிக்கிலாம்’ மனது அவசரப்படுத்தியது.
என்ன யோசித்தும் வழியொன்றும் புலப்படவில்லை ஆதிக்கு.
தனது உறவினர்களிடம் கேட்டால் வேறு வினையே வேண்டாம். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பிரச்சனை அது இது என்று இஷ்டத்துக்கும் கதை கட்டுவார்கள்.
அடுத்த நிமிடமே அப்பாவுக்கு ஃபோன் பண்ணி ஆதி பணம் கேட்டான்.
ஒங்ககிட்ட இல்லாத பணமா? ஏன் எங்கிட்ட கேக்குறான்! என்று கேட்டு அப்பாவுக்குத் தெரியப்படுத்தி விடுவார்கள்.
அப்பாவுக்குத் தெரியாமல் பணம் கொடுங்கள்! என்றால் என்மீது வேண்டாத விபரீத சந்தேகம் வரும்.
அய்யோ! இந்த ஞாயிற்றுக் கிழமையால் எத்தனைப் பிரச்சனை!’
தவித்துதான் போனான் ஆதி.
சட்டென ‘இப்பிடிசெஞ்சா என்ன? நம்ம ஃப்ரெண்ட் வசந்த் கிட்ட கேட்டுப் பாக்கலாமில்ல! அவனோட அப்பா எவ்வளவு பெரிய பிஸினெஸ் மேனா இருந்தாரு.
அவர் காலமானதும் வசந்த்துதானே பிஸினெஸப் பாத்துக்குறான். அவன்ட்ட இல்லாத பணமா? ஒறவவிட நட்பு எத்தனையோ தேவல!’
மணி பார்த்தான். பத்து ஐம்பது.
‘மணி பதினொன்னாகப் போவுது. இப்பப் போய்!’ என நினைத்தவனை ‘அவசியத் தேவை’ என்பதால் அவசரப்படுத்தி கேட்கும்படி உந்தியது மனது.
கோவையில் ஒருநிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கார்ஷெட்டில் காரை நிறுத்திவிட்டுக் காரிலிருந்து இறங்கிய வசந்த் வாட்சில் மணி பார்த்தான்.
‘மணி பதினொன்னாகப் போவுதா!’ என்று நினைத்தபடி கார்க் கதவை அறைந்து சாத்திவிட்டுத் திரும்பியவன்
செல்ஃபோன் அழைக்கவே ‘இப்ப போய் யாரு?’ என நினைத்தவாறே செல்லை எடுத்துப் பார்த்தபோது ‘ஆதித்யா!’ வசந்த்தின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன.
“டேய் ஆதி! என்னடா திடீர்னு ராத்திரி பதினோரு மணிக்கு ஃபோன் பண்ணுற? ரொம்ப நாளா ஆள் அட்ரஸையே காணும்? தப்பா என் நம்பர தொட்டுட்டியா?” சடசடவென்று கேள்வி கேட்டான் ஆதியின் நெருங்கிய தோழன் வசந்த்.
குரலில் நட்போடு கூடிய உரிமை இருந்தது.
“டேய்! டேய்! ரொம்ப கலாய்க்காதடா! நா மூடவுட்டா இருக்கேண்டா!”
“டேய்! என்னடா ஆச்சு? அதா சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க! மொரட்டு சிங்கிளா இருக்காதடான்னு சொல்றது. கேட்டாதானே?
ஆதி! 90-கிட்ஸ்கெலாம் இனிமே பொண்ணு கெடைக்காதுடா! சீக்கிரமா ஒருபொண்ணப் பாத்து தாலி கட்டுடான்னா கேக்குறியா பாரு!
2-கே கிட்ஸ்ஸெல்லாம் பூமர் அங்கிள்னு கூப்புடற அளவுக்கு வெச்சுக்காதன்னா நீ எங்கடா கேக்குற?” வசந்த் கிண்டலாய்ச் சொல்லி முடிப்பதற்குள் வெடித்தான் ஆதி.
“வசந்த் நீ இப்பிடி பேசுறத நிறுத்துறயா! நா வெச்சுடவா?” ஆதியின் குரலில் தெரிந்த கோபம் வசந்தை கிண்டலைக் கைவிட வைத்தது.
“ஸாரிடா! ஸாரிடா ஆதி! சொல்லு! சொல்லு எதாவது பிரச்சனையா?”
“ஒனக்குத் தூங்குற நேரம்! ஆனாலும் நா!”
“ஆதி! நா ஒன் ஃப்ரெண்டுடா! ஒன்னவிட எனக்குத் தூக்கமா பெரிசு?”
“வசந்த் விபரமா சொல்ல ஒரு பத்துநிமிஷம் வேணும்டா!”
“சொல்லுடா! இப்பிடீல்லாம் டைம்லா கேட்டுக்கிட்டு!”
சுருக்கமாய் அனைத்தையும் சொன்னான் ஆதி.
“அடக்கடவுளே! இவ்வளவா நடந்து போச்சு. நீ ஒன்னும் கவலப்படாத ஆதி. இதுமாதிரி சமயத்துல ஒன் பக்கத்துல நிக்காம அப்புறம் ஃப்ரெண்டுனு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லடா!
நாளைக்கு நீ எத்தன மணிக்கு வந்தாலும் பணத்தோட நானும் ஒன்னோட வரேன்.
அந்த நாய்ப்பய மொகத்துலப் பணத்த எறியிறோம். உன் அன்புக்காதலிய கடன்லேந்து மீக்குறோம்.
திங்கக்கெழம முகூர்த்த நாளுதான். அன்னிக்கு ரிஜிஸ்டர் ஆஃபீஸுல மாலமாத்தி நீங்க ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறீங்க!
பக்கத்து புள்ளையாரு கோவிலுல ஒன்னோட அவுங்களுக்குத் தாலி கட்டுற! நா மட்டும் வந்தா போதுமா? சதீஷ், செந்தில், அம்பி கணேசன் எல்லாரையும் வரச் சொல்லவா?
சதீஷ் வக்கீல்! செந்தில் செங்கல்பட்டுல போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்! நமக்கு தேவப்படுவாங்க.
அம்பி கணேசு நீ தாலிகட்டும் போது மந்ரம் சொல்லுவாண்டா ஆதி! இதெல்லாம் வேடிக்கைக்குச் சொல்லுல நிஜமாவே கேக்குறேன்.”
சோகத்திலும் சோகையாய் சிரித்தான் ஆதி.
“வசந்த்! கேட்டவுடனேயே கொஞ்சம்கூட தயங்காம அவ்வளவு பெரிய தொகைய கொடுத்து ஒதவருதா சொல்றியே அதாண்டா நீ! ரொம்ப தேங்ஸ்டா வசந்த். எனக்கு இப்ப எவ்வளவு தைரியமா இருக்கு தெரியுமாடா?”
“சரி! சரி! உருகி வழிஞ்சு ஓடிடாத! ஆதி ஒன்னச் சுத்தி ஃப்ரெண்ஸுங்க நாங்க இருக்கோம்டா! கவலப்படாத!”
“சரிடா வசந்த்! நன்றிடா!”
“சரிடா! பொறந்த வீட்டுலேந்து எம்பொண்டாட்டி மூணுமொற கூப்புடுட்டாங்க!”
“ஒன்னப் பத்தி எதுவுமே விசாரிக்காம என்னப் பத்தியே பேசிட்டேண்டா வசந்த்!”
“ஒன் விஷயம்தாண்டா இப்பக்கி பெரிய விஷயம்! எம் பொண்டாட்டி ஃபேமிலிவேயில இருக்காங்கடா! நா அப்பாவாகப் போறேண்டா!”
“கங்ராஜுலேஷன்ஸ் டா வசந்த்! ஒன் வொய்ஃபுக்கு என் வாழ்த்துக்கள்ள தெரிவிச்சேன்னு சொல்லிடு!”
“குட் நைட்!. காலேல வரேண்டா வெச்சுடறேன்!” பேச்சு முடிந்த போது மணி பதினொன்னே கால் ஆகியிருந்தது.
கண்களை மூடி ‘அப்பாடா!’ என்று கொஞ்சம் ஃப்ரீயாக மூச்சுவிட்ட ஆதியின் காதுகளில் கீழேயிருந்து வந்த அம்மாவின் சப்தம் துணுக்குறச் செய்தது.
பத்ரி அங்கிள் வீட்டிலிருந்து ஃபோன் வந்திருக்கும். மானஸா விஷயம் சொல்லப்பட்டிருக்கும்.
‘எதிர்பார்த்திருந்த விஷயம் தான் என்றாலும் நேரிடையாய் அனுபவிக்கும்போது ஏற்படும் அந்த கொடுமை!’ மனதில் திகில் ஏற்பட்டது.
‘எந்த நிமிடமும் தன்னை அழைப்பார்கள்!’ என்று தெரிந்திருந்த ஆதி தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.
‘எப்படி முகத்தை வைத்துக் கொள்வது? எப்படி நடிப்பது?’ என்றெல்லாம்கூட மனதுக்குள் ஒத்திகை நடத்திப் பார்த்துக் கொண்டான்.
அவன் நினைத்தபடியே கீழேயிருந்து அம்மா “ஆதி! ஆதி!” என்று கத்தி அழைக்கும் சப்தம் கேட்டது.
பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் ஆதி.
கீழே ‘கசமுச’வென்று நிறைய பேச்சுக் குரல்கள் கேட்டன. தாய்மாமா சண்முகசாமியின் குரல் ஓங்கி ஒலித்தது.
‘தட்தட்’டென்று யாரோ மாடிப்படிகளில் ஏறிவரும் சப்தம் கேட்டது. ‘படபட’வென்று கதவைத் தட்டும் சப்தம்.
வெகு இயல்பாய் இருப்பவன் போல் அரைத்தூக்கத்தில் விழிப்பவன்போல் நடித்தபடிக் கதவைத் திறந்தான்.
திருச்சி ஒன்றுவிட்ட சித்தப்பா பழனிவேல்.
“சித்தப்பா! என்ன சித்தப்பா? மணி பண்ணண்டு ஆகப்போவுது? தூங்கல?”
“ஐயோ! ஆதி! மோசம் போய்ட்டோம்டா ஆதி!”
“என்ன சித்தப்பா! யாருக்காச்சும் ஒடம்பு முடியலயா?” பரபரப்பதுபோல் நடித்தான்.
“இல்ல! இல்ல! நீ கீழ எறங்கி வா! முக்கியமான விஷயம்!”
“தோ! சித்தாப்பா!” ‘கிடுகிடு’வென்று கீழே இறங்கினான்.
ஹாலில் கால் வைத்தபோது அம்மா விமலாதேவி ஆதிக்கருகில் வேகமாய் நடந்து வந்து “ஆதி! நடக்கக் கூடாதது நடந்து போச்சுடா! அய்யோ! என்னடா ஆதி இப்பிடி ஆயிடுச்சு!” என்றபடி ஆதியைக் கட்டிப் பிடித்தார்.
அம்மாவை விலக்கினான் ஆதி.
அப்பா கோவர்த்தன் தலையைக் கைகளில் வைத்து மேஜையில் கைகளை ஊன்றியபடி அமர்ந்திருந்தார்.
அவரைச் சுற்றி நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த உறவுக்கார ஆண்கள் நிற்க, பெண்கள் குழுமி நின்று தங்களுக்குள் ‘குசுகுசு’வெனப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆதியைப் பார்த்ததும் அனைவரின் பார்வையும் அவன்மீது நிலைத்தது.
“என்னாச்சு? எல்லாரும் இந்த நேரத்துல தூங்காம ரொம்ப டென்ஷனா! யாருக்கு என்ன?” பிட்டு பிட்டாய்க் கேள்விகளை பயத்தோடு கேட்பதைப்போல் கேட்டான் ஆதி.
“ஆதி!” அம்மா விமலாதேவிதான் தான் கத்தினார்.
“அந்தப் பொண்ணு! அதாண்டா நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பொண்ணு மானஸா!
ஏற்கனவே அமெரிக்காகாரன கல்யாணம் பண்ணிடுச்சாம். ஒம்போது மணி ஃப்ளைட்டுல அமெரிக்காவுக்கு கெளம்பிப் போயிடுச்சாம் அய்யோ!”
“என்ன கண்ராவிடா இது! சனியம் புடிச்சவ பொண்ணு பாக்க போன அன்னிக்கே சொல்லிருக்கலாமுல்ல! நிச்சயதார்த்தத்துக்கு நாளு குறிச்சி, ஊரு ஒறவெல்லாம் அழச்சு நிச்சயதார்த்த ஹால் புக் பண்ணி நார அடிச்சிட்டாளே நம்மள!
பொண்ணு பாக்குற அன்னிக்கு ஜீன்ஸும் டீஷர்ட்டும் போட்டுகிட்டு தலைய விரிச்சி போட்டுகிட்டு நின்னப்பவே நெனச்சேனே!
இதெல்லாம் நம்ம வீட்டுக்கு சரிப்பட்டு வருமானு நெனச்சேனே? பொண்ணு பாக்குற அன்னிக்காவது பொடவ கட்டி, தல பின்னி, பூ வெச்சுகிட்டு வரக்கூடாதானு நெனச்சேனே?
மோசம் போய்ட்டோம்டா! எத்தன தடவ எம் புள்ளைக்கி ஃபோன் பண்ணி, ஃபோன் பண்ணி பேசுவா! நாசகாரி! நாசமா போறவ ஏமாத்திட்டாளே! பாவம் எம்புள்ள!
“அம்மா! நிறுத்துறீங்களா? ஒருபொண்ண இதுக்கும் மேல கேவலமா பேசாதிங்க! அவுங்க இப்பிடி செஞ்சதால எனக்கு எந்த பிரர்ச்சனையும் இல்ல!
அவுங்க தனக்கு மேரேஜ் ஆயிட்டுன்னு முன்னாடியே சொல்லிட்டா என்ன பிரச்சன வரும்னு நெனச்சாங்களோ?” அம்மா விமலாதேவியை மேற்கொண்டு கத்தாமல் அடக்கினான் ஆதி.
விடிகாலை மூன்று மணி வரை கூடிக்கூடி பேசினார்கள். கோவர்த்தனுக்கு மாறி மாறி ஆறுதல் சொன்னார்கள்.
அவரவர்கள் ஊருக்குக் கிளம்பிச் சென்றார்கள். வீடு ‘கல்’லென்று அமைதியாய் ஆனது.
ஆதி அப்பாவிடம் பேசவே இல்லை. பேச வந்த தாயிடமிருந்து விலகி மாடிக்குச் சென்றான்.
‘அப்பாவும் அம்மாவும் வேதனய நல்லா அனுபவிக்கட்டும். குற்ற உணர்ச்சி மனசக் குத்தட்டும்!’ என்று நினைத்தான்.
ஆனாலும் அவன் பெற்றவர்கள் மீது இயற்கையாய்க் கொண்டி ருக்கும் அன்பும் பாசமும் அவனை ‘அவர்கள் பாவம்!’ என்றும் நினைக்க வைத்தது.
ஆனாலும் ‘இவர்களால்தானே தனக்கும் நிமிஷாவுக்கும் இத்தனை பிரச்சனை!’ என்ற நினைப்பு அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவதைத் தடுத்தது. மாற்றி மாற்றி மனதில் எண்ணம் தோன்ற படுக்கையில் வந்து அமர்ந்தான் ஆதி.
‘தேங்ஸ் மிஸஸ் மானஸா! நீங்க சொன்னபடியே நிமிஷாவ மீட்கத் தேவைப்படும் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். எல்லாம் நாம திட்டமிட்டபடி முழுவதுமா நடந்து முடியணும்.
இன்னிக்கு இதோ ஞாயிற்றுக் கிழம விடிகாலை நாலு மணியாகுது. இன்னி நைட்டுக்குள்ள ஒங்குளுக்கு நல்லசேதி சொல்லுவேன் மிஸஸ் மானஸா!’ மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
சட்டென மனம் நிமிஷாவிடம் சென்றது.
‘பாவம்ல நிமிஷா! அவுங்க மனசு ரணமா ஆகியிருக்கும். ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லாம
மனசு முழுக்க வேதனைய சொமந்துகிட்டு., ப்ச்!
நிமிஷா! கவலப் படாதீங்க! நாளைக்கு ஒங்க நிச்சயதார்த்தம் நடக்காது. அதுக்குள்ள நா வந்து ஒங்கள மீட்டுடுவேன்ல!’ என்றது மனம்.
மணி நான்கு.
அலை கடலெனப் பொங்கும் மனதோடு படுக்கையில் அமர்ந்திருந்தாள் நிமிஷா. அழுதழுது கண்ணீரும் வற்றிவிட்டது.
தீக்ஷிதா, அவள் கணவன், மாமா, மாமா குடும்பம், சித்தப்பா, சித்தப்பா குடும்பம், ஒன்றுவிட்ட அத்தை,
அத்தையின் பெண் என்று பத்து பேர்களுக்குள்தான் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளவென்று இரவே வந்தாயிற்று.
மாமாவிடம் மட்டும் மனம் விட்டு அழுதாள் நிமிஷா.
“எனக்கும் புடிக்கிலம்மா இந்த ஏற்பாடு. எங்கிட்ட மட்டும் பணமிருந்தா வட்டிக்கடைக்காரன் கடன அடச்சு ஒன்ன மீட்டுடுவேன். கையாலாகதவனா போய்ட்டேனேம்மா!” என்று சொல்லிக் கலங்கிப் போனார்.
கருணாகரனுடன் பேசக்கூட இல்லை. தங்கை அம்புஜம்மாவைத் தாழ்ந்த குரலில் திட்டித் தீர்த்தார்.
இன்னும் யாரும் எழுந்திருக்க வில்லை.விடிகாலை உறக்கதிலிருந்தார்கள் அனைவரும்.
நிமிஷா ஒழுங்காய் சாப்பிட்டும் தூங்கியும் ஒருவாரத்துக்கு மேலிருக்கும். படுக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு மனமும் உடலும் ரொம்பவும் பலகீனமாய் இருந்தன.
கண்களை மூடித் திறந்தாள். சாப்பிடாமல் பட்டினி கிடந்ததால் உடல் பலவீனப்பட்டு இதயம் படபடத்து. ‘அமையப் போகும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டுமா?” என்று தோன்றியது.
இதுவரைக்குமான தன் வாழ்க்கை சினிமாவாய் மனதில் ஓடியது. வாழ்க்கை சினிமாவுக்குள் ஆதியும் வந்தான்.
ரணமாகிக் கிடந்த இதயம் சுருண்டு போனது. மனதின் ஓர் மூலையில் தேங்கிக் கிடந்த மிச்சக் கண்ணீர் உடைப் பெடுத்தது போல் ‘ஹக்!’ என்ற கேவலோடு வாய் திறக்க, கண்களிருந்து கண்ணீர் கொட்டியது.
கேவல் சப்த அழுகையாக வெடித்தது. பெரும் பிரயத்தனத்தோடு அழுகையின் சப்தத்தை அடக்கி மௌனமாய் விசும்பினாள் நிமிஷா.
கடைசியாய் ஆதியின் குரலை ஒருமுறைக் கேட்கவேண்டும் போல் தோன்றியது.
‘ம்கூம்! வேண்டாம் நிமிஷா!
ஆதி இனிமே உன் வாழ்க்கையில வர வாய்ப்பே இல்ல!
ஆதிய மறந்துடு! நீ ஆசப்படாலும் கேக்க முடியாது.
நீதான் ஆதியோட நம்பர ப்ளாக் பண்ணிட்டில்ல. அப்டியே நம்பர மறுபடி ஆக்டிவேட் பண்ணாலும் ஆதியோட வாட்ஸ்ஸப் எம்ட்டியாதா இருக்கும் என்றது மனசு.
“அய்யோ!” என்றாள் வாய்விட்டு.
ஒருமுறை தன்னைக் காரில் ஆதி செங்கல்பட்டு கொண்டு விடும்போது காரில் பாடியதும் தன்னையும் பாடும்படி கெஞ்சியபோது ‘அய்யோடி எனக்குலாம் பாடல்லாம் வராதுப்பா!’ என்று தான் சிரித்து மறுத்ததும் நினைவில் வந்தது.
“நீங்க பாடுவீங்களா ஆதி?” என்று கேட்டபோது, “ம். பாடுவனே!” என்று தொண்டையைக் கனைக்க, “இருங்க ஆதி ரெக்கார்ட் பண்ணுறேன்!” என்றபடி செல்ஃபோனில் வாய்ஸ் ரெகார்டரில் ஆதி பாடியபோது பாட்டை ரெக்கார்ட் பண்ணியது சட்டென ஞாபகம் வந்தது.
அவசர அவசரமாய் காதுகளில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டாள். இதுதான் ஆதியின் குரலை கடைசியாய் கேட்டகப் போகும் வாய்ப்பு எனப் பரபரத்தாள். செல்ஃபோனை ஆன்செய்து வாய்ஸ் ரெகார்டரை இயக்கினாள்.
ஆதி மறுபடியும் கனைத்தான். “நிமிஷா ரெடியா?” என்றான்.
“நிமிஷா!” என்று ஆதி அழைத்துப் பதிவாகியிருந்த அந்த அழைப்புக் காதில் விழ, வறண்டு போன கண்களிலும் இப்போது கண்ணீர் நிரம்பியது.
அடுத்த இரண்டு நிமிடங்கள் ஆதி பாடப் பாட “ஹையோ! ஆதி இப்டிக்கூடவா பாடுவாரு!” பாடும் அவனையே வெட்கமும் சந்தோஷமுமாய்த் தான் பார்த்துக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
லப்பர் பந்து படத்தில் இடம்பெறும் பாட்டுல்ல இது. ‘ஹரிஷ் கல்யாணும் சஞ்சனாவும். செம சாங்கில்ல!’ இதைவிட எனத் தான் நினைத்ததும் ஞாபகம் வந்தது.
சில்லாஞ்சிறுக்கியே
என்னக் கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிறுக்கியே
நெஞ்சுக்குள்ளார இருக்கியே
சொல்லாம எம்மனச
புழுஞ்சுப்புட்டியே
உள்ளாற ஓடிவந்து
ஒறைஞ்சுப்புட்டியே
கண்ணால மோதி
எம்முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாட வார
எ உசிரெடுத்து
இப்ப தாரேன்..
தேதி சொல்லேண்டி
சில்லாஞ்சிறுக்கியே
என்னக் கொல்லுற
‘அதற்குமேல் கேட்டால் வாய் விட்டுக் கதறிவிடுவோமோ!’ என்று செல்லை ஆஃப் செய்தாள். இயர் ஃபோனை எடுத்து எறிந்தாள்.
‘முடியாது! முடியாது! ஆதி இல்லாத வாழ்க்கைய நெனச்சுக்கூடப் பாக்க முடியாது. ஆதி ஒரு தப்பும் செய்யில! அவரு ஒங்களயேதா நெனச்சிக்கிட்டிருக்காருனு மானஸா சொன்னாங்களே!’
ஆதி என்னை நெனச்சிக்கிட்டுருக்குறதால இனிமே ஒன்னும் நடக்கப்போறுது இல்ல! நாதான் கடனுக்காக என்னையே அடமானமா வெச்சு எழுதிக்குடுத்துட்டேனே?
இவ்வளவு நடந்தும் நா ஏன் இன்னும் உயிரோட இருக்கணும்? யாருக்காக இருக்கணும்? செத்து விடுவோமா!’ என்று தோன்றியது..
‘மனம் அதுதான் சரி. அப்படியே செய்! அப்படியே செய்!’ என்று தூண்டி விரட்டியது.
உடலும் மனமும் பலவீனப்பட்டால் சைத்தான் மனதுக்குள் புகுந்து கொள்ளுமோ? அடிமையாக்கி ஆட்டி வைக்குமோ?
மனதுக்குள் புகுந்த சைத்தானோ ஏதோ ஒன்று செய்யச்சொல்லி வற்புறுத்தும் செயலுக்கு மனதாலும் உடலாலும் பலமற்றுப் போன நிமிஷா ஆட்பட்டுப் போனாள். வாழ்க்கைமீது அவளுக்கு ஏற்பட்ட விரக்தி அவளை விரட்டியது.
மெல்ல எழுந்தாள்; நிற்கவும் பலமில்லை; மெதுமெதுவாய் நடந்தாள். சப்தமின்றி வாசல் தாழ்ப்பாளை நீக்கினாள்.
வராண்டாவிலிருந்த செருப்பு ஸ்டேண்டின் கீழ்ப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முழுவதுமாய் நிரம்பியிருந்த இரண்டு எறும்புப் பவுடர் டப்பாக்களைக் கையிலெடுத்தாள் நிமிஷா.
(அடுத்தவாரம் தென்றல் தொட்டுவிடும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!