நரசிங்க முனையரைய நாயனார் – ஆரூராரின் வளர்ப்புத் தந்தை

நரசிங்க முனையரைய நாயனார் ஆரூரார் என அழைக்கப்படும் சுந்தர நாயனாரின் வளர்ப்புத் தந்தை ஆவார்.

இவர் அருவெறுக்கத் தக்க தோற்றத்துடன் திருநீறு அணிந்து வந்த நபரிடம் வேற்றுமை பாராது அன்பு காட்டிய அரசர் ஆவார்.

நடுநாடு என்பது பண்டைய தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி. அதில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி. அதனை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரைய நாயனார்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருகோவலூரில் இருந்த தெய்வீகன் என்ற அரசனுக்கு ஒளவையார் திருமணம் செய்து வைத்ததாகவும், தெய்வீகனின் வழித்தோன்றலில் வந்தவர் நரசிங்க முனையரைய நாயனார் என்றும் வரலாறு கூறுகிறது.

அவர் சிவனார் மீது பெரும்பக்தியும், திருவெண்ணீறு அணிந்த சிவனடியார்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருந்தார். தம் நாட்டில் இருந்த சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார்.

வீரத்தில் சிறந்த இவர் பல மன்னர்களைப் போரில் வென்றது மட்டுமல்லாமல், சிவனடியார்களை வணங்கி தொண்டுகள் பல புரிவதைப் பெரும் பேறாகக் கருதி வந்தார்.

திருநீறு அணிந்திருந்தால் இகழக் கூடாது

திருவாதிரை திருநாளன்று இறைவனைப் போற்றி வழிபட்டு, சிவனடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பார். அவற்றுடன் அவர்களுக்கு நூறு பொன்னையும் கொடுத்து மகிழ்வார்.

திருநீறு அணியும் சிவனடியார்களுக்கு விரும்பிய‌தைக் கொடுத்து, வழிபாடு செய்து பெரும் பொருள் கொடுத்தமையால் அவரை நாடி வரும் அடியார்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் அடியார் வழிபாட்டின் போது, வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் காம நோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் வெண்ணீறு அணிந்து இருந்தார்.

அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார்.

அதனைக் கண்ட நரசிங்க முனையரையர், ‘எத்தன்மையானாராலும், திருநீறு அணிந்திருந்தால் அவர்களை இகழக் கூடாது’ என்று எண்ணி அவரை எதிர்கொண்டு அழைத்து வணங்கினார்.

முறைப்படி அவரை வரவேற்று உபசரித்து வேண்டுபவற்றை அளித்து அத்துடன் மற்றவர்களுக்கு வழங்கியதைவிட இருமடங்காக அதாவது இருநூறு பொன்னை தானமாக வழங்கினார்.

வழிபாட்டிற்கு வந்திருப்பவர் திருநீறு அணிந்திருந்த காரணத்தினால், அவரின் மற்ற குறைகளைக் காணாது, சிவனடியாராகக் கருதி வழிபட்டதால் மேன்மை பொருந்தியவராகக் நரசிங்க முனையரைய நாயனார் கருதப்படுகிறார்.

சுந்தரரின் வளர்ப்புத் தந்தை

நரசிங்க முனையரையர் திருநாவலூரில் வீதியில் செல்லும்போது அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஆரூராரைக் கண்டார். ஆரூராரை தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

ஆரூராரின் தந்தையான சடையனாரைச் சந்தித்து தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார் நரசிங்க முனையரையர். சடையனாரும் நரசிங்கரின் விருப்பத்திற்கு உடன்பட்டு சுந்தரரை தத்துக் கொடுத்தார்.

சுந்தரர் தம்முடைய திருமணப் பருவம் வரை நரசிங்க முனையரைய நாயனாரின் வளர்ப்பில் திருநாவலூரில் இருந்து பின்னர் இறைவனாரால் ஆட்கொள்ளப்பட்டார்.

நரசிங்க முனையரைய நாயனார் குருபூஜை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

திருநீறு அணிந்தவரை சிவனடியாராக மட்டும் கருதி அவரின் மற்ற குறைகளைக் காணாது வழிபட்ட நரசிங்க முனையரைய நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.