நின்றசீர் நெடுமாற நாயனார் – சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பாண்டிய மன்னன்

நின்றசீர் நெடுமாற நாயனார் சமண சமயத்தலிருந்து சைவ சமயத்திற்கு மாறிய பாண்டிய மன்னன் ஆவார்.

இவருக்கு ஏற்பட்ட வெப்பு நோயையும் கூனையும் திருஞானசம்பந்தர் இறைவனை வேண்டிப் பதிகம் பாடி போக்கினார்.

இவரின் மனைவியான மங்கையர்கரசியாரும் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுவது சிறப்பு ஆகும்.

மங்கையர்கரசியார் மற்றும் குலச்சிறையாரின் பெரும் முயற்சியாலும் திருஞானசம்பந்தரின் அருளாலும் சமணராக விளங்கிய நின்றசீர் நெடுமாறர் சைவராகினார்.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த புகழ் பெற்ற பாண்டிய மன்னர்களில் ஒருவர் அரிகேசரி. இவருக்கு பிறப்பிலேயே முதுகில் கூன் இருந்தது.

இவர் திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன் போன்ற பெயர்களில் அறியப்படுகிறார். அரிகேசரி பராங்குசன் என்றும் இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

சமண சமயத்தைச் சார்ந்த பலர் இவரைச் சூழ்ந்து கொண்டு போதனை செய்ய இவர் சமண சமயத்தை தழுவினார். ‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே’ என்பதற்கு ஏற்ப பாண்டிய மக்களும் சமண சமயத்தைத் தழுவினர்.

இவருடைய மனைவியும், சோழ மன்னனின் மகளுமான மங்கையர்கரசியார் சைவத்தின் மீதும், ஆலவாய் அண்ணலின் மீதும் மாறாத பற்றுக் கொண்டவராய் விளங்கினார்.

அரிகேசரியாரின் மந்திரியான குலச்சிறையார் சிவனாரின் மீதும் சிவனடியார்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்தார்.

இவர்கள் வாழ்ந்த காலத்தில் திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சிவாலயங்கள் தோறும் சென்று பதிகங்கள் பாடி சைவத்திற்கு பெரும் தொண்டு ஆற்றி வந்தார்.

இதனை அறிந்த குலச்சிறையாரும் மங்கையர்கரசியாரும் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்து சைவத்தை தழைக்கச் செய்ய விழைந்தனர்.

திருஞானசம்பந்தரும் அவர்களின் அழைப்பினை ஏற்று மதுரைக்கு எழுந்தருளினார். அவரை வரவேற்ற குலச்சிறையாரும், மங்கையர்கரசியாரும் மதுரையில் தங்க வைத்தனர்.

இதனை அறிந்த சமணர்கள் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த இடத்திற்கு தீ வைத்தனர். ‘மக்கள் செய்த தவறு மன்னனைச் சாரும் என்பதால் தீ சென்று மன்னனைப் பற்றற்றும்’ என்று கூற அது வெப்பு நோயாக மன்னனைப் பற்றியது.

வெப்பு நோயால் தகித்த மன்னனை காப்பாற்ற திருஞானசம்பந்தரால் முடியும் என்பதை மங்கையர்கரசியார் கூற, மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

மன்னனின் வலதுபக்க நோயை திருஞானசம்பந்தரும், இடதுபக்க நோயை சமணர்களும் தீர்க்க ஒப்பந்தமானது.

திருநாவுக்கரசர் திருநீற்றுப்பதிகம் பாடி மன்னனின் வலப்பக்க நோயைக் குணப்படுத்தினார். சமணர்களால் அது இயலாது தோற்றுப் போயினர்.

அதன்பின்பு நடந்த அனல் வாதத்திலும் சமணர்கள் தோற்றுப் போயினர். அதிலும் திருப்பதியடைந்தாத சமணர்கள் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர்.

புனல்வாதத்தில் திருஞானசம்பந்தர் எழுதிய பாடல்கள் அடங்கிய ஏடானது, வைகை ஆற்றினை எதிர்த்து செல்கையில் எல்லோரும் அதனை ஆர்வமாகப் பார்த்தனர்.

அதனை கூன்பாண்டியனும் அவனை அறியாமல் நிமிர்ந்து பார்த்தான். ஆவனுடைய பிறவிக்கூன் நிமிர்ந்தது. ஆதலால் அம்மன்னன் நின்றசீர்நெடுமாற பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். அதன்பின்பு அவன் சைவசமயத்தைத் தழுவினான்.

ஒருமுறை வடநாட்டு மன்னன் ஒருவனை திருநெல்வேலியில் போரில் வென்றான். அதனாலே சுந்தரரால் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான்.

சைவத்தை பின்பற்றி சிறப்பாக மதுரை ஆண்ட நின்றசீர் நெடுமாற நாயானார் இறுதியில் நீங்காத இன்பமான வீடுபேற்றினை சிவனருளால் கிடைக்கப்பெற்றார்.

நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூஜை ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

நின்றசீர் நெடுமாற நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.