நிலை – கவிதை

இந்த விளையாட்டில்

அவன் பங்கு பெறவில்லை

பங்கு பெறாதவன் பாத்திரத்தில்

அவன் விளையாடிக் கொண்டிருந்தான்

கடிகாரத்தின் உள்ளே இருக்கும்

இயந்திரத்தின் முட்கள்

நேர்த்தியாக நேரத்தைக் காட்டியது

அவன் அவனுக்கான

ஒரு பாதையில் நடந்தான்

ஒரு செடியை வளர்த்தான்

இங்கே அங்கே என்று

போய் வந்தான்

ஆழத்தில் இறங்கினான்

மறைந்து போனான்

இன்னும் இன்னும் என்று

எல்லாவற்றையும் பார்த்தான்

நிதானித்தான்

சாகாமலிருந்தான்

கிடைத்ததைப் பயன்படுத்தினான்

காலம் அவனை

அழைத்துச் செல்லும்

பயணத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான்

எல்லாவற்றையும் விட்டு விட்டான்

திசைக்கு ஒருமுறை திரும்பும்

தெப்பத்தைப் போல்

கற்பனையில் கரைந்து போனான்

விளக்காக எரியும்

அவனது பார்வையில்

நனையும் மனதில்

அவன் கண்காணிக்கப்பட்டான்

அவன் தயாராக இருந்தான்

புஷ்பால ஜெயக்குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.