படிப்பது எப்படி என்று தெரிந்து படித்தால், தேர்விலும் வாழ்கையிலும் மிகப் பெரிய வெற்றியடையலாம்!
சமீபத்தில் நடந்த ஒரு மாணவர் சந்திப்பு.
அந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரிடையாக மாணவ மாணவியர் பங்கு பெற்ற, ஒரு விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘மேலே உச்சத்தில் உன்னைச் சந்திக்கிறேன்‘ என்பதாகும்.
ஒரு ஆசிரியனாக எனது உரையில் ‘கல்வி ஒன்றே அற்றம் காக்கும் கருவி’, எனவே நீ உயர்ந்து உச்சத்தை அடைவதற்கு ஏதுவாக, இப்போது உனக்கு கிடைத்து இருக்கும் கல்வி கற்கும் இந்த வாய்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்திப் பேசினேன்.
நிகழ்ச்சியில் விவாதித்த மற்ற பேராசிரியர்களும் வாழ்க்கையில் வாகைசூட நன்றாகப் படிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியே பேசினர்.
உணவு இடைவேளையின்போது ஒரு மாணவர், “சார்! நீங்க மட்டுமல்ல எங்க வீட்டிலும் அப்பா, அம்மா மற்றும் மூத்த உறவினர் எல்லோருமே ‘படி படி’ என்றுதான் சொல்லுகின்றீர்கள்.
ஆனால் ‘என்ன படிக்கணும்?’ அப்படிங்கிறத தீர்மானிக்கின்ற நிலையில் நாங்கள் இல்லை!” என்ற ஒரு கருத்தினை முன் வைத்தான்.
“அந்தக் காலத்தில் இருந்த குருகுலக் கல்விமுறையில் ஒரு மாணவன் என்ன படிக்க வேண்டும்? மேலும் அவனுக்கு என்ன சொல்லித் தரப்பட வேண்டும்? என்று தீர்மானிக்கும் பொறுப்பு குருமார்களிடம் இருந்தது.
அவர்களும் மாணவரின் திறமைகளுக்கேற்ற கல்வியினை மாணவர்களுக்கு போதித்தார்கள். அந்தக் காலத்தில் கற்பவர் மிகவும் குறைவு. மேலும் கற்பிப்போர் மிகமிக அரிது. ஆனால் இன்று நிலைமை வேறுவிதமாக உள்ளது.
பள்ளிக் கல்வி அனைத்து மாணவருக்கும் ஒரே மாதிரியாக அமையப் பெற்றிருந்தாலும் அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்விப் படிப்பை தேர்வு செய்வது யார் கையில் உள்ளது? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
இதில் பெற்றோர்களின் விருப்பம் முன்னிலைப் படுத்தப்பட்டாலும், உண்மையிலே உயர்கல்வியினை தேர்ந்தெடுக்கும் உன்னத காரணியாக இருப்பது பள்ளி மேல்நிலைத் தேர்வில் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள்தான்.
பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களும் இன்றைய தினம் தனது படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய அவர்தம் நண்பர்களது விருப்பத்தையும் ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
எனவே பிடித்த படிப்பு அல்லது கிடைத்த படிப்பு எதுவென்றாலும், அதனை ஆர்வமுடன் படித்தால், தேர்விலும் வாழ்கையிலும் மிகப் பெரிய வெற்றியடையலாம்!” என்று நான் கூறினேன்.
அந்த மாணவன் “சரி சார்! அப்படின்னா எவ்வாறு படிக்கிறது? என்று சொல்லுங்க சார்.” என்றான்.
“படிக்கிறதுல ஐந்து படி இருக்குது. முதல் படி வாசல்படி! அதாவது ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு ரவிந்திரநாத் தாகூர் தனது மாணவர்களிடம் கேட்ட ‘நான்கு தவளைகள் விடுகதை’ எனது நினைவுக்கு வருகிறது.
நான்கு தவளைகள் விடுகதை
அதாவது ஒரு குளத்தில் நான்கு தவளைகள் ஓன்றாக வசித்து வந்தன.
குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் இவை நான்கும் குளத்தின் கரையிலேயே வாழ்ந்து வந்தனவாம்.
ஒருநாள் நல்ல மழை. குளத்தில் கொஞ்சம் நீர் பெருகியது.
தவளைகள் பொதுவாக நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்கள். மேலும் அவை நீரில் வாழ்வதையே விரும்பக் கூடியவை.
எனவே குளத்தில் தண்ணீர் பெருகியதைப் பார்த்ததும் முதலில் ஒரு தவளை “நான் நீரில் குதிக்கப் போகிறேன்” என்றதுவாம்.
இரண்டாவது தவளையும் “நானும் தண்ணீரில் குதிக்கப் போகிறேன்” என்றதுவாம்.
மூன்றாவது தவளை எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததுவாம்.
நான்காவது தவளை “நானும் தண்ணீரில் குதிக்கப் போகிறேன்” என்றதுவாம்.
இதனை மாணவர்களிடம் தெரிவித்த ரவிந்திரநாத்தாகூர், மாணவர்களை பார்த்து, “இப்போது குளத்தின் கரையில் எத்தனை தவளைகள் இருக்கும்?” என ஒரு கேள்வி கேட்டார்.
சில மாணவர்கள் ஒரே சத்தமாக, “மூன்று தவளைகள் குளத்தில் குதித்தபடியால் மீதமுள்ள ஒரு தவளை மட்டுமே கரையில் இருக்கும்” என்றனர்.
உடனே தாகூர், “அது எப்படி? அந்த மூன்று தவளைகளும் தண்ணீரில் குதிக்க நினைத்தன. ஆனால் நீரினுள் குதிக்கவில்லையே! எனவே நான்கு தவளைகளும் குளத்தின் கரையில் தான் இருக்கும்” என்றாராம்.
இதுபோலத்தான் ‘படிக்க வேண்டும்! படிக்க வேண்டும்!’ என்று நினைத்தால் மட்டும்போதாது, அதனை செயலாக்கும் வண்ணம் படிக்க ஆரம்பிக்க வேண்டும். எனவேதான் முதல்படி வாசல்படி” என்று கூறினேன்.
இதைக்கேட்டதும் இப்போது உங்களுக்கு ‘அடுத்த இரண்டாவது படி என்ன?’ என்று கேட்கும் ஆவல் தோன்றும். அதனை அடுத்தவாரம் சொல்கின்றேனே!
( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!