இன்றைக்கு பரோட்டா என்பது நிறைய மக்களுக்கு பிடித்த உணவாக உள்ளது.
கடைகளில் தயார் செய்யும் பரோட்டாவை சாப்பிடாமல், வீட்டில் பரோட்டாவை தயார் செய்து உண்ணுவது ஆரோக்கியமானது.
சுவையான ஆரோக்கியமான பரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 200 கிராம்
முட்டை – 2 எண்ணம்
பால் – கால் டம்ளர்
வெள்ளை சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
கடலை எண்ணெய் – 100 கிராம்
செய்முறை
மைதா மாவினை சலித்துக் கொள்ளவும்.
பாலினை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.

சலித்த மைதா மாவினை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, வெள்ளைச் சர்க்கரை சேர்த்து ஒருசேர கலந்து கொள்ளவும்.

அதனுடன் காய்ச்சி ஆறிய பால், முட்டை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும்.

பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, இறுதியில் 50 கிராம் கடலை எண்ணெய் சேர்த்து, ஒரு சேர மாவினைத் திரட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பிசைந்த மாவினை வைத்து, ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் ஊறவிடவும்.
3 மணி நேரம் கழித்து மாவினை மறுபடியும் பிசைந்து, எலுமிச்சை அளவு உள்ள உருண்டைகளாக திரட்டிக் கொள்ளவும்.
திரட்டிய உருண்டைகளின் மீது கடலை எண்ணெயை நன்றாகத் தடவி, 1 மணி நேரம் ஊறவிடவும்.

ஒருமணி நேரம் கழித்து உருண்டையில் எண்ணெய் தேய்த்து, மிகவும் மெல்லிதாக வட்டமாகத் தேய்த்துக் கொள்ளவும்.

வட்டமாக தேய்த்த மாவினை செவ்வக வடிவில் மடித்துக் கொள்ளவும்.

செவ்வகத்தின் ஒருமுனையைப் பிடித்துக் கொண்டு லேசாக தட்டில் தட்டவும்.
மாவானது நீளமாக வரும். மறுமனையைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டவும்.

பின்னர் படத்தில் காட்டியபடி வட்டமாகச் சுருட்டவும்.


பின்னர் எண்ணெயை வட்டமாக சுருட்டிய மாவின் இருபுறமும் தேய்த்து கட்டையால் வட்டமாக விரிக்கவும்.

இவ்வாறாக எல்லா மாவினையும் செய்யவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் விரித்த மாவினைப் போட்டு, அடுப்பினை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும்.


வேக வைத்து எடுத்தவைகளை தட்டில் போட்டு கைகளால் இருபுறமும் தட்டவும்.
சுவையான பரோட்டா தயார்.

இதனை பிளைன் சால்னா சேர்த்து உண்ண மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கடலை எண்ணெய்க்குப் பதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பரோட்டா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!