பால்கோவா எல்லோருக்கும் பிடித்தமான இனிப்பு ஆகும். இது பாலும், சர்க்கரையும் சேர்த்து செய்யப்படும் அசத்தலான இனிப்பு ஆகும்.
பாகு நிலையில் உள்ள இந்த இனிப்பை, வீட்டில் விருந்தினர்களின் வருகையின் போதும், விழாக் காலங்களிலும் இதனை செய்து அசத்தலாம்.
வீட்டில் இதனைச் செய்வதால் இது சத்தானதும், சுவை மிகுந்தும் இருக்கும்.
சுவையாக எளிய வகையில் வீட்டில் எப்படி செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – ஒரு லிட்டர்
சீனி (வெள்ளைச் சர்க்கரை) – 100 முதல் 150 கிராம் வரை
எலுமிச்சம் பழம் – ½ பழம் (நடுத்தர அளவு)
நெய் – 2 டீஸ்பூன்
பால்கோவா செய்முறை
முதலில் அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்ச வேண்டும்.
பாலில் கொதி வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கரண்டி போட்டு கிண்ட வேண்டும்.
(கிண்டாமல் விட்டால் பால் அடிப்பிடித்து விடும். பால்கோவாவின் சுவையும், நிறமும் மாறிவிடும்.)
10 நிமிடங்கள் கழித்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும். எலுமிச்சை ஊற்றியதும் பால் திரிந்து தண்ணீர் விடும்.
பின்னர் 10 நிமிடங்கள் சிறுதீயில் வைத்து கிளற வேண்டும்.
தண்ணீர் நன்கு வற்றியதும் நெய் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
பின்னர் அதனுடன் சீனியைக் (வெள்ளைச் சர்க்கரை) போட்டுக் கிளற வேண்டும்.
கலவை தளதளவென என்று வந்ததும் இறக்கி விடவும்.
சுவையான பால்கோவா தயார்.
குறிப்பு
பால்கோவாவை எலுமிச்சம் பழம் சேர்க்காமலும் தயார் செய்யலாம்.
பாலில் ஆடை படரும் போது அதனை எடுத்து பாலில் போட்டு ஒருசேரக் கிளறவும்.
பாலில் தண்ணீர் சேர்க்காமல் பாலைக் காய்ச்ச வேண்டும்.
ஆறியவுடன் பால்கோவாக் கலவையானது கெட்டியாகும். எனவே பால்கோவாக் கலவை மிகவும் கெட்டியாகும் முன்பு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
எருமைப் பாலில் செய்யும் பால்கோவானாது மிகவும் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!