பாவேந்தர் காவடிச்சிந்து

பாரதிதாசன்

தூங்குந் தமிழினத்தை ஒங்கி உயர்த்திடவே

தோற்பறை எனத்தமிழ் மொழியினைச் சாற்றிய சித்தனே! – அருந்

தூய தமிழரை உலகுக்குக் காட்டிய புத்தனே!

வீங்கு வியனிலத்தில் தீங்கு பலநிறத்தில்

வீரமே பாட்டென வெறிமிகுத் தாருயிர் ஊட்டினான் – நம்

வேட்டி மடிப்பிற்கு வேர்த்திடும் பகையெனக் காட்டினான்

சீரார் தமிழமுதைப் பேராப் பெருமையொடு

திருமிகு நூற்பல செவ்வறம் ஒதிட செப்பினான் – அவன்

சிந்தை வடித்ததை நேர்செய ஆளிலா ஒப்பிலான்

ஊரார் பலர்தொடரத் தேரின் வடம்வளர

உலகினில் முதல்முறை பாவலர் பரம்பரை வந்ததே – அவன்

ஊன்றி விதைத்தவை வானிலே தேன்மழை சிந்துதே

மன்னா திமன்னரெல்லாம் மண்ணில் புதைந்திருக்க

மன்றினில் பாவலன் மாபெரு புகழொடு வாழ்கிறான் – அவன்

மாலை நிலவினும் ஒளியொடு தனிவெளிச் சூழ்கிறான்

செந்நாப் பிறந்துவந்த தன்னே ரிலாததமிழ்

செம்மையைச் சீரடி பாட்டினில் சொல்லவும் ஏலுமோ? – அவன்

செய்ய திருவடி அளந்திட உலகிடம் கொள்ளுமோ?

தானே பலக்கருவை ஈணும் அணுப்பொருளாய்

தனித்தமிழ் நாட்டினர் துலங்குதல் அறிவென ஊட்டினான் – தாய்த்

தமிழை உயர்த்துதல் தகுவழி நமக்கெனக் காட்டினான்

தேனே எனமொழிந்த ஊனக் கருத்தியலைச்

செந்தமிழ் மாந்திய எந்தமிழ் நாட்டினர் ஏற்பதோ? – சில

சிறுமை யுளத்தினர் முன்றமிழ்ப் படையினர் தோற்பதோ?

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி:  8667043574

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.