தூங்குந் தமிழினத்தை ஒங்கி உயர்த்திடவே
தோற்பறை எனத்தமிழ் மொழியினைச் சாற்றிய சித்தனே! – அருந்
தூய தமிழரை உலகுக்குக் காட்டிய புத்தனே!
வீங்கு வியனிலத்தில் தீங்கு பலநிறத்தில்
வீரமே பாட்டென வெறிமிகுத் தாருயிர் ஊட்டினான் – நம்
வேட்டி மடிப்பிற்கு வேர்த்திடும் பகையெனக் காட்டினான்
சீரார் தமிழமுதைப் பேராப் பெருமையொடு
திருமிகு நூற்பல செவ்வறம் ஒதிட செப்பினான் – அவன்
சிந்தை வடித்ததை நேர்செய ஆளிலா ஒப்பிலான்
ஊரார் பலர்தொடரத் தேரின் வடம்வளர
உலகினில் முதல்முறை பாவலர் பரம்பரை வந்ததே – அவன்
ஊன்றி விதைத்தவை வானிலே தேன்மழை சிந்துதே
மன்னா திமன்னரெல்லாம் மண்ணில் புதைந்திருக்க
மன்றினில் பாவலன் மாபெரு புகழொடு வாழ்கிறான் – அவன்
மாலை நிலவினும் ஒளியொடு தனிவெளிச் சூழ்கிறான்
செந்நாப் பிறந்துவந்த தன்னே ரிலாததமிழ்
செம்மையைச் சீரடி பாட்டினில் சொல்லவும் ஏலுமோ? – அவன்
செய்ய திருவடி அளந்திட உலகிடம் கொள்ளுமோ?
தானே பலக்கருவை ஈணும் அணுப்பொருளாய்
தனித்தமிழ் நாட்டினர் துலங்குதல் அறிவென ஊட்டினான் – தாய்த்
தமிழை உயர்த்துதல் தகுவழி நமக்கெனக் காட்டினான்
தேனே எனமொழிந்த ஊனக் கருத்தியலைச்
செந்தமிழ் மாந்திய எந்தமிழ் நாட்டினர் ஏற்பதோ? – சில
சிறுமை யுளத்தினர் முன்றமிழ்ப் படையினர் தோற்பதோ?

பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!