பிரட் மசாலா எளிதாகச் செய்யக் கூடிய அருமையான சிற்றுண்டி. இதனை மாலை நேரத்தில் செய்து உண்ணக் கொடுக்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை உணவாகவும் இதனைக் கொடுத்து அனுப்பலாம்.
வீட்டில் உள்ள மசாலாப் பொருட்களை வைத்து செய்யப்படுவதால் இது சுகாதாரமானது. மசாலா சுவை விருப்புபவர்கள் இதனுடைய ரசிகர்களாக மாறி விடுவர்.
இனி எளிய வகையில் சுவையான பிரட் மசாலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
பிரட் மசாலா தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் – 10 எண்ணம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (பெரியது)
காரட் – 1 எண்ணம் (பெரியது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
கொத்தமல்லி இலை – 2 கொத்து
மசாலா பொடி – 2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 ¼ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
சீரகம் – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
பிரட் மசாலா செய்முறை
பிரட்டை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை அலசி பொடியாக வெட்டவும்.
காரட்டை அலசி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
மல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.
அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
அதில் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி ¼ டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
மசாலாப் பொருட்களின் பச்சை வாசனை போனதும் சதுரமாக்கிய பிரட் துண்டுகளைச் சேர்த்து ஒரே சேர கிளறவும்.
அடுப்பினை அணைத்துவிட்டு நறுக்கிய கொத்த மல்லி இலையைத் தூவவும்.
சுவையான பிரட் மசாலா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் முட்டை கோஸ், பச்சை பட்டாணி, குடைமிளகாய் சேர்த்து மசாலா தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் சாட் மசாலா அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து மசாலாவைப் பரிமாறலாம்.
விருப்பமுள்ளவர்கள் பிரெட் துண்டுகளை வெண்ணெயில் லேசாக வதக்கி பின்னர் மசாலாவில் சேர்க்கலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!